Friday, June 9, 2017

பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல் நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ




எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!


ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

                                        புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 7, 2017

வாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள் வளர்ந்திட இன்று அனுதினமே!



வாழ்க வாழ்க தமிழ்மணமே- பதிவுகள்
வளர்ந்திட இன்று அனுதினமே
சூழ்க சூழ்க பொலிவுடனே –வானின்
சுடரென என்றும் வலுவுடனே
வருவது கண்டே மகிழ்கின்றோம்-மதிப்பெண்
வழங்கலும் எளிதென புகழ்கின்றோம்
கருவென இருந்தவர் பலரின்றே-பூத்து
காய்த்திடச் செய்தாய் நனிநன்றே!


புலவர் சா இராமாநுசம்ஃ

Tuesday, June 6, 2017

மழையே மழையே வாராயோ- வாடும் மக்கள் துயர்தனைப் பாராயோ!



மழையே மழையே வாராயோ- வாடும்
மக்கள் துயர்தனைப் பாராயோ
பிழைதான் செய்தோம்! பொறுப்பாயே-உனது
பிள்ளைகள் தம்மை வெறுப்பாயோ
உழுவார் தொழிலே முடங்கிவிட-பற்றா
உணவுப் பஞ்சம் அடங்கிவிட
தொழுவோம் உன்னைப் பாராட்டி-மற்ற
தொழிலும் வளர்ந்திட சீராட்டி


புலவர் சா இராமாநுசம்

Monday, June 5, 2017

சென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம் செப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்



சென்னநகர் முழுவதுமே குடிநீர்ப் பஞ்சம்
செப்புதற்கு இயலாது கொதிக்கும் நெஞ்சம்
அன்னைகுலம் தெருவெங்கும் குடத்தைத் தூக்கி
அலைகின்றார் பொங்கிவரும் கண்ணீர் தேக்கி
என்னவெனப் பார்காத ஆட்சி இங்கே
இருக்கின்றார் அமைச்சர்பலர் தீர்வு எங்கே
சின்னமது இரட்டையிலை பெறவே போட்டி
செய்கின்றார் சிந்தைதனில் திட்டம் தீட்டி


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...