Tuesday, December 31, 2013

அந்தோ மறைந்தார் நம்மாழ்வார்- என்றும் அனைவர் மனதிலும் அவர்வாழ்வார்!




அந்தோ மறைந்தார் நம்மாழ்வார்- என்றும்
அனைவர் மனதிலும் அவர்வாழ்வார்!
தந்தார் இயற்கைச் விவசாயம்-அழியாத்
தரமுடன் வாழ்ந்திட நம்தேயம்!

காலன் அவரையும் விடவில்லை –இயற்கை
காலத்தால் நடப்பதாம்! ஏதுஎல்லை!
ஞாலம் வாழ்ந்திட வழிகண்டார் –எடுத்து
நாளும் நமக்கதை அவர்விண்டார்

வாழ்நாள் முழுவதும் அதற்கென்றே-அவர்
வாழ்ந்து பெற்றது புகழொன்றே!
வீழ்நாள் நமக்கும் வரும்ஒன்றே –அவர்
விட்டதைத் தொடர்வோம் நனிநன்றே


புலவர் சா இராமாநுசம்

 





Monday, December 30, 2013

அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\ ஆத்மி கட்சி திவாலே!






அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\  
    ஆத்மி கட்சி திவாலே!
வந்தார் ஊழல் ஒழிக்கவென –கிழிய
    வாயும் ஒலிக்க முழக்கமென!
தந்தார் மக்களும்  ஓட்டுகளை-வீசித்
     தள்ளினர் இலஞ்ச  நோட்டுகளை
அந்தோ!! உண்மை! அறியாரே – நாளும்
    அடுத்தென விரைவில் புரிவாரே!

பக்கா ஊழல் துணையாக –இன்று
    பதவி ஏற்றார் பிணையாக
முக்கா கிணறு  தாண்டுவதா –இவர்
    முடிவு நாட்டுக்கு வேண்டுவதா!!!?
பாழாய் கிணற்றில் வீழ்ந்துவிட்டார் –ஏனோ
   பதவி ஆசையா !! தாழ்ந்துகெட்டார்
வாழா    வெட்டி ஆட்சிக்கே –முதல்வர்
    வந்தார் இவரென  சாட்சிக்கே

         புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 26, 2013

ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான் எழுதிட எழுதிட அகம்நாளே!



ஏனோ தொடங்கினேன் முகநூலே-நான்
எழுதிட எழுதிட வலைநாளே!
தானே வந்திடும் பதிவுபல-வர
தொல்லை தந்திடும் பதிவுசில!
தேனாய் இனித்திடும் சிலவேளை
தேளாய் கொட்டும் பலவேலை!
ஆனால் விடவும் இயலவில்லை-எனினும்
அஞ்சுதல் வாழ்வில் பயிலவில்லை!

நித்தம் எழுதியே வருவேனே – உலகில்
நிலையல வாழ்வு அறிவேனே!
சித்தம் மகிழ மறுமொழியும்-உடன்
செப்பிட விருப்பம் தருமொழியும்!
சத்தென என்னை வாழ்விக்கும்-மருத்துவ
சக்தியாய் மேலும் ஊக்குவிக்கும்!
வித்தென நாளும் வருவீரே-அதுவே
விளைந்திட விருப்பம் தருவீரே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 25, 2013

ஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்






ஏசுவே மீண்டும் வாரும்
   இங்குள்ள  நிலையைப்  பாரும்
பேசுவ அனைத்தும்  பொய்யே
   பிழைப்பென! காண்பீர்  மெய்யே!
கூசுவ அரசியல்  போக்கே!
    குறைகண்டே  விரைந்தே நீக்க!
தூசிவ! துடைக்க  வாரும்!
    துயர்போக எம்மைக்  காரும்!

கருணையின்  வடிவம்  நீயாய்
   காப்பதில் அன்புப்  தாயாய்
பெருமையும் பெற்றவர்  ஆக,
    பேசுதல் நிலையாய்ப்  போக!
உருவமே பெற்று  வருவீர்
    உலகினைக்  காத்தே அருள்வீர்!
தருணமே  இதுதான்!  ஆகும்!
    தவறிடின் ! அழிந்து போகும்!

             புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 23, 2013

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!



நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!
காயா பழமா விளையாட்டே-அந்தோ
கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய்ப் பிரிந்தாரும்!
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்!

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே!
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்!
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்!
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும் போகட்டும்!

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்!
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்!
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல்!
இங்கே நானும் எழுதுவ-என்னுள்
இருப்பதும் நீயா நானன்றோ

புலவர் சா இராமாநுசம்

Saturday, December 21, 2013

அன்புப் பெரியவர் ,ஐயா G.m பாலசுப்பிரமணியம் விருப்பத்திற்கு ஏற்ப மயில் பற்றிய கவிதை





 சிறுவன்

மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்

மயில்

வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்

சிறுவன்

அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ

மயில்

குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!

                   புலவர்  சா  இராமாநுசம்
       

Friday, December 20, 2013

நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்!



ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் ஒன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது இன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்கும்-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்கும்
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறவா!? இவ்வாறே
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு! சரியெண்ணில்!
            
                    புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 18, 2013

தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால் தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!



தோற்றால் வருவதே ஏமாற்றம்-ஆனால்
தோன்ற வேண்டும் அதில்மாற்றம்!
ஏற்றால் வெற்றியின் படியாக-நாம்
எடுத்து வைக்கும அடியாக!
ஆற்றல் வேண்டும் நம்பணியை-வெற்றி
அடைவோம் பரிசாம் நல்லணியை!
மாற்ற மில்லா மனத்திண்மை-என்றும்
மனதில் கொண்டால் தருமுண்மை!

முயலா விட்டால் ஏமாற்றம்-நாம்
முயன்றால் தந்திடும் முன்னேற்றம்!
இயலா தென்றே எண்ணாதீர்-எதையும்
ஏனோ தானெனப் பண்ணாதீர்!
வயலாய் ஆகுதே பாலைநிலம்-முயற்சி
வழியால் வந்ததே அந்தவளம்!
புயலாய் உழைக்க ஏமாற்றம்-நீங்கிப்
போக வந்திடும் முன்னேற்றம்!

எண்ணிச் செயல்படின் ஏமாற்றம்-வாரா
எதுவாய் இருப்பினும், முன்னேற்றம்!
பண்ணுள் இசையிலை ஏமாற்றம்-அதைப்
பாடினால் வருவதும் ஏமாற்றம்!
கண்ணில் விண்வெளி ஏமாற்றம் –நல்
கானல் நீரும் ஏமாற்றம்!
மண்ணில் எவரே ஏமாற்றம் –அடையா
மனிதர் இருந்தால் பறைசாற்றும்!

                         புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 16, 2013

இறுதி முச்சு உள்ளவரை-நம் இதயம் எண்ணம் எண்ணும்வரை!


தமிழா....!

இறுதி முச்சு உள்ளவரை-நம்
இதயம் எண்ணம் எண்ணும்வரை
உறுதி நீயும் கொள்வாயா-தனி
ஈழம் தானென சொல்வாயா!
குருதிசிந்தக் கணக் கற்றோர்-அங்கே
குழந்தை குட்டி தனைப்பெற்றோர்
இறுதிச் சடங்கும் ஆளின்றி -செய்ய
இறந்தோர் தம்மை மறப்பாயா!

முள்ளி வய்கால் படுகொலையை-நம்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
சொல்லி ஒன்றாய் நம்மவரை-உடன்
சேரச் செய்தே அறப்போரை
ஒல்லும் வகையெலாம் சொய்வோமா-இந்த
உலகம் உணர உய்வோமா !
தள்ளி நின்ற நம்மவரும்-தம்
தவறை உணர்ந்து வருவாரா!

அடங்கிப் போனோம் நாமென்றே-ஆளும்
ஆணவ ஆட்சியை நாம்வென்றே
முடங்கிப் போக வைப்போமா-இறுதி
மூச்சையும் பணயம் வைப்போமா!
ஒடுங்க மாட்டோம் நாமென்றே-அவர்
உணர எதிர்த்துத் தினம்நின்றே!
நடுங்கச் செய்வதே நம்வேலை-நம்
இறுதிமூச்சு உள்ள வரை!

புலவர் சா இராமாநுசம்

Saturday, December 14, 2013

புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர் போற்ற ஆட்சியை அளியுங்கள்!




 தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனைச்
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியல் தனைநாடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும் துயருக்கு ஏது   எல்லை

பெற்ற விடுதலைப் பறிபோகும்-அதைப்
பேணிக் காக்கும் நெறிகூறும்
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால்
மனதைமூடி மறைக் கின்றார்
அற்றவர் வாழ்வேப் போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம்

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால் தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணுமா சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆட்சியை அளியுங்கள்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, December 12, 2013

என் முகநூல் பதிவுகள்-எட்டு





நாம் ஒருவர் மீது கோபமோ , வெறுப்போ கொண்டிருந்தால் அவனைப்பற்றி பேச்சு வரும்போது அவன் இருந்தா என்ன! செத்தா என்ன! என்று பேசுகிறோம்! அதுபோல வள்ளுவரும் சொல்வது, வியப்பல்லவா! அதாவது ஒருவன், வாயால் அறிகின்ற சுவை (உப்பு, காரம் , இனிப்பு போன்றவை) மட்டுமே அறிந்து
கொண்டு , செவிச் செல்வமாகிய கேள்விச் செல்வத்தின் சுவையை அறியாது வாழ்பவன் இருந்தா என்ன! செத்தா என்ன! என்று வள்ளுவர் கல்விச் செல்வத்தின் முக்கியத்தை
விளக்கக் கூறுகிறார்

உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வதற்குச் செல்வம் தேவை! ஆகவே அதனைப் பெற பல வகையில் முயற்சி செய்யறோம்!ஆனால் , அச் செல்வமானது, நாம் தேடாமலேயே,( அதுவே )நம்மை அடைய வழி கேட்டு வருவதற்கு ,வள்ளுவர்
சொல்வது, நாம் செய்யும் எச்செயலையும் ஊக்கத்தோடு செய்யும் தன்மை நம்மிடம் இருந்தால் போதும் என்பதே ஆகும்!

சில நேரங்களில் நாம் கோபம் வந்தா , என்ன பேசறோம் ,என்று தெரியாமல் சுடு சொற்களை கொட்டி விடுகிறோம் அதனால் மனதில் ஏற்பட்ட காயமானது, எப்படிப் பட்டது என்றால் தீயினால் ஏற்பட்ட புண் கூட ஆறிப்போயிடும் ,நம் சுடு சொற்களால் , அம்மனக்காயமோ மாறாத வடுவாக பாதிக்கப் பட்டவரின் மனதில் என்றும் நின்று விடும்!

                      புலவர்  சா  இராமாநுசம்


Tuesday, December 10, 2013

எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு எங்கனும் தேடியும் காணல்அருமை !



எங்கேயோ கேட்டகுரல் மனித உரிமை-உலகு
எங்கனும் தேடியும் காணல்அருமை !
இங்கேயா அதைத்தேடி அலைய முடியும்-நம்
இறையாண்மை ஆராய பொழுதே விடியும் !
மங்காது நடக்குதே மக்களவை-அங்கு
மார்தட்டி தோள்தட்டி கேட்டல் எவை !
சிங்கார சொல்தானே மனித உரிமை-அதை
செப்பிட ஒப்பிட உண்டோ உரிமை !

இல்லாத ஒன்றினை எதற்கு நானே-கவிதை
எழுதிட வேண்டுமா முற்றும் வீணே
சொல்லாதீர் நானிதை சொன்னதாக-மீறி
சொன்னாலே வாழ்வினில் அமைதிபோக !
பொல்லாத விளைவுகள் தேடிவருமே-வீண்
பொல்லாங்கு நாள்தோறும் நாடிவருமே!
நல்லோரே இதுதானே மனித உரிமை-நீங்கள்
நம்புங்கள் அதுதானே எனகுப் பெருமை !

புலவர் சா இராமாநுசம்

Monday, December 9, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் - பகுதி இருபது






ஈங்கிள்பர்க் (12-8-2013)

          மவுண்ட் டிட்லிஸ் மலையிலிருந்து  கீழே இறங்கினோம்
அதன் பிறகு சுவிட்சர்லந்தின் ஆறு  முக்கிய நகரங்களில் ஒன்றான லுசர்ன்
நகரைச் சுற்றிப் பார்த்தோம்

          அங்கு கண்டவற்றில் குறிப்பிடத் தக்கவை சிங்க வாகனச் சின்னம்
சுண்ணாம்புக் கல் அரண்கள், மேலும் 1333-ஆம் ஆண்டு ரியூஸ் ஆற்றின் மேல்
கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான, முழுவதும் மரத்திலான , நீண்ட பாலம்
மற்றும் நகரின் அழகிய  காட்சிகளைக்  கீழே  காணலாம்


















இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...