Friday, March 28, 2014

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!



 அன்பின்  இனிய  உறவுகளே!  வணக்கம்!

        ஒரு  மகிழ்ச்சியான  செய்தி!

   என் வலைவழி நான்  எழுதிய  சில  கவிதைகளைத்  தொகுத்து,   வலையில்  வந்தே  அலையில் மிதக்கும்  கவிதைகள் என்ற  பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)
சீதை பதிப்பகத்தின்  வாயிலாக வெளி வந்தது

        தற்போது  அப்  புத்தகத்திற்கு , தமிழ்நாடு  மத்திய
நூலக ஆணைக்குழு  ஆயிரம் பிரதிகளை  வாங்க அனுமதி
வழங்கியதோடு, வாங்கியும் விட்டது  என்பதை  அன்போடு  தெரிவித்துக்
கொள்கிறேன்

     நூலை  வெளியிட்ட சீதை  பதிப்பகத்திற்கும். மத்திய  நூலக
ஆணைக்குழவிற்கும் , தமிழக  அரசுக்கும், என்னை  நாளும்
ஆதரித்து ஆக்கமும்  ஊக்கமும் தரும்  அன்பு  உறவுகளாகிய உங்களுக்கும்  உளம் கனிந்த  நன்றி! நன்றி!

            புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, March 25, 2014

முகநூலில் என் அகம் பதித்தவை!





உறவுகளே வணக்கம்!

பூக்கின்ற எல்லாப் பூக்களும் பிஞ்சாவதில்லை! எல்லா பிஞ்சுகளும் காயாவதில்லை! எல்லாக் காய்களும் கனியாவதில்லை! எனவே, வாழ்கையில், நாம் எண்ணும் எண்ணங்களும், செய்ய முற்படும் செயல்களும் பலபலவே
ஆனாலும், சிலசிலவே வெற்றி பெறும் ,என்பதை உணர வேண்டும்! அதுதான் அமைதியான வாழ்கைக்கு வழி கோலும்

நெருஞ்சி முள் நிறைந்த இடத்தில் வெறும் காலை வைத்தால் பாதம் முழுவதும் முள் குத்திக் கொள்ளும்! ஐயோ என்று காலை மாற்றி மாற்றி வைத்தாலும் அதே நிலைதான்! அது தீரவேண்டுமென்றால் ,முள்ளற்ற இடம் நோக்கிப் போக வேண்டும்! அதுபோல, சில சூழ்நிலைகளில் , சில நிகழ்ச்சிகள்
நம், மனதில் முள்ளாகக் உறுத்திக் கொண்டே இருக்கின்றன
என்றால் ,அதைவிட்டு விலகி வேறு வகையில் எண்ணங்களை
திருப்புவதே புத்திசாலித்தனமாகும்!


ஒருநாள்தான் வாழ்வு , என்றாலும் மலர்கள் பூக்கத்தானே செய்கின்றன! அதுவும், தனக்கே உரிய அழகும், நிறமும் மாறாமல்,மனதை மயக்கும் மணத்தை வீசி, காலா காலமாக, இயற்கையோடு இணைந்து நடப்பதை கண்டும், இந்த மனிதப் பிறவிகள் மட்டும் இயற்கைக்கு மாறாக,ஏன், எதிரியாக நடந்து
கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்!
புரியவில்லையே! பகுத்தறிவு , என்று, ஒன்று இருப்பதுதான் காரணமோ!!!?

அழகானவை!

குற்றமில்லாமல் திருத்தமா பேசுதலே கல்வி கற்றவர்களுக்கு அழகாகும்!
செல்வம் உடையவர்கள் , தம் நெருங்கிய சுற்றத்தாருக்கு உதவி
செய்தலே அழகாகும்!
வேதம் ஓதுகின்ற வேதியர்களுக்கு ஒழுக்கமே அழகாகும்!
நீதி, தவறாமல் ஆட்சி செய்வதே அரசனுக்கு அழகாகும்!
வாணிகம் செய்வார்க்கு மேலும், மேலும் வருமானத்தைப்
பெருக்குவதே அழகாகும்!
உழவர், உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே அழகாகும்!
(வெற்றிவேற்கை)


உலக நீதி! குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டியவை!

படிக்காமல் ஒருநாளும் இருக்காதே!
பிறர் மனம் வருந்தும்படி எதையும் சொல்லாதே!
பெற்ற தாயை என்றும் மறவாதே!
வஞ்சனையாய் தீமை செய்வாரோடு சேராதே!
போகத் தகாத இடங்களுக்குப் போகாதே!
ஒருவர் நம்மை விட்டுப் போனபின்பஅவரைப்பற்றி
இழிவாகப் பேசாதே!
(தெடரும்)


பொதுவாக ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்றாலும், வாய் ,அதாவது நாக்கு ,அதைமட்டுமாவது
அடக்கியே வாழ வேண்டும்! வள்ளுவர் இதனைப்பற்றி தனியாகவே கூறுகிறார் ! நம்முடைய வாய் பேசுவதற்கும் ,உண்ணும் உணவின் சுவையை அறிவதற்கும் துணையாக இருப்பதே நாக்குதான்! ஒருவன் , புலன்களில் எதனை அடக்க
முடியாவிட்டாலும் நாக்கை மட்டுமாவது கட்டுப் படுத்தாமல் விட்டால் , மற்றவர்களின் இழி சொல்லுக்கும், பழி சொல்லுக்கும் ஆளாகி சோகத்தையே முடிவாக பெறுவார்கள்

தகாத சொற்களைப் பேசுவதால் வருவது தண்டணைதான்
என்ற நேர் பொருளோடு ,குறிப்புப் பொருளாக, சுவை அறிய உதவும் நாக்கால் தகாத(உடல் நலத்திற்கு) உணவுகளை உண்ணுவதும் கேடுதான் என்பதையும், நயமாக உணர்த்துவது
இன்புறத் தக்கது!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு -குறள்

     

      புலவர்  சா  இராமாநுசம்


   

Monday, March 24, 2014

வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க வழியில்லா மக்கள்தான் பரதேசி யிங்கே!



வானத்தை  முட்டுவதா  விலைவாசி யிங்கே – வாங்க
   வழியில்லா மக்கள்தான் பரதேசி  யிங்கே!
ஏனென்று  கேட்காத  ஊடகங்க ளிங்கே - ஏதும்
   எல்லையின்றி  நடக்கின்ற நாடகங்க ளிங்கே!
தானின்று நடக்கின்ற  நாடுமது மிங்கே- மக்கள்
   தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவதும் தேளாகும்!  இங்கே –நாளும்
   திகைப்போடு கேட்கின்றார்  அரசுதான் எங்கே?
 
 
கால்கிலோ  காய்கூட  வாங்கிடவே இயலா –ஏழைக்
   கண்ணீரைத்   துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு  காணா-சாகா
   நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை  நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
   ஆதரவு  தந்தார்க்கு  செய்கின்ற   தொண்டா?
மாள்வாரா  மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
   மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!
 
 
நஞ்சாக ஏறிவிட  நாள்தோறும் அந்தோ –தெரு
  நாய்போல அலைகின்றார் உள்ளமதும்  நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
   பேசியே திரிகின்ற  பித்தனாய்ப் போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்
    பாராளும் தேர்தலில்  மறந்துடு  வாரோ?
அஞ்சாது நடக்காதீர்!  ஆள்வோரே ஈண்டும் –உடன்
    ஆவனவும்  செய்தால்தான் வருவீராம்  மீண்டும்!
                                புலவர்  சா  இராமாநுசம்
உரிய நேரம் கருதி  மீள்பதிவு!

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...