Friday, April 29, 2016

ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!



ஓட்டென்றால் நம்முடைய உரிமைச் சீட்டே –அதை
உணராது பலவகையில் வீணாய்ப் போட்டே!
நாட்டைத்தான் கெடுத்தவர்கள் நாமே ஆகும் –தேர்தல்
நாடகத்தில் இன்றுவரை! துயரா போகும்!
கோட்டைதான் குறிக்கோளாய் கொள்கை என்றே-ஆட்சிக்
கோலோச்ச கட்சிகளும் கூடி நின்றே!
காட்டைத்தான் வீடாக்கி விட்டார்! நாளும் –ஏழை
கண்ணீரைத் துடைப்பதற்கு என்றா ஆளும்!


பட்டதுயர் போதுமினி படவும் இயலா – நம்மின்
பகுத்தறிவு அணுவளவும் என்றும் முயலா!
இட்டபடி ஆள்வோரே வருவா ராக-நீங்கா
இன்னல்தான் நிலையென்ற நிலமை போக!
திட்டமிட்டு செயல்படுவோர் ஆட்சி வருமா –மக்கள்
தேவைகண்டு சேவைசெய்யும் திருநாள் தருமா!
குட்டதலை குணிவதுவோ! இனியும் வேண்டாம்-நிமிர
குறைதீரும்! காலமது கனியும்! ஈண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Thursday, April 28, 2016

வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ் வேதனை தாங்காயிம் முதியோனே!


ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
அள்ளித் தந்தால் எவ்வாறே!?
ஈண்டே நாங்கள் வாழ்ந்திடவா –இல்லை
இன்னல் பட்டே மாயந்திடவா!
பூண்டும் கருகிப் போனதுவே –எரியும்
புகையில் நெருப்பென ஆனதுவே!
வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ்
வேதனை தாங்காயிம் முதியோனே!


புலவர் சா இராமாநுசம்

Sunday, April 24, 2016

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம் பாதம் பட்டால் சுடும் மண்ணில் !



கோடைக் காலம் வந்து துவே -எங்கும்
கொளுத்திட  வெய்யில்  தந்த துவே !
ஆடை முழுதும் நனைந் திடவே -உடல்
ஆனதே குளித்த தாய் ஆகிடவே !
ஓடை போல நிலமெல் லாம்- காண
உருவம் பெற்று வெடித் தனவே !
வீ(ட்)டை விட்டே வெளி வரவே -மனம்
விரும்பா நிலையை அனல் தரவே !

பச்சைப் பயிரும் பொசுங்கி டவே -அற
பசுமை முற்றும் நீங்கி டவே !
உச்சியில் வெய்யில் வந்த தெனில் -நம்
உடம்பைத் தீயென தொட்ட தனல் !
மூச்சை இழுத் தால் அக்காற்றும் -அந்த
மூக்கை சுடவே அனல் மாற்றும் !
சேச்சே என்ன வெயி லென -வெதும்பி
செப்பிட வார்தை செவி விழுமே !

பத்து மணிக்கே பகல் தன்னில் -நம்
பாதம் பட்டால் சுடும் மண்ணில் !
எத்தனை வேகம் காட்டு கின்றார் -ஓட
எங்கே நிழலெனத் தேடு கின்றார் !
இத்தனை நாள் போல் வீட்டோடு -இன்றும்
இருந்தால் எதற்கு இந்தச் சூட்டோடு !
பித்தனைப் போலவர் தமக் குள்ளே-துயரில்
புலம்பிட கேட்குதே செவிக் குள்ளே !

வற்றிய நீர்நிலை இல் லாமே -நீண்டு
வளர்ந்த புல்பூண் டெல் லாமே !
பற்றி எரிய முற்ற றாக -மேலும்
பறந்திடக் காற்றில பஞ் சாக !
வெற்றிடம் தன்னில் கால் நடைகள் -அந்தோ
வெறுமையாய் வாயை மென்றி டவே !
சுற்றி சுற்றி மேய்ந் தாலும் -ஏதுமின்றி
சுருண்டது அந்தோ பசி யாலே !

புலவர் சா இராமாநுசம்

மீள்பதிவு)

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...