Saturday 9 June 2012

நெஞ்சம் ஏங்கிட நீங்குமா சாதி மடமை!


தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரி
   தீயாக இருப்பதனை கண்டோம் ஏட்டில்!
வேண்டாமை அதுவென்றே காந்தி, பெரியார்-மிக
    வீறுகொண்டு எதிர்த்திட்ட பெருமைக் குரியார்!
பூண்டோடு ஒழிந்ததெனப் பெருமைப் பட்டோம்-அது
   போகவில்லை!அறிந்தின்று! சிறுமைப் பட்டோம்!
ஆண்டாரே, ஆள்வோரே எண்ணிப் பாரும்-இந்த
   அவலத்தைப் போக்கவழி விரைந்துக் கூறும்!

ஊராட்சி தலைவரென தலித்தும் வந்தால்-அவர்
    உட்கார நாற்காலி ஒன்று தந்தால்!
பாராட்சி போனதெனல், சாதி வெறியே-நற்
   பண்பல்ல! ஒம்புங்கள் உயர்ந்த நெறியே!
யாராட்சி செய்தாலும் மனிதன் தானே-என்ற
   எண்ணமின்றி நடப்பது அனைத்தும் வீணே!
சீராட்சி நடந்திட வழியே காண்பீர்-சாதிச்
    சிந்தனையை ஒழித்திடவே உறுதி பூண்பீர்!

ஆதிக்க மனப்பான்மை ஒழிய வில்லை-அது
   ஆங்காங்கே தோன்றினால் வருமே தொல்லை!
நீதிக்கே புறம்பாக நடத்தல் நன்றா-பேதம்
    நிலைப்பது ஒற்றுமை காணும் ஒன்றா?
சாதிக்கு இனியிங்கே இடமே இல்லை!-நம்முள்
   சமத்துவம் மலர்ந்திட வேண்டும் ஒல்லை!
போதிக்க இனியாரும் தோன்ற மாட்டார்-சாதிப்
   போராட்டம் வளர்க்கவும் ஆர்வம் காட்டார்!
   

ஒன்றேதான் குலமென்றார் தேவன் என்றார்-என
   உரைத்திட்ட அறிஞரும் விண்ணே சென்றார்!
நன்றேதான்  அதுவென்றே ஏற்றுக் கொண்டோம-நம்
   நாடெங்கும் கொள்கையென பரப்பி விண்டோம்!
இன்றேதான் தெரிகிறது தொற்று நோயே-சாதி
   இழிவின்னும் அழியாத நச்சுப் பேயே!
என்றேதான் ஒழியுமோ? இந்தக் கொடுமை!-நெஞ்சம்
       ஏங்கிட நீங்குமா சாதி மடமை!

                         சா இராமாநுசம்

Thursday 7 June 2012

மாட்சிமை மிக்க மேயரய்யா!


ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னைக் காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணித்
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையெனக் கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல்ல-இது
குத்தும் கவிதை ஆக்கமல்ல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
             புலவர் சா இராமாநுசம்

 

Tuesday 5 June 2012

அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே!


அரிதிலும் அரிதாம் மானிடப் பிறப்பே-இதை
  அனைவரும் அறிந்திடின் வருவது சிறப்பே!
பெரிதிலும் பெரிதாம் குறையின்றி உறுப்பே-உலகில்
   பிறத்தலும் வாழ்தலும்! உண்டா? மறுப்பே!

பகுத்தும் அறிவது மனிதன் மட்டுமே-உலகப்
   படைப்பில்! இதனால், பெருமையும் கிட்டுமே!
தொகுத்துப் பார்த்தால் தோன்றுவ தொன்றே-நல்
   தொண்டுமே செய்து  வாழ்வதும் நன்றே!

பிறந்தோம் ஏதோ வாளர்ந்தோம் என்பதாய்-உடலைப்
   பேணி வளர்த்திட சுவையாய் உண்பதாய்!
இறந்தோம் இறுதியில்! வாழ்வதும் அல்ல-நாம்
   இறப்பினும் பலரும் நம்பெயர் செல்ல!

கற்றவன் ஆகலாம் கலைபல ஆக்கலாம்-பிறர்
   கற்றிடச் செய்யும் வழிபல நோக்கலாம்!
மற்றவர் வாழ்ந்திட உதவிகள் ஆற்றலாம்-மற்றும்
   மனித நேயத்தை மறவாது போற்றலாம்!

சுற்றம் தாழலாம் சுயநலம் நீக்கலாம்-தீய
  சொற்களைத் தவிர்க்க, இனிமையைச் சேர்க்கலாம்!
குற்றம் காண்பதே! குணமென வேண்டாம்-ஏதும்
   குறையிலா மனிதரே காண்பதோ? ஈண்டாம்!

பிறப்பதும் ஒருமுறை! இறப்பது வரும்வரை-பிறர்
   போற்றிட வாழ்வீர் மனிதரே!!  அதுவரை!
இருப்பது எதுவரை ? அறியார் எவரும்-எனில்
    ஏற்றதைச் செய்வோம் மரணம் வரும்வரை!

                               புலவர் சா இராமாநுசம்

Sunday 3 June 2012

செவிடன் தனக்கே சங்கும் எதற்கே?


செவிடன் தனக்கே சங்கும் எதற்கே-என
  செப்பினார் அருணா தலைப்பும், அதற்கே!
கவிதைத் தருகெனக் கனிவுடன் கேட்டார்-தன்
  கருத்தினை மறுமொழி தன்னிலே இட்டார்!
தம்பியின் விருப்பை தனயன் ஏற்றேன்-இங்கே
   தந்திடும் வாய்ப்பை தானும் உற்றேன்!
நம்பியே சிலவரி நவின்றேன் நானும்-நீர்
   நல்லதா கெட்டதா? விளக்கிட வேணும்!


மத்திய மாநில அரசுகள் இரண்டும்-ஏழை
   மக்களை வாட்டி பலவழி சுரண்டும்!
எத்தனை சொல்லியும் ஏற்கவே மாட்டார்-தாம்
   ஏற்றிய விலையில் மாற்றமே காட்டார்!
இத்தகைப் போக்கே செவிடன் சங்காம்-என
   இயம்புதல் பொருத்தம் ஆமே! இங்காம்!
சித்தமே இரங்கா செவிபுலன் அடைப்பே-அவர்
   சொல்லும் செயலும் ஊழலின் படைப்பே!


ஊற்றென ஊழல் ஓடுவ கண்டோம்-பலரும்
  ஓங்கிட குரலும் ஒலித்திட விண்டோம்!
ஏற்றவர் இல்லை! எதிர்த்தால், தொல்லை!-மனம்
  ஏங்கவும் தாங்கவும் பழகின ஒல்லை!
சாற்றுவ செவிடன் காதில் சங்காம்-மேலும்
   சாற்றிடில் மக்கள் மறதிக்கும் பங்காம்!
மாற்றமே வருமா மாண்பினைத் தருமா-மக்கள்
   மறந்தால் அதுவும் செவிடன் சங்காம்!

                               புலவர் சா இராமாநுசம்




Related Posts Plugin for WordPress, Blogger...