Tuesday, December 27, 2011

மாட்சிமை மிக்க மேயரய்யா!



 ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னை காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
புலவர் சா இராமாநுசம்

 

Monday, December 26, 2011

ஓடி உதைத்து விளையாடு!


ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்

Saturday, December 24, 2011

நாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்



தலைநகர் வாழும் தமிழர்களே-நாளை
    தன்மானம் காப்போம் திரளுங்கள்
அலைகடல் சீரணி அரங்கத்தின்-முன்
    அலையலை எனவே வாருங்கள்
நிலைபெற முல்லை அணைகட்டும்-உரிய
   நீதியின் குரலே முழங்கட்டும்
இலையிடம் துளியென கூடட்டும்-கேரள
    எதிரிகள் மிரண்டு ஓடட்டும்

உடைப்போம் அணையை என்கின்றார்-இது
    உறுதி உறுதி என்கின்றார்
எடுப்போம் அனைவரு உறுதிமொழி-நம்
   எதிர்பை காட்டும்  இறுதிவழி
தடுப்போம் உயிரைக் கொடுத்தேனும்-வீரத்
   தமிழனாய் வாழ்வோம் இனியேனும்
தொடுப்போம்  அறப்போர் திரளுங்கள்-பலி
    தேவையா ஆள்வோர் கூறுங்கள்

எங்கும் மக்கள் வெள்ளமென-கண்
    எட்டிய வரையில் சொல்லவென
பொங்கிய கடலாய் பொங்கட்டும்-மக்கள்
    புரட்சியின் குரலே ஓங்கட்டும்
சிங்கம் போன்றே எழுவீரே- பெரும்
   சென்னை மாநகர் வாழ்வோரே
அங்கம் துடித்திட  வாருங்கள்-சீரணி
   அரங்கத்தின் முன்னே திரளுங்கள்
           
                      புலவர் சா இராமாநுசம்
  

Friday, December 23, 2011

மிக நன்றா? ஒன்றா? கூறுங்கள்!



ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்
     
      
      
           

Thursday, December 22, 2011

கவிதைப் பிறந்தச் சூழ்நிலை-1


இனிய அன்பர்களே!
      சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
      அவ்வகையில் வந்த கவிதை இது!
      ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
      இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
      அழுது புலம்பியது. நண்பரிடம் தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
       யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
                நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
       அடுத்த நாளே வந்து விட்டான்!
            
             அன்னையின் கண்ணீர் இங்கே
                 ஆறெனப் பெருகி ஓட
             சென்னையும் சென்றாய் அங்கே
                 சென்றுநீ என்னக் கண்டாய்
             உன்னுரு காட்டும் நிழலை
                  ஒழித்திட முயலல் மடமை
             என்னுயிர் நண்பா இதனை
                   எண்ணிட மறந்தாய் ஏனோ
             
             இடமிலை என்று நீயும்
                   இவ்வூரினைப் பிரிந்து செல்ல
               திடமிகு உமதுத் தந்தை
                   தீதென்ன செய்தேன் என்றே
              உடலுமே குலுங்க குலுங்க
                  உள்ளமே நொந்து அழுதார்
               மடமையாம் நண்ப இந்த
                   மனநிலை பெற்றாய் ஏனோ
              
             பெ ற்றவர் சுற்றம் நீங்கி
                  பிரிதொரு ஊரும் செல்ல
               பற்றுமே அற்றார் போல
                  பறந்தனை இரவில் நன்றோ`
               கற்றவர் செய்யும் செயலா
                  கண்ணீரோ வெள்ளம் புயலா
                உற்றவன் நீதான் என்றால்
                   உடனடி விரைந்து வாவா!

                                புலவர் சா இராமாநுசம்

Tuesday, December 20, 2011

செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!



விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
    விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
    மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை சங்கப் பதிவை- பற்றி
     எழுதினேன்! வலைதன்னில்! எனினும், முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
    பொறுப்பேற்பீர்! தக்கோரே! வருக! வருக!

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
     தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவை
    சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-நல்
    அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்
    சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்

தன்நலமே இல்லாமல் சேவை செய்ய-கொள்கைத்
    தடுமாற்றம் இல்லாமல் அன்பைப் பெய்ய
பொன்மனமே கொண்டவரே வருக! வருக-நல்
    பொதுநலமே சேவையெனத் தருக! தருக!
எத்தனைப்பேர் வருவார்கள் தெரிய வில்லை-உடன்
    ஏற்றயிடம் உறுதி செய்ய இயலவில்லை
சித்தமதை, வருகைதனைச் செப்ப வேண்டும்!-மேலும்
    செயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்!

                                       புலவர் சா இராமாநுசம்

Sunday, December 18, 2011

சங்கப் பதிவு, இரண்டாம் கட்ட நடவடிக்கை!


அன்புடையீர்
              வணக்கம்!
இன்று இப் பதிவில் சங்கத்தின் இரண்டாவதுக் கட்ட
நடவடிக்கைப் பற்றிய விவரங்கள்!
               தமிழ்நாடு மொத்தம் முப்பத்திரண்டு
 மாவட்டங்களாகும்
              உடன்
           
மாவட்டங்கள் செய்ய வேண்டிய
பணிகள்!
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர்
முன் நின்று அம் மாவட்டத்திலுள்ள வலைப்
பதிவர்களைச் சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்க்க
வேண்டும்
 
          பிறகு, உறுப்பினர் அனைவரும் சேர்ந்து
அம் மாவட்டத்திற்குரிய, தலைவர், செயலாளர்,
பொருளார், துணைத்தலைவர், துணைச் செயலர்
ஆகியோரைத் தேர்வு செய்ய வேண்டும்
        
இவர்களே ஆட்சியாளர் ஆவர்
 இவர்கள் தவிர மேலும் செயற்குழு உறுப்பினர்களாக
ஐந்து அல்லது ஏழு பேரைத் தேர்வு செய்யவேண்டும்
     
ஆக இந்த,  பத்து அல்லது பன்னிரண்டுபேர்
சேர்ந்த குழுவே  அம் மாவட்டத்திற்குரிய
செயற்குழு ஆகும்
        
மொத்த உறுப்பினர் அனைவரும் அம்
மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்
       
எனவே, இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ளவர்கள், செயல் பட்டு தங்கள் மாவட்டத்தின்
ஆட்சியாளர்கள்குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகிய
வற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

     அடுத்தது மாநிலக்கழகம்!
   -----------------------------------------------------
மாநிலச் செயற்குழு-
  
         மாவட்டந்தோறும் தேர்வு செய்யப்பட்ட,
ஆட்சிக் குழுவில் உள்ள, தலைவர் செயலர், பொருளர்
ஆகிய மூவரும், (மொத்தம் 96) சேர்ந்ததே மாநிலச் செயற்குழு
ஆகும்.

மாநிலப் பொதுக்குழு-
          
மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட செயுற்குழு
உறுப்பினர்களை  சேர்ந்த குழுவே மாநிலப் பொதுக்குழு ஆகும்
 
பிறகு தமிழகத்தில் மையப் பகுதியில், அனைவரும் கலந்துக்
கொள்ள, வசதியான பொது இடத்தில் மாநிலப்பொதுக்குழுவைக்
கூட்ட வேண்டும்,
       
அக் கூட்டத்தில்  மாநிலத் தலைவர், மாநிலச் செயலர்
மாநிலப் பொருளர், ஆகியோரும், மேலும் தேவைக்கு ஏற்ப
துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் ஆகிய ஆட்சிக்
குழுவைத் தேர்வு செய்ய வேண்டும்
     
மேலும், சங்கத்திற்குரிய சட்டதிட்டங்கள்,
நோக்கம், வெளிநாடுகளில் உள்ள தமிழ் வலைப்
பதிவர்களை எம்முறையில் சேர்த்துக் கொள்வது
என்பவைப் பற்றி எல்லாம் மாநிலப் பொதுக் குழுவில்
ஆய்வு செய்யவேண்டும்.
       
மாவட்டச் சங்கங்கள் மேற்கண்டவாறு
செயல்பட்டு தற்போது பதிவு செய்யப்பட உள்ள
தலைமைச் சங்கத்திற்கு அறிக்கையை அனுப்பப் வேண்டும்
     
         அவர்கள் தான் முறையா மாநிலப் பொதுக்
குழுவைக் கூட்டி தேர்தலை நடத்துவார்கள்

         இவையே அடிப்படைப் பொதுவான
நடைமுறை விதிகளாகும்
          
பிற பின்னர்
  
ஐயமிருப்பின் கீழ் வரும் என் தொலைபேசியில்
             தொடர்பு கொள்ளவும்
தொலை-24801690        அலைபேசி-90944766822
               அன்பன்
        புலவர் சா இராமாநுசம் 


    
     

Thursday, December 15, 2011

முந்தைய பதிவிற்கு முக்கிய விளக்கம்!



அன்பர்களே!
          முந்தைய பதிவில் முதற்கட்டப் பணிகளைப் பற்றிய
விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன்
           இன்று இரண்டாவதுக் கட்டப்பணிகள் பற்றி எழுது
வதாக இருந்தேன்.அதைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டி
இருப்பதால் திங்களன்று எழுதுகிறேன்
    அதற்கு முன்னதாக சிறு விளக்கம் தர விரும்புகிறேன்
         முந்தைய பதிவில் மூன்று மாவட்டங்கள் என்று நான்
குறிப்பிட்டதை மற்ற மாவட்டங்கள் ஏதோ தங்களை ஒதுக்கி விட்ட
தாகக் கருதுவதுபோல் ஐயப்படுகிறேன்! எந்த மாவட்டமானாலும்
யார் விரும்பினாலும் தாராளமாக வரலாம்
         மேலும் தற்போது ஏற்படுத்தும் பொறுப்பாளர்கள் தற்
காலிகமே! அவர்கள் பதவிக்காலம் இரண்டொரு மாதங்களே
ஆகும் பொங்கல் திருநாள் சென்றபின் சனவரி கடைசி வாரத்தில்
அல்லது பிப்ரவரி முதல் வரத்தில் எல்லா மாவட்டங்களைச்
சேர்ந்த  பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி முறையாக
பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் அவர்களே
அதிகாரப் பூர்வமாகச் செயல் படுவபராவார்
          உடனடி பதிவு செய்வதற்கும் இந்த இடைக்
காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கும்
இந்த தற்காலிக அமைப்புத்  தேவையாகும்!
         எந்த மாவட்டங்களில் எத்தனைப் பேர் உள்ளனர்
என்ற கணக்கு எனக்குத் தெரியாது. எனவேதான் தற்போது
பதிவு செய்ய நமக்குத் தேவை குறைந்த எண்ணிக்கை
தானே,பக்கத்துப்பக்க  மாவட்டங்களே போதுமே சற்று
தூரமிருந்து  வருவது வீண் சிரமம்தானே என்று கருதினேன்
     
         ஆர்வத்தோடு யார் வருவதானாலும் நன்மையே!
மனங்கலந்து பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்!
எத்தனை பேர் வருவார்கள் என்ற கணக்கு முன்னதாக
எனக்குத் தெரிந்தால் தான் கூட்டம் நடத்த ஏற்ற இடம்
ஏற்பாடு செய்ய இயலும்
         ஆகவே யார் யார் வருகிறீர்கள் என்பதை இப்
பதிவின் கீழ், பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
உறுதிப்படுத்தி மறுமொழி தருமாறு வேண்டுகிறேன்
      நான்கு நாட்களுக்குள் அதாவது திங்கள்வரை
எதிர் பார்க்கிறேன்!
                நன்றி!            அன்பன்
                            புலவர் சா இராமாநுசம்
                                          வணக்கம்  

       தொலைபேசி -24801690  செல் -9094766822
                              

Wednesday, December 14, 2011

இனிய வலைப் பதிவு அன்பர்களே!



இனிய வலைப் பதிவு அன்பர்களே!
                               வணக்கம்!

      நமக்கொருப் பாதுகாப்பாகச் சங்கம் ஒன்று தேவை
என்று நான் எழுதியிருந்த கருத்துக்கு ஆதரவாகவும்,
 ஆலோசனைக் கூறியும் நாற்பத்தெட்டுபேர் மறுமொழி
அளித்துள்ளீர்கள்
       உங்கள் அனைவருக்கும் என் நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்
        தனி மரம் தோப்பாகாது நான் மட்டுமே எதையும்
செய்துவிட இயலாது மேலும் என் வயது எண்பது என்பதை
நீங்கள் அறிவீர்கள்.
    எனவே முதலிலேயே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்
சிலர் எழுதியுள்ளதைப் போல நானே முன்நின்று,அல்லது
பொறுப்பேற்று நடத்துவது என்பது வயதின் காரணமாக
 இயலாத ஒன்று  என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்
கொள்கிறேன் உடல் உழைப்பு தவிர மற்ற எந்த உதவிகளையும்
செய்யத்தயாராக உள்ளேன்
      ஆனால் சங்கத்தைப் பதிவு  செய்யும் வரை வேண்டிய
முன் ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன்!
     முதற்கண் சங்கம் பற்றிய சில குறிப்புகளை இங்கே
தருகிறேன்
       சட்டப்படி  சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு முதல் பதினைந்து
இருபது உறுப்பினர்கள் இருந்தாலே போதும். பதிவு செய்து விடலாம்
 அதாவது,தற்காலிகமாக தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர்
ஆகிய பொறுப்பாளர்களையும் மற்றவர் உறுப்பினர்களாகவும் அமைத்து
 அவர்களின் கையொப்பத்தோடு முகவரியும் குறிப்பிட்டு பதிவகத்தில்
உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்
        இது, முதல் பணி!
அடுத்து இரண்டாவது கட்டமாகநாடு தழுவிய பொதுக்குழு, ஆட்சிக்குழு,செயற்குழு
ஆகியவற்றை அமைத்தல் வேண்டும் இது இரண்டாம் கட்டப் பணி!
       முதற் கட்டப் பணி முறையாக அமைத்து அதன் பிறகு
இரண்டாம் கட்டப் பணியைத் தொடங்கலாம்
         முதற் கட்டப் பணிப்பற்றிய என் கருத்துக்கள்!
 
1 பதிவு சென்னையில் செய்ய வேண்டும்.
  2 தேவையான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்

இதற்கான வழியாக நான் கருதுவது, சென்னை
செங்கை,திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட
வலைப் பதிவர்களை சென்னையில் ஒரு பொது
இடத்தில் கூட்டி  கலந்தாய்வு செய்து மேற்
கண்ட தற்காலிகப் பொறுப்பாளர்களை
 தேர்வு செய்து பதிவு செய்யலாம்
    
        இதற்கான பணிகளை நான் செய்கிறேன்!
இக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதானால்
உங்கள் கருத்துக்களை உடன் முன்போல்
மறுமொழி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்!
                        அன்பன்
               புலவர் சா இராமாநுசம்


      
    

Monday, December 12, 2011

எழுவாய்த் தமிழா எழுவாயா...?


எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்


 

Saturday, December 10, 2011

பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?



  பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?

          அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
          விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
        அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால்  சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
 
    இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
        தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
       நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும்  நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
 
       உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
         -----------------------------------------------------------------------------
 என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
  பெயரிலோ செயல்படலாம்
  
          முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள்  இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
         நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
        முதலில், அமைப்பு  வேண்டுமா வேண்டாம
 என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
            
                           பிற பின்னர்
                            
                                     அன்பன்
                       புலவர் சா இராமாநுசம்
        

       

Friday, December 9, 2011

விலையைக் குறைப்பீர் ஆள்வோரே



அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
   அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
   வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
   தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
   உணர்ந்த ஞானி அன்னாரே

ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
   ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
   கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
   மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
   சண்டைகள் தேவையா இனிமேலும்

சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
   சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
   தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
   சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
   பாவம் மக்கள் ஊர்தோறும்

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
   நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
   நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
   பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
   விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!

                              புலவர்  சா இராமாநுசம்

Thursday, December 8, 2011

நானா நீயா பாரென்றே



 நானா நீயா பாரென்றே
     நடத்திய மத்திய அரசின்றே
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார்

முடங்கிப் போனதே அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்
 அடங்கிப் போனதே பலனென்ன
     அழிந்ததுப் பணமே கோடியன்ன
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்து தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

Tuesday, December 6, 2011

வலையுலக அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்!



   இனிய அன்பு நெஞ்சங்களே!
                  முதற்கண், உங்கள் அனைவருக்கும் என் பணிவான
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
            இதுவரை என் வலைவழி நான் எழுதியுள்ள கவிதைகளை
நூலாக வெளியிட முடிவு செய்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்
            விரைவில் வெளிவர இருக்கிறது தேதி முடிவானதும்
அறிவிக்கப்படும்!
         மேலும் வெளிவர இருக்கின்ற நூலில் சிலப் பக்கங்களை
ஒதிக்கி என் கவிதைகளைப் பற்றிய உங்கள் சிறப்பான கருத்துக்களை
யும் வெளியிட விரும்புகிறேன்.
         எனவே, இனிய நெஞ்சங்களே, இப்பதிவின் கீழே தங்கள்
கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்
        கருத்துக்கள் பொதுவானதாக,இரண்டு மூன்று வரிகளில்
அமையுமாறு இருத்தல் நலமென்று மிகப் பணிவன்போடுத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
       அதில் தங்கள் வலைப்பெயர் உள்நாடுஎனில் ஊரும்
 வெளிநாடு எனில்,நாட்டின் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன்
அதை அப்படியே படி எடுத்து வெளியிடுவேன்
                
                      நன்றி!
                                   அன்புடன்
                             புலவர் சா இராமாநுசம்
                   
      
           



 

Monday, December 5, 2011

பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்


தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
  தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
  அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
  என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
  நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!

துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
  துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
  தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
  என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
  உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா

இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
  இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
  பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
  நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
  கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!

குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
   குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
   உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை  அறிவதுதான் என்றோ
   அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
   விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்

தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
   தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
   ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான்  கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
   அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
   பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
         
                        புலவர் சா இராமாநுசம்
  
         கல்லூரியில் படித்த போது எழுதியது
        
  

Saturday, December 3, 2011

உணர்வை அணுவேனும் கொண்டாயா?



கரைந்தே உண்டிடும்
காக்கையைப் போலவே
விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த
விவேகம் தனையேனும் எய்தாயா?

தன்னினம் காத்திட
தன்குரல் எழுப்புமே
உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
உணர்வை அணுவேனும் எய்தாயா?

கூட்டுள குஞ்சுக்கும்
கொத்திடும் அலகாலே
ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
உணர்வை அணுவேனும் பெற்றாயா?

கன்றதைக் காணாது
கத்திடும் தாய்பசு
ஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

வளர்த்திடும் நாய்கூட
வாலாட்டி நன்றியாம்
உளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

தட்டினால் மாடுகள்
தானாகப் பாதையில்
ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

           புலவர் சா இராமாநுசம்



 

Friday, December 2, 2011

தீதும் நன்றும் பிறர் தம்மால்



திரைகடல் ஓடு என் றாரே
   திரவியம் தேடு  என் றாரே
குறையிலா வழியில் அதைப் பெற்றே
   கொள்கையாய் அறவழி தனைக் கற்றே
நிறைவுற அளவுடன் நீதி சேர்ப்பீர்
   நிம்மதி அதனால் வரும் பார்ப்பீர்
கறையிலா கரமென புகழ்ப் பெறுவீர்
   கண்ணியம் கடமை என வாழ்வீர்

வையம் தன்னில் வாழ் வாங்கும்
   வாழின்! வாழ்வில் பெய ரோங்கும்
செய்யும் எதையும்  தெளி வாகச்
   செய்யின் வருவது களி வாகப்
பொய்யோ புரட்டோ செய் யாமல்
   போலியாய் வேடம் போடா மல்
ஐயன் வழிதனில் செல் வீரே
   அன்பால் உலகை வெல் வீரே!

தீதும் நன்றும் பிறர் தம்மால்
   தேடி வாரா! வருதோ நம்மாலே
நோதலும் தணிதலும் அவ் வாறே
   நவின்றனர் முன்னோர் இவ் வாறே
சாதலின் இன்னா திலை யென்றே
   சாற்றிய வள்ளுவர் சொல் ஒன்றே
ஈதல் இயலா நிலை என்றால்
  இனிதாம் அதுவும் மிக என்றார்!

எல்லா மக்களுக்கும் நலம் ஆமே
   என்றும் பணிவாம் குணம் தாமே
செல்வர் கதுவே பெருஞ் செல்வம்
   செப்பிடும் குறளாம் திருச் செல்வம்
நல்லா ரவரென புகழ் பெற்றே
   நாளும் நாளும் வளம் உற்றே
பல்லார் மாட்டும் பண் பாலே
  பழகிட வேண்டும் அன் பாலே

                              புலவர்  சா இராமாநுசம்

Wednesday, November 30, 2011

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்



கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
      அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
       பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
       தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
       வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
      கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
      ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
      அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
      எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே

தலைமுறை பலவும் தாண்டிய போதும்
      தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
      நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
     கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
     மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்

                        புலவர் சா இராமாநுசம்

Monday, November 28, 2011

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி
    துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
    வேதனை மண்டியே மனதினில் ஓட

தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
    தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
    விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்
    இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
    ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்
    சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
    ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
    தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
    இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
      பலமிக்க  மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
      நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
      வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
      பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!
        
                       புலவர் சா இராமாநுசம்

Sunday, November 27, 2011

வாரீர் உலகத் தமிழர்களே


 இன்றவர் பிறந்த ஒருநாளாம்-நல்
     ஈழ மக்கள் திருநாளாம்!
குன்றென கொண்ட மனத்திண்மை-அவர்
    குமுறும் எரிமலை நனிஉண்மை!
என்றுமே அவர்தான் மாவீரர்-மிக
    இனவெறி சிங்களக்கொடும் பாவிநீர்
ஒன்றே ஒன்றாம்  உணர்வீரே-அவர்
    ஒருநாள் மீண்டும் வருவாரே

வீரம் என்றும் அழிவதில்லை-மா
     வீரர் அழிந்தது மெய்யில்லை!
நேரம் வரும்போ துலகறியும்-அந்த
      நிலமை எதிர்நாள்! அதுதெரியும்!
ஆரம் சூட்டி வரவேற்கும்-மா
    அகிலம் போற்ற புகழ்சேர்க்கும்
வாரீர் உலகத் தமிழர்களே-மா
     வீரரை வாழ்த்துவோம் வாழ்கயென
     
          புலவர் சா இராமாநுசம்

Friday, November 25, 2011

சொல்லல் யார்க்கும் எளி தன்றோ



நினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்
     நினைவில் ஏனோ வர வில்லை
அனைத்தும் மனதில் மறைந் தனவே
    அறிவில் குழப்பம் நிறைந் தனவே
தினைத்துணை  அளவே செய் நன்றி
    தேடிச் செய்யின் மன மொன்றி
பனைத்துணை யாகக் கொள் வாரே
    பயனறி உணரும் நல் லோரே

அடுத்தவர் வாழ்வில் குறை கண்டே
     அன்னவர் நோக அதை விண்டே
தொடுத்திடும் சொற்கள் அம் பாக
     தொடர்ந்து அதுவே துன் பாக
கெடுத்திட வேண்டுமா நல் லுறவை
     கேடென தடுப்பீர் அம் முறிவை
விடுத்திட வேண்டும் அக் குணமே
     வேதனை குறையும் அக் கணமே

கீழோ ராயினும் தாழ உரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை
வீழ்வே அறியா பெரும் பேறே
   விளைவு அதனால் நற் பேரே
பேழையில் உள்ள பணத் தாலே
   பெருமையும் வாரா குணத் தாலே
ஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்
   இணையில் இன்பம் தேக்கி டுவீர்

மக்கள் தொண்டு ஒன்றே தான்
   மகேசன் தொண்டு என்றே தான்
தக்கது என்றே சொன் னாரே
   தன்நிகர் இல்லா அண் ணாவே
எள்ளல் வேண்டா எவர் மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
சொல்லல் யார்க்கும் எளி தன்றோ
   சொன்னதை செய்தல் அரி தன்றோ

                  புலவர் சா இராமாநுசம்

Thursday, November 24, 2011

மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை



மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது
    மனமென்னும் நிலத்திலே போட்ட விதை
இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல
    எண்ணினால வந்துடன் கண்ணில் படும்
புறமாக அகமாக சங்கம் தொட்டே-புலவர்
    புனைந்தது பத்தோடு தொகையும் எட்டே
அறமாக வந்தப்பின் நூல்கள் கூட-மரபு
    வழியொற்றி வந்ததாம்  பலரும் பாட

ஒருமுறை உள்ளத்தில் தோன்றி விட்டால்-நம்
    உயிருள்ள வரையிலே நினவைத் தொட்டால்
வருமுறை மரபுக்கே உண்டு யொன்றே-கவிதை
    வடிக்கின்ற அனைவரும் அறிந்த ஒன்றே
இருமுறை சொன்னாலே எதுகை மோனை-நெஞ்சில்
    எடுத்ததை தந்திடும் கவிதைத் தேனை
திருமுறை எந்நாளும் மரபே ஆகும-இன்றேல்
    தீந்தமிழ் சீர்கெட்டே மங்கிப் போகும்

இலக்கியம் கண்டேபின் இலக்கணம கண்டார்-பின்
    எதற்காக அன்னவர் மரபினை விண்டார்
கலக்கமே மொழிதன்னில் வருதலும் வேண்டாம்-என
    கருதியே மரபென வகுத்தனர் ஈண்டாம்
விளக்கமாய் அவரதை செல்லியும் உள்ளார்-அதன்
    வீணென்று எண்ணிட எவருமே சொல்லார்
அளக்கவே இயலாதாம் செம்மொழி சிறப்பே –அதை
    அழியாமல் காப்பதும் நமக்குள்ளப் பொறுப்பே

மழைநாளில் தோன்றிடும்  காளானைப் போல-உடன்
    மறைவதா எண்ணுவீர் கவிதையும்  சால
விழைவீரா அருள்கூர்ந்து கவிஞரும் நீரே-இதென்
    வேண்டுகோள் மட்டுமே  மாசில்லை வேறே 
பிழையாக யாரையும் நானசொல்ல மாட்டேன்-வீண்
    பிடிவாதம் பிடித்திங்கே கவிதீட்ட மாட்டேன்
அழையாத விருந்தாக ஏதோநா னில்லை-நெஞ்சின்
    ஆதங்கம் எழுதினேன் வேண்டாமே தொல்லை
                        
                                    புலவர் சா இராமாநுசம் 

Wednesday, November 23, 2011

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்


 ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
    உடைந்தால் வருவது வீழ்வாகும்
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
    உறவே கொண்டால் உம்மோடும்
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
    மறப்பின்  வருவது துன்பாகும்
கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
   கருதி நடப்பின் சேதமிலை

சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
   சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
   பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
    வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
    ஆய்ந்தால் அறிவீர் பாதிலென

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
     மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
    எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
     அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
    பரவா வழிதனை நாடுங்கள்

உலக மெங்கும் போராட்டம்-பெரும்
    ஊழல் வாதிகள் வெறியாட்டம்
கலகம் இல்லா நாடில்லை-தினம்
   காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த
   தேசமும் மதவெறி பித்தரென
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
    அஞ்சிட காலம் கடக்கிறதே

            புலவர் சா இராமாநுசம்

Monday, November 21, 2011

மாண்டவர் பிழைத்திடப் போமோ

அறிஞர்  அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டு அவர் நடத்திய
திராவிட நாடு இதழின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதை!
              இது, இரண்டாம் முறை இந்தி நுழைய முயன்ற போது
எழுதியது! ஏறத்தாழ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்!

இந்தியா என்பதோர் நாடே-என்ற
    எண்ணத்தில் வந்ததிக் கேடே
நந்தமிழ் எழில்மிகு வீடே-இந்தி
    நலம்தரா மாகள்ளிக் காடே
வந்தது இன்றெனில் ஓடே-இந்தி
    வருகின்ற வழியெலாம் மூடே
பந்தென அதையெண்ணி ஆடே-இந்தி
    பறந்திட வடக்கினைச் சாடே!

பள்ளியில் கட்டாயம் வேண்டும்-என்ற
     பல்லவி கேட்குது மீண்டும்
துள்ளி எழுந்துமே ஈண்டும்-இந்தி
     தொலைந்திட செய்வோமே யாண்டும்
கொள்ளியை எடுத்தெவர் உலையில்-அதை
     கொண்டுமே வைப்பாரா தலையில்
எள்ளியே நகைக்காதோ நாடே-இந்தி
     ஏற்பது தமிழுக்குக் கேடே!

தாண்டவ மாடுது இந்தி-அஞ்சல்
     தலைகளில் சொகுசாகக் குந்தி
வேண்டாதப் பொதுமொழி இந்தி-அதை
     விரட்டுவோம் அனைவரும் முந்தி
ஈண்டெவர் மரித்திட வரினும்-அதை
     எத்தனை வகைகளில் தரினும்
மாண்டவர் பிழைத்திடப் போமோ-இந்தி
     மறுமுறை நூழைந்திட ஆமோ!?
     
               புலவர் சா இராமாநுசம்
 

Saturday, November 19, 2011

கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய் நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ
வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற
சூழ்ந்ததே உன்னைப் பழி பாவம்
   சொன்னால் எதற்கு வீண் கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா? வருமா இனி வேகம்

அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்குக் கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
    சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
    உண்மைத் தமிழா சொல் லையா

ஓடிஓடி தேடுகி றார்  தம்
     உறவினர் உடலைத் தேடு கிறார்
ஆடிப் போகுதே நம் உள்ளம்
    அருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்
தேடி எங்கும் தெருத் தெருவாய்
   திரியும் அவர்நிலை கண் டாயா
கோடி எடுக்கவும் ஆள் இல்லை
   கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமா கை
     கூலிகள் உணர  சாவோ மா
மாண்டார் மானம் காத் தாரே
      மற்றவர் பின்னர் தூற் றாரே
ஆண்டோம் அன்று இவ் வுலகே
     அடைவோம் இன்று அவ் வுலகே
         
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்
    
         சேனல் நான்கைக் கண்டு எழுதியது

Thursday, November 17, 2011

பட்டறிவும் பகுத்தறிவும்



பட்டே அறிவது பட்டறிவு-எதையும்
   பகுத்து அறிவது பகுத்தறிவு
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
  தொட்டு அறிவது  பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாம்
  விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
   கெட்டோம் அறிவது பகுத்தறிவு

ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-பெரும்
   அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதை
   மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-உளம்
   வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
   உணரின் வாழ்வீர் நலம்பெற்றே

சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவர்
    சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதை
     சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
     எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-பகுத்து
     எண்ணாமல் என்றும் கூறாதீர்

சித்தர் பாடல் பட்டறிவாம்-பிறர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவர்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-நமக்கு
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-என
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!

                  புலவர் சா இராமாநுசம்

Tuesday, November 15, 2011

குழந்தைகள் தினவிழாப் பாடல்



சின்னஞ் சிறுக் குழவி
  சிங்கார இளங் குழவி
கன்னம் குழி விழவும்
  களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முக மாகும்
  அன்றலரும் தாமரை போல்
தன்னை மறந்த தவளும்
   தாலாட்டு பாடு வளாம்

பூவின் இதழ் போல
   பொக்கை வாய் விரிய
நாவின் சுவை அறிய
   நறுந் தேனை தடவிட
பாவின் பண் போல
   பைந்தமிழ் சுவை போல
காவின் எழில் போல
   களிப்பாயே தேன் சுவையில்

கண்ணே நீ உறங்கு
  கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ் கின்ற
  வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
  வரைந்த நல் ஓவியமே
மண்ணை வள மாக்கும்
   மழைத் துளியே நீயுறங்கு

கொஞ்சும் மழலைக் கோர்
   குழல் இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
    பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னை மனம்
    அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
   நீவளரும் வரை யவளே

       புலவர் சா இராமாநுசம்

 

Monday, November 14, 2011

மனிதா மனிதா ஏமனிதா



       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
     
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
      
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
     
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
         

Saturday, November 12, 2011

தூண்டி வருவதும் இதுவல்ல

   
     அன்பு  நெஞ்சங்களே!  மாண்புமிகு அமைச்சர்
       திருமிகு, நாராயணசாமி அவர்கள்  கூடங்குளம்
      போராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார்
      அதன் விளைவே இக்கவிதை மீண்டும் வந்துள்ளது!
      

 மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

புலவர் சா இராமாநுசம்



Friday, November 11, 2011

வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்



வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே

இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கைச் செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்

இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி

புலவர் சா இராமாநுசம்

Thursday, November 10, 2011

நியாயம் தானா அம்மாவே



நியாயம் தானா அம்மாவே-இது
   நியாயம் தானா அம்மாவே
ஆயிரம் கணக்கில் அம்மாவே-ஓர்
   ஆணையில் நீக்கினீர் சும்மாவே
தாயென உம்மை அழைக்கின்றார்-வேலை
   தந்திடின் உயிரும் பிழைக்கின்றார்
ஆயன உடனே செய்வீரா-நீக்க
   ஆணயை இரத்தும் செய்வீரா

நீதி கேட்டே அலைகின்றார்-தம்
   நிலையை எண்ணிக் குலைகின்றார்
வீதியில் புரண்டே அழுகின்றார்-உமை
   வேதனை நீக்கத் தொழுகின்றார்
நாதியில் அவர்கே எண்ணுங்கள்-உடன்
   நலன்பெற வழியும் பண்ணுங்கள்
சாதியில் ஏழைகள் அனைவருமே-அவர்
   சந்ததி வாழ்ந்து நலம்பெறுமே

தவறா செய்தார் அன்னவரே-வேலை
    தந்தது ஆண்ட முன்னவரே
இவரென் செய்தார் பரிதாபம்-அம்மா
    எதற்கு இந்த முன்கோபம்
சுவரா என்ன இடித்துவிட-ஒரு
    சொல்லில் வாழ்வை முடித்துவிட
அவரால் வாழ இயலாதே-அவரை
    அநாதை ஆக்க முயலாதீர்

இரண்டு முறையே பட்டார்கள்-பாபம்
   இனியும் தலையில் குட்டாதீர்
திரண்டு உதிக்கும் கண்ணீரே-அவர்
   தினமும் வடிக்க பண்ணீரே
மிரண்டு ஓடும் மாடக-உடல்
   மேலும் வற்றி கூடாக
வரண்டு போகும் அவர்வாழ்வே-இனி
   வாழ்வும் தாழ்வும் உம்கையில்

                  புலவர் சா இராமாநுசம்


      
  

Wednesday, November 9, 2011

சுகத்தைத் தருவது எந்நாளோ



காலில்  ஒட்டிய  சேற்றோடும்- தன்
      கைகளில்  நெல்லின்  நாற்றோடும்
தோலும்  வற்றி  உடல்தேய-என்றும்
     தொலையா  உழைப்பால்  தானோய
நாளும்  அற்றுப்  பலநாளும்-மிக
      நலிந்த  உழவர்  இல்லத்தில்
மூளும் வறுமை தீராதோ-வாழும்
     முறைப்படி வாழ்வதும்  எந்நாளோ

இருண்ட  இரவே  என்றாலும்-தன்
    எதிரே  எதுதான்  நின்றாலும்
மருண்ட  நிலையே  அறியாது-சற்றும்
    மலைத்து  மனமும்  முறியாது
உருண்ட  பந்தாய்  வாழ்வாக-அவன்
    உழைத்துப்  பெற்றது  தாழ்வாக
சுருண்ட  உழவர்  இல்லத்தில்-நல்
    சுகத்தைத்  தருவது  எந்நாளோ

கொட்டும்  மழையே  என்றாலும்-உடல்
    குளிரால்  நடுங்கி  நின்றாலும்
வெட்டும்  மின்னல்  ஒளியாலே-இரு
    விழிகள்  காட்டும்  வழியாலே
கட்டிய  மடைகள்  உடையாமல்-அவன்
    கைகள்  சோர்வு  அடையாமல்
வெட்டிய  மணைக்  கொட்டியவன்-பட்ட
    வேதனை  குறைப்பதும்  எந்நாளோ

பருவம் தவறி மழைபெய்ய- வெள்ளம்
    பாய்ந்து இட்ட பயிரழிய
உருவம் மாறி மேடுபள்ளம்-நில
    உருவே ஆகிடிட கண்டுஉள்ளம்
வருமா வாழ்வில் வளமென்றே-துயர்
    வாட்டிட அந்தோ தினம்நொந்தே
கருவே கலைந்த நிலைபோல-உழவன்
     கண்ணீர் நிற்பது எந்நாளோ
     
காட்டைத் திருத்தி உழுதானே-பெரும்
    கடனும் பட்டே அழுதானே
நாட்டின் பசிப்பிணி போக்குமவன்-ஏதோ
    நடைப்பிணம் ஆனதை நோக்கியவன்
வீட்டில் மகிழ்வு பூத்திடவே-ஆள்வோர்
    விரைந்து அவனைக் காத்திடவே
கேட்டை நீக்குதல் எந்நாளோ-நெஞ்சக்
    குமுறல் போக்குதல் எந்நாளோ

        புலவர் சா இராமாநுசம்
          

Monday, November 7, 2011

எங்கே போனாய் நிம்மதியே



எங்கே போனாய் நிம்மதியே-உனை
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-படும்
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அவர்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வி
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருள்
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

 
            


 

Saturday, November 5, 2011

நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்



நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்-நீ
   நீடூழி வாழ்வாயே இன்றும்என்றும்
 பஞ்சிலே பக்கத்தில் நெருப்புவைக்க-பலர்
   பதறிட துடித்திட முள்ளாய்த்தைக்க
 வஞ்சினம் ஒன்றுமே செயலாயாக-எதிர்
   வரலாறு அதையெடுத்து சொல்லிப்போக
 அஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல
   அரியபுகழ் பொற்றாயே நீதிமன்றம்

 எவரென்ன செய்தாலும் தடுக்கயியலா-என
   எண்ணியே எண்ணியதை செய்யமுயல
 தவரன்ன எனச்சொல்லி தடையும்போட்டே-நல்
   தரமிக்க கேள்விகளை தெளிவாய்கேட்டே
 சுவரன்ன முட்டினால் உடையும்தலையே-யாம்
   சொல்வதை கேட்பவர் யாருமிலையே
 இவரென்ன சொல்வதா கேட்கயிலா-இனி
   ஈகோவை நனிமேலும் காட்டயியலா
             
 முதலையோ கொண்டது  விடுவதில்லை-நம்
   முதல்வரோ பிடிவாதம் விடுபவரில்லை
 மதலையர் காத்திட வேறுயிடத்தில்-உயர்
   மருத்துவ மனைதன்னை நல்லதரத்தில்
 வான்முட்ட கட்டினால் வாழ்த்துவாரே-வரும்
   வரலாற்றில் அவர்புகழ் போற்றுவாரே
 தானத்தில் சிறந்ததாய் சாற்றுவாரே-நி
   தானமாம் அதையெண்ணி ஆற்றுவீரே!

 முடிவாக  முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
   முன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
 விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
   வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்
 கடிவாளம் இல்லாத குதிரைபோல-நீர்
   கண்டபடி ஓடாமல் ஆய்ந்துசால
 இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்-நிலை
   எண்ணியே செயல்பட என்றுமேவாழ்க!
    
                    புலவர் சா இராமாநுசம்
            
            
            
             
            

Thursday, November 3, 2011

வேண்டாம் அம்மா வேண்டாமே


ஆளும் அம்மா எண்ணுங்கள்-எதையும்
ஆய்ந்து பிறகே பண்ணுங்கள்
நாளும் செய்யும் மாற்றங்கள்-மிக
நன்றா என்பதை சாற்றுங்கள்
பாளு(ழு)ம் நூலகம் செய்திட்ட பெரும்
பாபம் என்ன தூக்கிட்டீர்
தேளும் கொட்டிய நிலைபெற்றோம்
தீயில் விழுந்த நிலையுற்றோம்

வேண்டாம் அம்மா வேண்டாமே-மேலும்
வேதனை தன்னைத் தூண்டாமே
ஆண்டான் செய்தார் என்பதற்கா-அதை
அகற்றுதல் மக்கள் நன்மைக்கா
தூண்டா விளக்காம் நூலகமே-அதை
தூக்கி எறிதல் பாதகமே
ஈண்டார் என்னை எதிர்ப்பதென-வரும்
ஈகோ விடுவீர் வேண்டுகிறோம்

அதற்கென கட்டிய கட்டிடமே-அறிஞர்
அண்ணா பெயரில்! விட்டிடமே
எதற்கென மாற்றுமிவ் முடிவாகும்-இதனால்
என்ன நன்மை விடிவாகும்
இதற்கென எட்டு மாடிகளே-திட்டம்
இட்டே செய்தது பலகோடிகளே
குதர்கமே வேண்டாம் இச்செயலில்-புத்தக
குழந்தைகள் அழியுமிவ் புண்செயலில்

ஒன்றைக் கருதி கட்டியதே-அதற்கு
உரிய வசதிகள் கிட்டியதே
ஒன்றை மாற்றி  ஒன்றாக்கின்-அவை
அனைத்தும் பாழ்படும் ஒன்றாகும்
நன்றா இச்செயல் ஆயுங்கள்-உடன்
நலமுற ஆணையை மாற்றுங்கள்
கன்றாம் மக்களின் தாயாக-உமைக்
கருதிட ஆவன செய்யுங்கள்

மருத்து மனையும் கட்டுங்கள்- அதை
மற்றோர் இடத்தில் கட்டுங்கள்
பொருத்தமே அனைத்தும் உரியதென-உலகு
போற்றிப் புகழ அரியதென
வருத்தமே யாரும் படமாட்டார்-உமை
வாழ்த்தியே துன்பப் படமாட்டார்
திருத்தமே செய்வீர் உடனடியே-முடிவை
திரும்பப் பெறுவீர் அப்படியே

குறிப்பு- மருத்தவர் ஆலோசனை, ஓய்வெடுக்க சொன்ன உங்கள் அன்பு
ஆணை இரண்டையும் மீறி இக் கவிதையை எழுத காரணம் வன் 
செயல் கண்டு கொதித்த உள்ளக் குமுறலே ஆகும்! மன்னிக்க.

Tuesday, November 1, 2011

பட்டினியால் வாடுவது வன்னிமண்


அன்பு நெஞ்சங்களே! வணக்கம்!
என் வலையில் நான் இறுதியாக எழுதி வெளியிட்ட  இடுவீர் பிச்சை இடுவீரே என்ற கவிதைக்கு பிறகு உடன் மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டு இன்றுதான் வீடு திரும்பினேன் எனவே அக் கவிதைக்கு
மறுமொழி எழுதிய அனைவருக்கும் முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
     இனி ஒரு வார காலத்திற்கு உங்களுக்கு  நன்றி தெரிவிக்கவோ
மறுமொழி இடவோ இயலாத உடல் நிலை! மன்னிக்க!
புலவர் சா இராமாநுசம்


பட்டினியால் வாடுவது வன்னிமண்ணே-படம்
பாரத்தழுது சிவக்கிறது நமதுகண்ணே
எட்டுகின்ற தூரந்தான் ஈழமானால-நாம்
இருந்தென்ன பயனுன்டா சொல்லப்போனால்
வட்டமிடும் கழுகாகச் சுற்றிசுற்றி-தமிழன்
வாழாது அழிந்திட மாற்றிமாற்றி
சுட்டுதள்ள நாள்தோறும் கண்டுமிங்கே-சற்றும்
சுரனையின்றி வாழ்ந்தோமே மானமெங்கே

ஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்
இல்லாமல் நாள்தோறும் சாடசாட
வாழத்தான் வழியின்றி சிதறிஓட-நாம்
வாய்மூடி கிடந்தோமே பழியும்நாட
வீழத்தான் வேண்டுமா ஈழத்தமிழன்-இங்கே
விளங்காமல் பேசுபவன் ஈனத்தமிழன்
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-வெகு
விரைவாக அன்னார்கு நன்குபுரியும்

Monday, October 24, 2011

இடுவீர் பிச்சை இடுவீரே



  இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
   ஏழைகள் கற்க விடுவீரே
 கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
   கேடெனக் களையின் எதிர்நாளே
 தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
   தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
 விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
   வேதனை நீங்கி தரமுயர

திறமை இருந்தும் பயனின்றி-வீணே
    தேம்பிட வாழல் மனங்குன்றி
 அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
    அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
 தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
    தருவீர் இடமே!ஆனாலும்
 வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
    வாழ்வே குட்டிச் சுவர்தானா

இல்லோர்  கல்வி இல்லோரா-இதை
    எடுத்து எவரும் சொல்லாரா
 நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
    நாட்டுக்கு நலமா கூறுங்கள்
 வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
    வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
 கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
    கவிதை இதுவென் தவற்தானா

ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
    இருப்பது இறைவன் தானென்றீர்
 பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
    பிணைத்திட பணமது தாம்பாக
 வாழையின் அடிவரும் வாழையென-அவன்
    வாழ்ந்தே மடிவது கொடுமையென
 கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
    குமுறும் எரிமலை ஆவானே

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...