Friday, April 5, 2013

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!


ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
   ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
   கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு  நடப்பைப் பாருங்கள்-மிக
   நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
   கட்சிகள் செய்வது ஒன்றேதான்!

மக்கள் அவையே கூடுவதும்-உடன்
   மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி  முடிப்பதற்கா-வீண்
   தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
    ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
     தொடர்கதை ஆனது நாம்வாட

ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
     உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
    ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
    சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
    எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
             
                    புலவர் சா இராமாநுசம்
     
      

Tuesday, April 2, 2013

கீழோ ராயினும் தாழஉரை கேடோ! குறையோ! அல்ல! நிறை!


நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
     நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
    அறிவில் குழப்பம்  நிறைந்தனவே!
தினைத்துணை  அளவே செய்நன்றி
    தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
    பயனறி உணரும் நல்லோரே!

அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
     அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
     தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
     கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
     வேதனை குறையும் அக்கணமே!

கீழோ ராயினும் தாழஉரை
   கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
   விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
   பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
   இணையில் இன்பம் தேக்கிடுவீர்!

மக்கள் தொண்டு ஒன்றேதான்
   மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
   தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
   இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
   சொன்னதை செய்தல் அரிதன்றோ!

                  புலவர் சா இராமாநுசம்

Sunday, March 31, 2013

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!



அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!

இன்று தமிழ்நாடுயெங்கும், மாணவரும், சமூக அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும், பொதுமக்களும தனிஈழம் வேண்டி போராடி வருகின்றனர். இதுபோது வலைவழியும் ,முகநூல், கூகுல்பிளஸ், இன்னும் இது போன்ற பல் வகையிலும் எழுதுகின்ற பதிவர்களாகிய நாமும் நம் பங்கை ஆற்ற வேண்டாமா!

ஒருநாள் உண்ணா விரதமோ, ஆர்பாட்டமோ நேரமும் இடமும் நாளும் குறித்து திட்ட மிட்டு கூடி அறிவித்து ஆவன செய்வது நலமல்லவா!

சென்னையும் அதனை சுற்றியுள்ள பதிவர்களும்
உடன் இச்செயலில் ஈடுபட்டால் , பிறகு ஆங்காங்கே உள்ள மற்றவர்களும் செயல் படுவார்கள் என்பது என் வேண்டுகோளாகும்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டுகிறேன்


                               புலவர்  சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...