கோடை வெயில் தொடங்கியதே-அதன்
கொடுமையில் தெருவே முடங்கியதே!
ஆடையோ! வேர்வையில் குளித்ததுவே-மிக
அனலில் உடலும் எரிந்ததுவே!
குடையோ! கையில் விரிந்திடவே-சற்றும்
குறையா! வெம்மை! புரிந்திடவே!
நடையோ, அடடா! படுவேகம்-அவர்
நடப்பதைக் காணின் படுசோகம்!
வீடு வந்தால் மின்கட்டே-வழியும்
வேர்வை ஓடும் தரைத்தொட்டே!
காடும் இதைவிட நன்றாமே!-வெயில்
கடுமை அங்கு இன்றாமே!
சூடு பட்டும் உணர்வில்லை!-ஏதும்
சுரணை நமக்கும் வரவில்லை!
கேடு நீங்கும் நாள்வருமா?-இக்
கேள்விக்குக் காலம் பதில்தருமா?
ஆண்டுகள் தோறும் இதுதானே!-மாறி
ஆள்பவர் வரினும் இதுதானே!
தூண்டில் சிக்கிய மீனாக,-உயிர்
துடித்துமே போகும் தானாக,
வேண்டுமா எண்ணிப் பாருங்கள்-வழி
வேதனைத் தீர கூறுங்கள்!
கூண்டில் அடைத்த கிளியானோம்-என்றும்,
கோழையாய் இருந்தே பலியானோம்!
புலவர் சா இராமாநுசம்
| Tweet |

