Friday, June 8, 2012

மாட்சிமை மிக்க மேயரய்யா!


ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னைக் காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையெனக் கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல்ல-இது
குத்தும் கவிதை ஆக்கமல்ல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
             புலவர் சா இராமாநுசம்

 

Wednesday, June 6, 2012

அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே!


அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
  அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
   பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
   படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
   தொண்டுமே செய்து  வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
   பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
   இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
   கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
   மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
  சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
   குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
   போற்றிட வாழ்வீர் மனிதரே!!  அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

                               புலவர் சா இராமாநுசம்

Monday, June 4, 2012

செவிடன் தனக்கே சங்கும் எதற்கே?


செவிடன் தனக்கே சங்கும் எதற்கே-என
  செப்பினார் அருணா தலைப்பும், அதற்கே!
கவிதைத் தருகெனக் கனிவுடன் கேட்டார்-தன்
  கருத்தினை மறுமொழி தன்னிலே இட்டார்!
தம்பியின் விருப்பை தனயன் ஏற்றேன்-இங்கே
   தந்திடும் வாய்ப்பை தானும் உற்றேன்!
நம்பியே சிலவரி நவின்றேன் நானும்-நீர்
   நல்லதா கெட்டதா? விளக்கிட வேணும்!


மத்திய மாநில அரசுகள் இரண்டும்-ஏழை
   மக்களை வாட்டி பலவழி சுரண்டும்!
எத்தனை சொல்லியும் ஏற்கவே மாட்டார்-தாம்
   ஏற்றிய விலையில் மாற்றமே காட்டார்!
இத்தகைப் போக்கே செவிடன் சங்காம்-என
   இயம்புதல் பொருத்தம் ஆமே! இங்காம்!
சித்தமே இரங்கா செவிபுலன் அடைப்பே-அவர்
   சொல்லும் செயலும் ஊழலின் படைப்பே!


ஊற்றென ஊழல் ஓடுவ கண்டோம்-பலரும்
  ஓங்கிட குரலும் ஒலித்திட விண்டோம்!
ஏற்றவர் இல்லை! எதிர்த்தால், தொல்லை!-மனம்
  ஏங்கவும் தாங்கவும் பழகின ஒல்லை!
சாற்றுவ செவிடன் காதில் சங்காம்-மேலும்
   சாற்றிடில் மக்கள் மறதிக்கும் பங்காம்!
மாற்றமே வருமா மாண்பினைத் தருமா-மக்கள்
   மறந்தால் அதுவும் செவிடன் சங்காம்!

                               புலவர் சா இராமாநுசம்




இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...