Saturday, January 17, 2015

திருக்குறள் திருநாள் கவிதை!


தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ
திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு
உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன்று
உலகமெலாம் பலகுலமாய் திகழுமடா வீணில்

சாதிமத பேதங்களில் சாய்ந்திடுவீர் என்றே - தம்பீ
சாற்றுகின்ற சமயநெறி சார்புடைய தன்றே
நீதிநெறி வழிகளிலே நீக்கமற நின்றே - என்றும்
நிலவிடவே சொல்லுவதும் திருக்குறளாம் ஒன்றே

எம்மதமே ஆனாலும் ஏற்கின்ற விதமே - தம்பீ
எழுதியுள்ளார் வள்ளுவரும் ஏற்றநல்ல பதமே
தம்மதமே உயர்ந்ததென சொல்லுகின்ற எவரும் - இந்த
தமிழ்மறையை படித்துப்பின் மாறிடுவார் அவரும்

எம்மொழியும் எந்நாடும் போற்றிக் கொள்ளுமாறே - தம்பீ
எழிதியுள்ள திருக்குறளும் தமிழ்ப் பெற்றபேறே
செம்மொழியாய் நம்மொழியைச் சேர்த்திடவும் இன்றே - இங்கே
செப்புகின்ற காரணத்தில் திருக்குறளும் ஒன்றே

எக்காலம் ஆனாலும் மாறாத உண்மை - தம்பீ
இணையில்லாக் கருத்துக்களே அழியாத திண்மை
முக்கால(ம்) மக்களும் ஏற்கின்ற வகையே - குறளை
மொழிந்தாரே உலகுக்கே பொதுவான மறையே

உலகத்து மொழிகளிலே வெளிவரவே வேண்டும் - தம்பீ
உயர்மொழியாய் செம்மொழியே ஒளிதரவே யாண்டும்
திலகமெனத் தமிழன்னை நெற்றியிலே என்றும் - குறள்
திகழ்கின்ற நிலைதன்னை உலகறிய வேண்டும்.

-புலவர் சா. இராமாநுசம்.

Friday, January 16, 2015

மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ் மாண்புக்கு இதுதானே சான்றே !



மாட்டுக்கும் பொங்கலாம் இன்றே!-தமிழ்
         மாண்புக்கு இதுதானே சான்றே-வேறு
  நாட்டுக்கும் இல்லாத பெருமை!-நம்
         நாட்டுக்கே உரியதாம் அருமை!

 உழுதிட உழவனின் துணையே!-என
        உற்றது இரண்டவை இணையே-நாளும்
 பழுதின்றி பயிர்த்தொழில் செய்ய!-அவை
         பங்குமே பெற்றது ஐய!

 தொழுதின்று போற்றிட வேண்டும்-அதன்
        தொண்டினை சாற்றுவோம் யாண்டும்-மேலும்
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்-இன்றேல்
         உணவின்றி அனைவரும் வீழ்வார்

 மஞ்சு விரட்டெனச் சொல்வார்-மணி
         மாலைகள் சூட்டியே மகிழ்வார்-மிரண்டு
 அஞ்சிய மாடுகள் ஓடும்-ஆகா!
         அவ்வழகினைப் பாடவா கூடும்!

 வண்ணங்கள் தீட்டுவார் கொம்பில்-அதை
          வண்டியில் பூட்டுவார்! அன்பில்!-உவகை
  எண்ணத்தில் மலர்ந்திட உள்ளம்-அவை
           விரைந்திட ஓட்டுவார் இல்லம்

   ஏர்தனைக் கட்டியே உழுவார்-கதிர்
            இறையென பார்த்துமே தொழுவார்-இப்
   பாரெங்கும் பசிப்பிணி நீங்க- இட்ட
          பயிர்நன்கு செழித்துமே ஓங்க!

  ஊரெங்கும் மக்களின் கூட்டம்!-பெரும்
           உற்சாகம் பொங்கிட ஆட்டம்!-நல்
   சீர்மிகும் புத்தாடை அணிவார்-இளையோர்
          சென்றுமே பெரியோரைப் பணிவார்

   உண்டிடக் கொடுப்பவன் உழவன்!-நம்
           உயிரையும் காப்பவன் உழவன்!-பெரும்
   தொண்டினைச் செய்பவன் உழவன்!-நாம்
            தொழுதிட உரியவன் உழவன்!

                                  புலவர் சா இராமாநுசம்

Thursday, January 15, 2015

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்!



தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
        கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
 வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
       விளைந்திட அறுவடைப்   பொங்க லிட்டான்
 மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
       மனித நேயத்துக்கே வித்தி டுவான்
 பாட்டுக்கே அன்னவன் உரிய  வனாம்-தமிழ்ப்
       பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்க ளய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்

Monday, January 12, 2015

கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்


ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்
இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்
வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்
வருகயென வரவேற்று திரண்டு வந்தார்
கூறத்தான் இயலுமா பட்டத் துயரம்
கொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்
மாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்
மன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்!


கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்
வெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ
வேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே
பட்டியிலே மாடுகளை அடைத்தல் போல
பசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள
எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...