Saturday 25 June 2011

ஏற்றிய மெழுகின் எரியுடன் இன்றே

  வருவாய் தழிழா வருவாய் நீயே
  சீரணி அரங்கம் மெரினா நோக்கி
  வருவாய் தழிழா வருவாய் நீயே
  பேரணி  யாக நீரணி வகுத்து
  எரியும் மெழுகு வத்தியை ஏந்தி
  தேதியும் இருபத்தி ஆறா மின்றே
  நீதியில் உலகும் அறிந்திட நன்றே
  வருவாய் தழிழா வருவாய் நீயே

  தன்னுயிர் ஈந்த ஈழரின் நினைவாய்
  தமிழகம் இழந்த மீனவர் நினைவாய்
  அஞ்சலி சொய்ய அனைவரும் வாரீர்
  வஞ்சக சிங்களர் வடமட கையர்
  கொஞ்மும் இரக்கம் இல்லாக் கொடியர்
  நெஞ்சமும் அஞ்சவர் நிம்மதி குலைய
  அலைகடல் ஒரம் அலையென திரண்டு
  வருவாய் தழிழா வருவாய் நீயே

   நீந்தும் தூரம் ஈழ மிருந்தும்
   நீதியில் கொலைகள் நடப்பன அறிந்தும்
   ஏதிலியாக இருந் தவர் நாமே
   இறந்தோர் தமக்கு அஞ்சலி தாமே
   செய்திட அணியென சேர்வோம் ஆமே
   கையில் ஊமையன் கதையாய்க் காலம்
   கடந்ததை மாற்றி போற்றிட ஞாலம்
   வருவாய் தமிழா வருவாய் நீயே

   எஞ்சிய ஈழரும் இன்னமும் அங்கே
   அஞ்சியே வாழின் நிம்மதி எங்கே
   அச்சம் தவிர்ப்போம் ஆணவம் அழிப்போம்
   துச்சம் என்றே துரத்தி ஒழிப்போம்
   ஒற்றுமை என்றே ஓரணி நின்றே
   பெற்றிட வேண்டும் ஈழமும் நன்றே
   ஏற்றிய மெழுகின் எரியுடன் இன்றே
   வருவாய் தமிழா வருவாய் நீயே

                                      புலவர் சா இராமாநுசம்

Friday 24 June 2011

தீயாக தீண்டியெனை வருத்து கின்றாய்

புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை- எண் 2  புலவர் சா இராமாநுசம்

      தனவானாய்  ஆவதற்குப்  பொருளை  ஈட்ட-இங்கே
          தனிமையெனும்  பெரும்கொடுமை  என்னை  வாட்ட
      கனமான  மனத்துடனே  அவரும்  சென்றார்-என்ன
          காரணமோ  இதுவரையில்  வாரா  நின்றார்
      தினம்தோறும்  நான்பெற்ற  இன்பம்  தன்னை-நல்
          திரைகாட்டும்  படம்போல  காட்டி  என்னை
      நினைவேநான்  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-சுடும்
          நெருப்பாகி  நாள்தோறும்  வாட்டு  கின்றாய்

      கொம்பில்லா  கொடியாக  என்னை  விட்டே-அந்த
          கோமகனும்  பொருள்தேடி  சென்ற  தொட்டே
      வெம்பியழும்  வேதனையைக்  கண்ட  பின்பா-மேலும்
          வேதனையை  தருவதென்ன  நல்லப்  பண்பா
      கம்பமில்லா  மின்விளக்காய்  விண்ணில்  தொங்கி-இரவின்
          காரிருளை  விரட்டிடுவாய்  ஒளியும்  பொங்கி
      அம்புலியே  உனக்கென்ன  தீங்கா  செய்தேன்-நீயும்
          அனலாகி  எனையேனோ  வருத்து  கின்றாய்

      அன்றன்று  பூத்தமலர்  பறித்து  வந்தே-தீரா
          ஆசையுடன்  கூந்தலிலே  சூடத்  தந்தே
      என்றும்நான்  பிரியேனென  சொல்லி  சொல்லி-தினம்
          எனகன்னம்  சிவந்துவிட  கிள்ளி  கிள்ளி
      சென்றவர்தான்  இன்றுவரை  வரவே  யில்லை-ஏதும்
          செய்யவழி  தெரியாமல்  திகைப்பின்  எல்லை
      தென்றலே  நானிருத்தல்  அறிந்த  பின்னும்-ஏன்
          தீயாக  தீண்டியெனை  வருத்து  கின்றாய்

                                                             புலவர் சா இராமாநுசம்

Thursday 23 June 2011

அரைக்கணமும நில்லாது விரைந்தே வாரும்

புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி
பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான் வடித்த
கவிதை- எண் 1  புலவர் சா இராமாநுசம்

     நானில்லை  நீயெனக்  கில்லை  என்றால-மேலும்
           நலிந்துவிடும்  நம்வாழ்வே   பிரிந்துச்  சென்றால்
     வீணில்லை  என்வார்த்தை  நம்பு  என்றீர்-என்
           வேதனையை  குறைத்தேதான்  நீரும  சென்றீர்
     ஏனில்லை  சென்றபின்னர்  அத்தான்  நெஞ்சில்-அந்த
           எண்ணம்தான்  தினம்வாட்ட  அறியேன்  துஞ்சல
     தேனில்லை  என்றுமலர்  பலவே  நாளும்-தேடித்
           திரிகின்ற    வண்டெனவே  ஆனீர்  போலும்

    தாக்கவரும்    புலிகூட  பெண்ணைக்  கண்டே-சற்று
          தயங்குமெனச   சொல்லுகின்ற  கதைகள்   உண்டே
   காக்கவொரு  ஆளில்லை  பெண்ணை என்றால் – அவர்
          கற்பென்ன  கடைச்சரக்கா  தெருவில்  சென்றால்
   நோக்குகின்ற தன்மையெல்லாம்  பழுதே    அத்தான்-அதை
          நோக்கிபல   நாள்முழுதும்  அழுதேன்  அத்தான்
   ஆக்கிவைத்த  சோறாக  இந்த   ஊரே-என்னை
          அள்ளிஉண்ண     பார்க்கிறது  வருவீர்  நீரே

     காய்த்தமரம்  காவலின்றி  தனியாய்  ஊரில் –நிற்க
          கண்டவரின்   கல்லடியை  பெறுமே  பாரில்
      வாய்தவனும்  பிரிந்திருக்க  ஏழை  ஆனால-அவள்
          வாழவழி   இல்லையது  சொல்லப்   போனால்
      தேய்த்தெடுத்த   சந்தணத்தை  தெருவில்  வீச-நீர்
          தேடிவந்து   எடுப்பீரா  மார்பில்  பூச
      மாய்த்துவிடும்  நெடும்பிரிவே  என்னை  உலகில்-இதை
          மறவாதீர்   மணவாளா  துயரம்  அலகில்
   
      பழுத்தபழம்  எத்தனைநாள்  வைத்தே  அத்தான்-நல்
          பக்குவமாய்  பாதுகாக்க  முடியும்  அத்தான்
      புழுத்ததென  பின்னரதைக்    கண்டு  வீணே-நீர்
          புலம்புவதில்  பயனில்லை  அதனால்  நானே
      கழுத்துவரை  நீர்ரலையில்  நின்று  விட்டேன்-அடுத்த
          கணமென்ன  அறியீரா  நம்பிக்   கெட்டேன்
      அழுத்துவதும்  என்தலையே  நீரில்  நீரும்-உடன்
          அரைக்கணமும்  நில்லாது  விரைந்தே   வாரும்

                            புலவர் சா இராமாநுசம்

Wednesday 22 June 2011

பட்டக் காலிலே படுமென் பார்


பட்டக் காலிலே படுமென் பார்
கெட்டக் குடியே கெடுமென் பார்
பழமொழி சொன்னார் அந் நாளே
பார்த்தோம் சான்றாய் இந் நாளே
மீண்டும மீண்டும ஜப்பா னில்
மிரட்டும் அதிர்வுகள பல ஊரில்
வேண்டுவோம் இயற்கைத் தாயி டமே
வேதனை செய்வதா சேயி டமே

பட்டது போதும் அவர் துயரம்
பறந்திட அங்கே பல உயிரும
கெட்டது போதும் இனி மேலும்
கெடுவது வேண்டா ஒரு நாளும்
விட்டிடு பூமித் தாயே நீ
விழுங்க திறவாய் வாயே நீ
தொட்டது அன்னவர் துலங் கட்டும
தொழில்வளம் முன்போல் விளங் கட்டும்

உழைப்பவர் அவர்போல் உல கில்லை
உண்மை முற்றிலும ஐய மில்லை
தழைக்க வேண்டும் அவர் வாழ்வே
தடுத்தால் உனக்கும அது தாழ்வே
பிழைக்க அன்னவர் வழி காட்டி
பூமித்தாயே கருணை விழி காட்டி
செழிக்கச் செய்வது உன் செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன் கையில்

அணுவால் அழிந்தும் மீண்ட வரே
அவருக்கு நிகராய் உண்டெ வரே
துணிவே அவருக்குத் துணை யாமே
தொழிலில் அதுவே இணை யாமே
அணுவே இன்றவர் முன் னேற்றம
அடையச் செய்தது பெரு மாற்றம்
பணிவாய் பூமித் தாய் உன்னை
பாடி முடித்தேன பா(ர்) அன்னை

புலவர் சா இராமாநுசம்

உலகப் பெண்கள் தினம்

உலகப் பெண்கள் தினம்பற்றி-மிக
உயர்ந்த மேடையில் பறைசாற்றி
திலகம் அடடா அவரென்றே-நாம்
தினமும் போற்றுதல் மிகநன்றே
ஆனால்
மகளிர்க் கென்றே ஒதுக்கீடும்-ஏனாம்
மக்கள் அவையில் குறுக்கீடும்
சகல கட்சிகள் ஒன்றாக-பெரும்
சாதனை நிகழ்த்த நன்றாக
புகல என்னத் தடையிங்கே-ஆண்டுகள்
போனது பலவே விடையொங்கே
மகளிர் கென்றே தனிக்கட்சி-உடன்
மகளிர் தொடங்கின் வருமாட்சி

தொடங்க வேண்டும் இக்கணமே-மெகா
தொடரும் முடியும அக்கணமே
அடங்கும் ஆணின் ஆதிக்கம்-பெண்கள்
அணியெனத் திரண்டால சாதிக்கும்
செய்வீரா--?

புலவர் ச இராமாநசம்

Tuesday 21 June 2011

மீண்டு(ம்) வருகிறோம்

 

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பகசே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே
நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம விளங்காதாம்

அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குக் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்

புலவர் சா இராமாநுசம்

Sunday 19 June 2011

மே- பதினெட்டே

              மேதினி போற்றும் மேதினமே-உன்
                 மேன்மைக்கே களங்கம் இத்தினமே
              தேதியே ஆமது பதினெட்டே-ஈழர்
                  தேம்பி அலற திசையெட்டே
               வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
                   வாய்கால் முற்றும சேறாக
               நீதியில் முறையில் கொன்றானே-அந்த
                   நினைவு நாளே துக்கதினம்

               உலகில் உள்ள தமிழரெங்கும்-அன்று
                   ஒன்றாய் கூடி அங்கங்கும்
               அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
                   அமைதியாய்  நெஞ்சில் துயரேந்தி
                வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
                    வருந்த மக்கள் வழியெங்கும்
                திலகம் வீரத் திலகமவர்-உயிர்
                    துறந்த தியாக மறவர்

               முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
                   முடிந்த கதையா அதுவல்ல
               கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்த
                   குடும்பமே அழிந்த நாளன்றோ
               புள்ளி விவரம் ஐ.நாவே-அறிக்கை
                   புகன்றதே நாற்பது ஆயிரமே
               உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
                   உலகத் தமிழர் தொழுகின்றார்

              அகிலம் காணாக் கொடுமையிதே-நாம
                  அறிந்தும் அமைதியா-? மடமையதே
              வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
                  வீரம் விளையாக் களர்நிலமே
              நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
                  நம்தலை தாழும் நிலையுண்டே
              தகுமா நமக்கு அந்நிலையே-மாறும்
                  தமிழகம் பொங்கின் சூழ்நிலையே

                                                புலவர் சா இராமாநுசம்

Related Posts Plugin for WordPress, Blogger...