Saturday, August 1, 2015

மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை மேலும் தொடராது ஓய ஈண்டும்!


காந்திய வாதியாய் மதுவை நீக்க-வாழ்ந்த
காலமெலாம் போராடி உயிரைப் போக்க!
வாந்தியாய் இரத்தமே சிந்தி விட்டார்-செய்தி
வந்திட நல்லோரும் கண்ணீர் விட்டார்!
சாந்தமே உருவான சசிபெருமாள் இன்றே-மறவா
சரித்திர நாயகன் ஆனார் நன்றே!
ஏந்திய கொள்கையில் மாற்ற மில்லை- அதில்
எள்ளவும் தன்னலம் என்றும் இல்லை!


எத்தனை முறையோ உண்ணா விரதம்-அவர்
இருந்துமே பயனின்றி போன விதம்!
இத்தகை முடிவிக்கே அவரும் வந்தார்-அந்தோ
இன்னுயிர் தன்னையும் பலியாய் தந்தார்!
சித்தமே கலங்கிட துயரம் பொங்கும்-உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இங்கும்!
மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை
மேலும் தொடராது ஓய ஈண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 30, 2015

உலகம் போற்றும் மாமேதை –இன்றவர் உடலை அடக்கம் செய்கின்றார்!


உலகம் போற்றும் மாமேதை –இன்றவர்
உடலை அடக்கம் செய்கின்றார்!
திலகம் இந்திய நாட்டுக்கவர் –மக்கள்
தேம்பியே கண்ணீர் பெய்கின்றர்!
கலமாம் அப்துல் பெயரென்றும்-காலக்
கல்லில் பொறித்த நிலைநின்றும்!
வலமாய் வருவார் உலகெங்கும்-அவரால்
வளர்ந்த அறிவியல் வளம்பொங்கும்!


தோல்விக்குத் தோல்வி தந்துடுவீர்-எந்த
துறையிலும் வென்றே வந்திடுவீர்!
பால்நிற மனமே கொண்டவராம் –காலாம்
பாரத இரத்தினா விண்டவராம்!
ஆலெனப் விரிந்திட அறிவியலை-நாட்டில்
அணுவினை ஆய்ந்து பொறியியலை!
நூல்பல கற்றே உரைத்தாரே-மதிமிகு
நுட்பத்தில் அக்கினி படைத்தாரே!

மாணவ ரோடு மாணவராய்—நாளும்
மகிழ்வாய் கலந்து தானவராய்!
காணவே வாழ்ந்தார் இறுதிவரை-பாவி
காலனால் முடிந்தது! இறுதியுரை!
பதவிக்கிப் பெருமை இவராலே—மனிதப்
பண்புக்கு பெருமை இவராலே!
உதவிக்கு அழைத்ததோ விண்ணுலகே-வாழும்
உத்தம மறவா மண்ணுலகே!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 28, 2015

இந்திய நாட்டின் தலைமகன் ஆனார் சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!



அந்தோ மறைந்தார் அப்துல் கலாமே
நொந்தார் அனைவரும் நோகார் இலமே!
இந்திய நாட்டின் தலைமகன் ஆனார்
சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!

கனவும் மெய்படக் காணாது ஏக
நினவாய் என்றும் நிலையென ஆக!
மனமெனும் திரையில் மறையா ஓவியம்
இனமது தமிழரின் இதய காவியம்!

வாழ்கநீர் கால வரலாற்றில் ஒன்றென
சூழ்கவே உம்புகழ் சுடர்தரும் கதிரென!
ஆழ்கஉம் அறிவியல் அலைமிகு கடலென
மூழ்கிடாக் கலமே அப்துல் கலாமே!

புலவர் சா இராமாநுசம்

Monday, July 27, 2015

சின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவானே!



சின்னப் பையன் வருவானே-தினமும்
செய்தித் தாளும் தருவானே!
சன்னல் வழியும் எறிவானே –கதவு
சாத்திட குரலும் தருவானே!
இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
பாடம் படிக்கும் வயதன்றோ!?
துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
துரத்த ஓடும் வயதன்றோ!
அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
அறுத்த செருப்புக் காலோடும்!
தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
தவறின் திட்டும் பெறுவானே!

சட்டம் போட்டும் பயன்தருமா-கல்வி,
சமச்சீர் ஆகும் நிலைவருமா?
இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
திட்டம் மட்டுமே போடுகின்றார்-அவர்தம்
தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
கொடிகட்டிப் பறக்குது! நாதியிலே!

இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
இருந்திட வேண்டும் ஒரேமுறை
நம்மைஆள தேர்தல்முறை-இன்று
நடைமுறைப் படுத்தும் அந்தமுறை
அமையக் குரலும் தொடுப்பீரே-கல்வி
ஆணையம் அமைத்து கொடுப்பீரே
சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...