Friday, December 19, 2014

மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!



மத்தியிலே கல்விக்கோர் அமைச்சர் இவரே
     மறவாதீர் அவருக்கே இல்லை நிகரே!
புத்தியிலே நமக்கெல்லாம் என்றே நாளும்
    புலம்புகின்றார் கண்டபடி பாவம்! மேலும்,
எத்னையோ பணியிருக்க அதனை விட்டே
    எண்ணாமல் ஆயாமல் வேலைக் கெட்டே!
பித்தமது பிடித்தவராய் மாற்றி வீணே
    பேசுகின்றார் ஐயகோ! நியாயம் தானோ!?


ஆண்டாண்டு காலமாக  இருக்கும்  ஒன்றே
      அறியாது ஐயகோ  மாற்றல்  என்றே!
தூண்டாதீர்  மதவெறியை  அமைதி  கெடுமே
      தொடராது  இனியேனும்  வாழ  விடுமே!
வேண்டாத  வீண்வேலை ஆகும் தானே
       விடுமுறையே இல்லையென பின்பு, தானே
கூண்டா மக்களது  எதிர்புக்   கண்டே
      கூறவில்லை என்பதுவா  மக்கள்  தொண்டே!

 புலவர் சா இராமாநுசம்

Wednesday, December 17, 2014

மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!


மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே
மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்!
மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும்
மின்சாரக் கட்டணமோ எமனாய் ஆக!
வேண்டிபலர் விண்ணப்பம் தந்தும் வீணே -ஏதும்
விடிவில்லை! முடிவதுவே! வேதனை தானே!
ஆண்டவனே !என்றிங்கே மக்கள் நாளும்-எண்ணி
அல்லல்படல்! விதுயென்ப! இதுதான் போலும்!


ஆற்றாது அழுகின்ற அவலம் நன்றா -இதுவும்
ஆளுகின்ற அரசுக்கு அழகாம் என்றா?
சாற்றாது சத்தமின்றி ஏற்றி விட்டீர் –அந்தோ!
சரியல்ல! போராட தூண்டி விட்டீர்!
ஊற்றான ஊழலையே ஒழித்தால் போதும் -மேலும்
உயர்த்திடவே தேவையில்லை! நீங்கும் தீதும்!
மாற்றாகும் இவ்வழியே! செய்தல் வேண்டும் -என்றே
மன்றாடிக் கேட்கின்றோம் மீண்டும் மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Monday, December 15, 2014

தூய்மை வருமே துணை!


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...