Friday, July 12, 2013

வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன் !


வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்ற காவியமே
செயறகை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கை செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 10, 2013

ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே


சாதலே மிகவும் இன்னாது-என
சாற்றிய வள்ளுவன் மாற்றியதை
ஈதல் இயலா தென்றாலே-அதுவும்
இனிதெனச் சொல்லிப் போற்றியதை
காதில் வாங்கி நடப்பீரா-ஏழைக்
கண்ணிர் தன்னைத் துடைப்பீரா
ஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா
இன்பம் காணும் சுகவாழ்வே

பெற்றான் பொருளைக் காப்பாக-அதனைப்
பேணிக் காக்கும் நோக்காக
அற்றார் அழிபசி தீர்ப்பீரே -பெரும்
அறமென செல்வம் சேர்ப்பீரே
உற்றார் இல்லார் உறவில்லை-பசி
உற்றார் எவரோ? கணக்கில்லை
நற்றா யாக ஏற்றிடுவீர்-நாளும்
நற்பணி யாகவே ஆற்றிடுவீர்

ஈத்து உவக்கும் இன்பந்தான்-வாழ்வில்
ஈடில் ஒன்றென அறியாதான்
பார்த்துப் பார்த்துப் பொருள்தேடி-அதை
பதுக்க பாவம்! மண்மூடி
காத்திருந் தவன் கைபற்ற-அந்தோ
காணா தவன்கண் நீர்வற்ற
சேர்த்தேன் அனைத்தும் என்னபலன்-வீணே
சென்றதே இன்று கண்டபல

புலம்பி அழுதால் வந்திடுமா-போன
பொருளும் பாடம் தந்திடுமா
விளம்பும் குறளின் வழிசெல்வீர்-அதுவே
விவேகம்! உணரின் நீர்வெல்வீர்
தளும்பா நிறைகுட நிலைபெற்றே-எதுவும்
தனக்கென வாழா உளம்பெற்றே
அழுவார் துயரைப் போக்கிடுவீர்-அவர்
அன்பை நெஞ்சில் தேக்கிடுவீர்

-புலவர் சா. ராமாநுசம்

Monday, July 8, 2013

நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?





அணைந்துவிட்ட  சாதித்தீ  மீண்டும்  இன்றே –கொடிய
    ஆலகால விடமாக  மாற  நன்றே!
இணைந்துவிட்ட  காதலர்கள்  பிரிந்தோர்  ஆக –அந்தோ
    இளவரசன்  உயிர்மட்டும்  பறந்து  போக!
நனைந்துவிட  துயராலே பல்லோர் உள்ளம் – இன்றே
    நாடெங்கும்  பாயுதய்ய ! கண்ணீர் வெள்ளம்!
நினைந்திதனை  வருந்துமா ! பாழும் உலகம் –மேலும்
    நீளாது  திருந்துமா  மூளும்  கலகம்!

உண்மையிலே  சாதிதன்னை  ஒழிக்கும்  எண்ணம் –இங்கு
   உருவாக  வில்லையெனில், ! அழிக்கும்!  திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற  நிகழ்வு  எல்லாம்- அதற்கு
   ஆதார  மானதென காட்டும்  சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே  காரணம்  ஆகும் –சாதிப்
    புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே  போகும்!
வண்மைமிகு  சட்டத்தால்  பயனே  இல்லை! –நாளும்
    வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ  எல்லை!

ஓட்டுதனைக்  குறிவைத்தே  சாதி இங்கே – மனித
    உணர்வுகளை  தூண்டிவிடின் ஒழிதல்  எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற  பொம்ம  லாட்டம் –கட்சி
    அரசியலார் அனைவருமே கொள்ளும்  நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென  திட்டம்  போட்டே –அறியா
    ஏழைகளை  ஏமாற்றி  ஓட்டு  கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை  நடக்கும்  ஒன்றே- இதனை
    நம்புகின்ற  மக்கள்தான்  உணர்தல் என்றே!?

                           புலவர்  சா  இராமாநுசம்
    

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...