Friday, September 9, 2016

முகநூல் பதிவுகள்!


உறவுகளே!
சுவை மிகுந்த பழங்கள் தோட்டத்தில் இருந்தாலும் காக்கைகள், பழுத்த வேப்பழத்தையே விரும்பி உண்ணும் அது
போல ஒருவரிடம் நல்ல குணங்கள் பல இருந்தாலும் , வீணர்கள்
சிலர் அவரிடம் உள்ள இரண்டொரு தீய குணத்தையேப் பெரிது
படித்து கூறுவர்!

கோள் சொல்வதே வழக்கமாக கொண்டவனிடம் சொல்லும்
செய்தியானது, காற்றொடு கலந்த நெருப்புமாதிரி மிவும் வேகமாக
பரவும்! ஐயமில்லை!

உறவுகளே!
கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை இணைந்து ஒரேப்
பொருளைப் பார்ப்பது போல கணவன் மனைவி என இருவரும்
எண்ணுவதும்,செய்வதும் ஒன்றாகவே அமையுமானால், அக் குடும்பம் இனியதாக அமையும்

கல்லால் ஆன தூண் பாரம் அதிகமானால் , உடைந்து நொறுங்குமே
தவிர வளைந்து கொடுக்காது! அதுபோல மானமுள்ளோர், மானக்கேடு வரும்போது உயிரை விட்டாவது மானத்தைக் காப்பார்

கல்லாத மக்களுக்கு , கற்றுணர்ந்தார் சொற்களும், அறவழி செல்லார்க்கு அறமும் , வாழைக்கு தான் ,ஈன்ற கனியும் , கணவனுக்கு
இசைந்து ஒழுகாத மனைவியும் கூற்றுவனாக(எமன்) ஆவார்கள்

உறவுகளேடு
பழமொழிகள்!நம் முன்னோர்கள் காலம் தொட்டு, வழி வழியாக
வழங்கி வருபவை பலவாகும்! அவைகள் நேரடியாக பொருள் தருவது ஒன்றானாலும் வேறொன்றை சுட்டுவதே உண்மை! ஒரு நிகழ்வு நடை பெற்று,முழுதும் வெளிப் படாவிட்டலும்,கொஞ்சம்
வெளி வந்தாலும் அது மறைக்கப் படும் போது இப்படி சொல்வதுண்டு
நெருப்பு இல்லாமல் புகையாது, அள்ளாம குறையாது என்று
சொல்வார்கள் !இல்லையா!


புலவர்  சா  இராமாநுசம் 

Tuesday, September 6, 2016

முகநூல் பதிவுகள்!


மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா ! என்று கேட்கும்
மனிதன் தானே, தன் மகன் நடைபழக நடைவண்டி செய்து தருகிறான்! இதனை என்ன வென்று சொல்வது!

உறவுகளே!
ஏதோ ஒரு பிள்ளைத் தமிழ் நூல் !பாடிய புலவனின் கற்பனையைப் பாருங்கள்!
நீர்நிறைந்த குளம்! அதிலிருந்த வாளை மீன் துள்ளி பக்கத்தில்
இருந்த தென்னை மரத்தின் தேங்காய் குலையில் மோத அதிலிருந்த
தேங்காய் ஒன்று தெறித்து போய் தேவருலகில் உள்ள கற்பக மரத்தில்
மோத, மரம் குலுங்கி தன்னிடம் உள்ள தேனை மழை போலப்
பொழிய, அவை பூ உலகில் உள்ள ஊரின் தெரு வெங்கும் ஆறாக ஓடின, என்பதாம்---இவ்வாறு பாடுவது உயர்வு நவிற்சி அணி
ஆகும்


பசித்துப் புசி என்று ஒரு வரியில் சொன்னவன் எவ்வளவு அறிவாளி!
ஒருவன், வேளைதோறும் பசி எடுத்தபின் உண்டு வந்தால் நோயின்றி வாழலாம்! கால நேரம் காணாமல் கண்டதை எல்லாம் பசியின்று உண்பவன்தான், இன்று பல்வகை நோய்களுக்கு ஆளாகி
அல்லல் படுகின்றான்


ஊக்கமது கைவிடேல், என்று ஔவையார் சொன்னார்! அதாவது
உன் மனவலிமையைக் கைவிடாதே என்பதாம்! ஆனால நம்முடை
குடிமகன்களோ ஊக்கம் தருவது மதுவே என்றே பொருள்
கொண்டு குடித்துத் தள்ளுகிறார்கள்! வாழ்க குடியரசு!


பொன்னால் ஆகிய குடம் உடைந்தாலும் மீண்டும் பயன்படும்!
மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் எதற்கும் பயன் படாது
அதுபோல மேலாண குணமுடையோர் வறுமை அடைந்தாலும், பொன்போல
குணத்தில் மாற மாட்டார் ஆனால் கீழ்மை குணமுடையோர் வறுமை
வந்தால் மண்குடமாக மேலும் பயனற்றுப் போவர்


உடலில் பிற உறுப்புகள் நோயால் வருந்தும் போது, கண்கள் மட்டுமே அழுவது போல சான்றோர்கள் , பிறருக்கு வந்த துன்பங்களையும் தனக்கு வந்ததாகக் கருத்தி அனல் பட்ட நெய்யாக உருகி வருந்துவர்!

புலவர்  சா  இராமாநுசம் 

Sunday, September 4, 2016

ஆசிரியர் தினவாழ்த்து!

எழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே
எழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே
அழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே
ஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே
செழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே
சிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே
பொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்
பெயராலே செப்ப வாழ்க ! வாழ்க!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...