Sunday, May 18, 2014

தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர் தேம்பி அலற திசையெட்டே!



மேதினி போற்றும் மேதினமே-உன்
மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
தேம்பி அலற திசையெட்டே!
வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
வாய்கால் முற்றும சேறாக!
நீதியில் முறையில் கொன்றானே-அந்த
நினைவு நாளே துக்கதினம்!

உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
அமைதியாய் நெஞ்சில் துயரேந்தி!
வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
வருந்த மக்கள் வழியெங்கும்!
திலகம் வீரத் திலகமவர்-உயிர்
துறந்த தியாக மறவர்!

முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
முடிந்த கதையா அதுவல்ல!
கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
குடும்பமே அழிந்த நாளன்றோ!?
புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
புகன்றதே நாற்பது ஆயிரமே!
உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
உலகத் தமிழர் தொழுகின்றார்!

அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
அறிந்தும் அமைதியா-? மடமையதே!
வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
வீரம் விளையாக் களர்நிலமே!
நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
நம்தலை தாழும் நிலையுண்டே!
தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...