Saturday 16 June 2012

சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்

       இனிய உறவுகளே!
                சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்
     பேராசிரியர், தி வா மெய்கண்டார் அவர்கள் நடத்தும்
     இளந்தமிழன் என்னும் இதழ் பற்றிய விளக்கமும்
                                   வாழ்த்தும்

இளந்தமிழன் என்னுமொரு திங்கள் ஏடே-நல்
   இலக்கியமாய் வருகிறது! இல்லை ஈடே!
உளந்தமிழே மெய்கண்டார் மெய்யே கொண்டார்-பல
   உண்மைகளை உள்ளபடி இதழில் விண்டார்
வளந்தருமே தமிழுக்கும் அவரின் தொண்டே-இதழ்
   வரலாற்றில் தனியிடமே அவருக்   குண்டே
அளந்தறிய இயலாத சிறந்த அன்பே-எதிலும்
   அடக்கம்தான் அவரிடத்து கண்ட பண்பே!

அந்நாளின் செய்திகளை நாமும் அறிய-அவர்
    ஆற்றுகின்ற அரும்பணியை சொல்லல் அரிய
எந்நாளும் படிப்பதற்கு ஏற்ற வகையில்-பல
   எண்ணற்ற சான்றோரின கருத்துக் குவியல்
இந்நாளில் பலர்காண இதழில் வருமே-நம்
   இதயத்தில் தனக்கென்றே இடமும் பெறுமே
பொன்னாக அதைப் போற்றிக் காக்கவேண்டும்-தமிழ்
   பெருமைக்கு அதுமேலும் வளர யாண்டும்!

பயன்கருதா நோக்கமுடன் செய்யும் பணியே-நம்
   பைந்தமிழுக் கழகூட்டும் பொன்னின் அணியே
நயன்தூக்கிக் கட்டுரைகள் எதையும் செய்தே-இதழ்
   நடத்துவதால் பட்டறிவு நாமும் எய்த
சமன்செய்து சீர்தூக்கும் கோலைப் போன்றார்-அவர்
   சமுதாய வாழ்வுக்கே தன்னை ஈன்றார்
தமரொன்றே தமிழென்றே வாழும் பெரியார்-ஏதும்
   தன்னலமே இல்லாத தூய்மைக் குரியார்!

தனக்கென்றே தனிப்பாதை வகுத்துக் கொண்டே-இளந்
   தமிழனென இதழ்தன்னில் செய்யும் தொண்டே
மனக்குன்றில் மறையாது வடிக்கும் மொழியே-நம்
   மாத்தமிழின் சிறப்பினைக் காணும் விழியே
எனக்கென்ற சுயநலம் ஏதும் இல்லார்-பலர்
   எண்ணத்தில் மெய்கண்டார் வாழும் நல்லார்
வனக்குயிலாய் முத்தமிழின் இசையே பாட-தமிழ்
   வரலாற்றில் அவர்புகழே நெஞ்சில் ஆட


                      புலவர் சா இராமாநுசம்
                   மேனாள் மாநிலத் தலைவர்
                   தமிழகத் தமிழாசிரியர் கழகம்










Thursday 14 June 2012

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?


பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா?
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா?
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-உள்ள
சூழ்நிலை! தனியார் பள்ளிகளே! 

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியரவரே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட!
கனிவாய் அவர்சொலல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே!
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பதும் மறைவது எந்நாளில்!

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே!
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே!
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை!
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார்!
எனவே,
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா?
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக!
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்!
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday 12 June 2012

பத்மஸ்ரீ விருது பெற்ற வெங்கடபதி ரெட்டியாருக்கு பாராட்டும் வாழ்த்தும்

          பத்மஸ்ரீ விருது பெற்ற இவரின் பள்ளிப்படிப்பு
  நாலாவது மட்டுமே! ஆனால் விவசாயத்துறையில்
  கற்றவர்களை விட மேலான ஆய்வு செய்து, சவுக்கு
  மரங்களையும்,கனகாம்பரப் பூக்கள் பல நிறங்களிலும்,
  பல மடங்கும் அமோக விளைச்சல் தர தன் இயற்கை
  அறிவின் மூலம் ஆய்ந்து வெற்றி கண்டார்
           விவசாய விஞ்ஞானி யான இவரது திறன் கண்டே,
 மத்திய அரசு, படிக்காத மேதையான இவருக்கு இவ் விருதினைத்
 தந்துப் பாராட்டியுள்ளது


 .
 படிக்காத மேதை யெனும் கெட்டியாரே-கூட
    பாக்கத்து விவசாயி ரெட்டி யாரே!
கொடுத்தாரே பத்மஸ்ரீ விருது யின்றே-நம்
    குடியரசு  தலைவரின் கையால் நன்றே!
எடுத்தாராம் உழுதொழிலும் பெருமை காண-ரெட்டி
   இனமக்கள் அனைவருமே மகிழ்ச்சி பூண!
தொடுத்தேனே ரெட்டிமலர் கண்டுப் பாவே-மேலும்
   தொடரட்டும் நல்லாய்வு புதுவைக் கோவே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வா ரென்றே-தம்
   உள்ளத்தில் தெளிவான உறுதி நின்றே!
பழுதுண்டு போனராம் பாடு பட்டும்-அதில்
   பலனின்றி பல்வகையில் மனமே கெட்டும்
தொழுதுண்டு வாழவும் தோன்ற வில்லை-வேறு
  தொழில்செய்ய அனுபவம் ஏது மில்லை!
அழுதுண்டு முடங்கிட எண்ண வில்லை-பல
   ஆய்வுகள்! முயற்சிகள்! உண்டோ! எல்லை!

பூவிலே அவர்கண்ட முயற்சி வெற்றி-சவுக்குப்
    போடுவதில் அவர்கண்ட முயற்சி வெற்றி!
மேவினார் வெங்கட பதியும் வெற்றி-மிக
    மேலான விருதுக்கும் பெற்றார் வெற்றி!
பாவிலே சொல்வதா அவரின் வெற்றி-அவர்
   பள்ளியே வயல்தானே! தந்த வெற்றி!
ஆய்விலே படித்தவரும் காணா வெற்றி-இவர்
   அனுபவம் கண்டதே வெற்றி! வெற்றி!


வருத்தமுற அவர்சொன்ன செய்தி யொன்றே-நம்மை
    வாட்டுகின்ற நிலைதானே கண்டோ மின்றே!
திருத்தமுற ஆய்ந்தேதான் விருது தந்தார்-அங்கே
   தேடிவந்து வாழ்துவரோ? இல்லை! நொந்தார்!
நடிகர்களை! கலைஞர்களை! தேடிச் சென்றே-அரசியல்
   நடிகர்கள்! அலுவலர்! அருகில் நின்றே
பிடிகவெனப் புகைப்படமும் எடுத்துக் கொள்ள-இவர்
  பேச்சற்று நின்றாராம் துயரம் தள்ள!

உலகுக்கே அச்சாணி உழவர் என்றார்-அங்கோர்
   உழவரைத் துச்சமாய் விலக்கிச் சென்றார்!
நிலவுக்கே சென்றாலும் பயனென் உண்டே-பசி
    நீங்கிடச் செய்வது உழவன் தொண்டே!
இலவுக்குக் காத்தகிளி ஆவார் ஒருநாள்-அது
   இன்றல்ல! என்றாலும் வருமே அந்நாள்!
பலகற்றும் கல்லாரே! அறிவார் நன்றே-அழி
    பசிவர அனைத்தும் பறக்கும் அன்றே!

                    புலவர் சா இராமாநுசம்

Related Posts Plugin for WordPress, Blogger...