Friday, April 13, 2012

சித்திரைப் பெண்ணே


            இத்தரை மீதினில்
            சித்திரைப் பெண்ணே
            எத்தனை முறையம்மா வந்தாய்-நீ
            என்னென்ன புதுமைகள் தந்தாய்

            எண்ணிப் பதினொரு
            இன்னுயிர் தோழியர்
            நண்ணிப் புடைசூழப் பின்னே-நீ
            நடந்து வருவதும் என்னே

            ஆண்டுக் கொருமுறை
            மீண்டும் வருமுன்னை
            வேண்டுவார் பற்பல நன்மை-அது
            ஈண்டுள மக்களின் தன்மை

            இல்லாமை நீங்கிட
            ஏழ்மை மறந்திட
            வெள்ளாமைத் தந்திடு வாயே-உயிர்
            கொல்லாமைத் தந்திடு வாயே

            ஏரிக்குள மெல்லாம்
            எங்கும் நிரம்பிட
            வாரி வழங்கிடு வாயா-வான்
            மாரி வழங்கிடு வாயா

             புலவர் சா இராமாநுசம்

Thursday, April 12, 2012

எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது!


எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்
   இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
   பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
   கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
   பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நல்
    கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்
    இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
    சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
    கயவரைக் கண்டாலே விலகலினிது!


பாராட்டி பகைவரை பேசலினிது-அப்
     பகைமையும் அதனாலே நீங்கலினிது!
ஊரோடு ஒத்துமே போதலினிது-தம்
     உறவோடு ஒற்றுமையே ஆதலினிது!
வேரோடு முள்தன்னைக் களைதலினிது-நல்
    வேந்தன்கீழ் வாழ்தலே மாந்தர்க்கினிது!
சீரோடு இதுபோலப் பலவுமினிது-எடுத்துச்
     செப்பிட ஆனாலும் போதுமினி(யி)து!

                    புலவர் சா இராமாநுசம்





Tuesday, April 10, 2012

செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது!



செய்யாமல் செய்திட்ட உதவி பெரிது
    சினமின்றி இருப்பாரைக் காணல் அரிது
பெய்யாமல் பெய்திட்ட மழையும் பெரிது
    பிழையின்றி நடப்பதும் மிகவும் அரிது

அறம்செய்து வாழுதல் என்றும் பெரிது
    அழுக்காறு அவாவின்றி இருத்தல் அரிது
புறங்கூறல் இல்லாத குணமே பெரிது
    பிறர்குற்றம் பேசாமல் இருத்தல் அரிது

குற்றமெனில் ஏற்கின்ற தன்மை பெரிது
    கொள்கையிலே மாறாத ஆட்சி அரிது
சுற்றமதை வெறுக்காமல் காத்தல் பெரிது
    சுயநலமே இல்லாதார் அரிது! அரிது

சட்டத்தை மதிக்கின்ற பண்பே பெரிது
    சமுதாய ஒற்றுமை காணல் அரிது
திட்டமிட்டு வாழுதல் என்றும் பெரிது
   தேவைக்கே உரியபொருள் தேடல் அரிது

நன்றல்ல செய்தாலும் பொறுத்தல் பெரிது
    நலமிக்க நல்லோரின் நட்பே அரிது
குன்றன்ன தடைவரினும் நேர்மை பெரிது
    கோடாத நீதிவழி நடப்போர் அரிது

வழியிலா வழிநீக்கி வாழல் பெரிது
   வையத்து வாழ்வாங்கு வாழ்வார் அரிது!
பழியிலார் ஆவதே பெரிது பெரிது
    பயிலாது கல்விவரல் அரிது! அரிது

                                       புலவர்  சா இராமாநுசம்

Monday, April 9, 2012

நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே!




நேற்றுவரை இதுபோல நடக்குமென்றே-நான்
       நினைக்கவில்லை!அடடா நம்புமென்றே
சாற்றுகின்ற பலபேரைக் கண்டதுண்டே-பல
      சந்தர்பம் வாழ்கையிலே வந்ததுண்டே
போற்றுகின்ற மனிதர்களை ஒருநாள்வந்தே-மனம்
      போனபடி குறைகளையே எடுத்துத்தந்தே
தூற்றுகின்ற நிலைதன்னைப் பார்ப்பதுண்டே-பெரும்
      துரோகியெனும் பட்டியலில் சேர்ப்பதுண்டே

நீதிக்கும் இடத்திற்கு ஏற்பமாறும்-என்ற
     நிலையுண்டு உலகத்தில்!மறுப்பார்!கூறும்
சாதிக்கி ஒருநீதி இங்கேஉண்டே!-வரும்
    சண்டைக்கும் சரிபாதி பங்கும்உண்டே!
போதிக்க பல்வேறு மதங்களிங்கே-ஆனால்
    பொறுமைதான் மக்களிடம் எங்கேயெங்கே?
ஆதிக்க மனப்பான்மை அழியவில்லை!-எனில்
     அதுவரைத் தீராது நமதுத்தொல்லை!

ஒன்றேதான் குலமென்று அண்ணாசொல்ல-மேலும்
    ஒருவனே தேவனென அவரேசொல்ல
என்றேதான் அந்நிலை தோன்றுமிங்கே?-எண்ணி
     ஏங்கியே வாழ்கின்றோம் வெற்றியெங்கே?
நன்றேதான் எதுவென்று அறிதல்வேண்டும்!-பல
    நல்லோரின் சொல்கொண்டு வாழயாண்டும்
அன்றேதான் நம்நாடு உயரும்உலகில்-ஏதும்
     ஐயமே அதிலில்லை! தீமைவிலகில்!

                            புலவர் சா இராமாநுசம்





இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...