Saturday, April 13, 2013

இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே!



            இத்தரை மீதினில்

            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 10, 2013

கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி குமுறும் எரிமலை ஆவானே


இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

                                    புலவர்  சா இராமாநுசம்

Monday, April 8, 2013

வெண்பா- நான்கும் இயற்கைப் பாங்கும்!




தென்றல்  வரவேற்க தீந்தமிழோ தாலாட்ட
அன்றங்கே பூத்தப்பூ ஆடிடவும் –நின்றமரம்
நீண்ட கிளையாலே நீங்கா நிழல்தருமே
தூண்ட உணர்வன்றோ தான்

சோலைக் குயிலங்கே சொக்கும் குரல்காட்ட
வாலைக்  குமரியென  வாவியிலே –மாலைமதி
தன்முகத்தைக் காட்டி தவழ்கின்ற மேகத்துள்
நன்றே மறைப்பதா நன்று


தேன்தேடி  வண்டொன்று தேன்மலரை நாடிவர
தான்தேடி சேர்த்தனை தந்திடுமே – வான்வரையில்
வீசும் மணம்போல வேந்தனவன  மார்பினிலே
பூசுகின்ற சந்தனமாய்  சொல்




இயற்கை எழில்சூழந்த ஏற்றமிகு காட்சி
செயற்கை அளித்திடுமா செப்பு –வியப்புமிகு
எண்ணற்ற பல்வசதி இன்றிங்கே வந்தாலும்
பண்ணற்ற பாவலவோ பார்

              புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...