Saturday, November 22, 2014

கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்



கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்
எண்ணிலொரு வாரம்தான் ஓய்வெடுக்க –சொன்னார்
ஆகவே,அருள்கூர்ந்து, அன்பரே என்துன்பம்
போகவே வேண்டுவ ! விரைந்து.

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, November 20, 2014

தேடிக் கொணர்ந்த திரு !



கோடி இருந்தென்ன கோபுரம்போல் வீடதனில்
மாடி இருதென்ன மாண்புடனே – நாடியதும்
ஓடி உவந்துவரும் உற்றதுணை யானவளே
தேடிக் கொணர்ந்த திரு

புலவர்  சா   இராமாநுசம்

Wednesday, November 19, 2014

எண்ணில் சிறப்பாம் இயம்பு !



உள்ளொன்று வைத்தே உறவாடி நட்பாகும்
கள்ளமனம் கொண்டாரைக் காண்பீரேல் –எள்ளியவர்
கண்ணில் படாமல் கடந்தேநாம் போவதுவே
எண்ணில் சிறப்பாம் இயம்பு

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 18, 2014

நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத



நித்தம் ஒருவெண்பா நிச்சியமாய் நானெழுத
சித்தம் வைத்திட்டேன் செம்மொழியில்! –எத்தனைபேர்,
காண்பாரோ நானறியேன்! கண்டே, எனையூக்க
தூண்டிவிடு வாரா தொடர்ந்து

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, November 16, 2014

வான் சிறப்பு ! குறள் வழி வெண்பா!



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழையே –தொடுத்திட்ட
வள்ளுவரின் சொற்படியா  வந்திங்கே பெய்துவிட்டே
செல்லுகின்றாய் வான்மழையே செப்பு

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...