Thursday, May 4, 2017

தொலைத்திட்ட நிம்மதியைத் தேடுகின்றேன்—மேலும் தொலைத்தயிடம் அறியாது வாடுகின்றேன்





தொலைத்திட்ட  நிம்மதியைத்  தேடுகின்றேன்—மேலும்
     தொலைத்தயிடம்  அறியாது வாடுகின்றேன்
கலைத்துவிட்ட தேனடையின் ஈக்கள்வந்தே- தேடித்
      கலைத்தவனை கொட்டிவிடும்  துயரம்தந்தே
நிலைத்துவிட  உள்ளத்தில் நொந்துபோனேன்-துளியும்
      நிம்மதியைக்  காணாது  ஏங்கலானேன்
அலைத்தடத்தில் கடலோர  மணலின்  வீடாய்-அந்தோ
       ஆயிற்றே என்செய்வேன் அணைத்தும்  வீணே!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, May 2, 2017

எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி எழுந்திட அனுதினமே



எதுவேண்டும் சொல்மனமே!-கேள்வி
எழுந்திட அனுதினமே
மதிவேண்டும் என்றுள்ளமே-என்றும்
மாறாத நிலைவேண்டுமே
நிதிவேண்டும் வாழ்த்திடவே-அதுவும்
நேர்மையாய் வரவேண்டுமே
இதுவேண்டும் என்றெண்ணமே-பற்று
இல்லாது வாழவேண்டுமே


புலவர் சா இராமாநுசம்

Monday, May 1, 2017

உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து உரைத்திட்ட மேதினமே வருக உன்னை



உலகறிய உழைப்பாளர் உரிமை தன்னை-எடுத்து
உரைத்திட்ட மேதினமே வருக உன்னை
திலகமென வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க-எட்டு
திசையெங்கும் மங்காதுன் புகழே சூழ்க
நலமிகவே நாடெங்கும் வளமை ஓங்க-ஆட்சி
நல்லோர்கள் ஆளவர வறட்சி நீங்க
கலகமது இல்லாமல் அமைதி பூண- உலகம்
காணட்டும் போரின்றி ஒற்றுமை காண!


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 30, 2017

மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன் மேதினியல் மேன்மைகெட அழிதல் நன்றோ!?



உச்சநீதி மன்றம்வரை சென்றப் பின்பும்- எண்ணில்
உயிர்துறந்த உழவர்தமை மறைத்தல் துன்பம்
அச்மின்றி பொய்கூறிய தமிழக அரசே-இனியும்
ஆள்வதெனில் என்றென்றும் அழியா மாசே
பிச்சைதனை போடுவதாய் நடுவண் அரசும்-ஏதோ
பேருக்கு உதவியென தருவது பெரிசாம்
மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன்
மேதினியல் மேன்மைகெட  அழிதல் நன்றோ!?


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...