Saturday, December 19, 2015

தூய்மை வருமே துணை!



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல உம்மை
இகழ்வாரைத் தாங்கி இருப்பீரேல் –புகழாக
வாய்மை வழிநடத்த வாழ்ந்தாலே உள்ளவரை
தூய்மை வருமே துணை

புலவர்  சா  இராமாநுசம்

Friday, December 18, 2015

வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!



பதவி ஒன்றே குறிக்கோள் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு! இதில் எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல! அல்லல் பட்டு ஆற்றாது இன்னும் கண்ணீர் விடும் மக்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்து கட்சிகளும் இணைந்து பாடுபட முயலாமல் வரும் தேர்தலில் வெற்றி பெற யாரோடு யார் சேர்வது என்ற கூட்டணி பேரம் தொடங்கி விட்டது ! இதனைக் கண்டு வெட்கப்படுவதா!? வேதனைப் படுவதா!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 15, 2015

திருவினை இழந்தோர் போற்ற –வழிகள் தேடியே புண்ணை ஆற்றும்!



நடந்தது நடந்தது போக- இனியே
நடப்பது நலமாய் ஆக
திடமொடு முடிவு எடுப்பீர் –மக்கள்
தேவையை அறிந்து நடப்பீர்
கடமையாய் எண்ணிச் செயல்பட – சகல
கட்சிகள் இணைந்து புறப்பட
உடமைகள் இழந்த மக்கள் –துயர
உள்ளத்தின் புண்ணை ஆற்றும்


ஒருவரை ஒருவர் சாடி –மேலும்
உரைப்பதால் தீமைக் கோடி
வருவதால் உண்டா பலனே –அதனால்
வாராது மக்கள் நலனே
பெறுவது ஏதும் இல்லை-நாளும்
பெற்றது தீராத் தொல்லை
திருவினை இழந்தோர் போற்ற –வழிகள்
தேடியே புண்ணை ஆற்றும்

புலவர் சா இராமாநுசம்

Monday, December 14, 2015

தாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே

தாங்காது  தாங்காது  இயற்கைத்   தாயே –உடன்
      தடுத்திடு   வாராமல்   தொத்து  நோயே
தூங்காத  விழியிரண்டின்  துணையக்  கொண்டும் விரைந்து
       தொலையாத  இரவுயென  துயரம்   மண்டும்
நீங்காத  என்றேதான்  நாளும்  பொழுதும்-அந்தோ
       நிலையான  நிலையாலே நெஞ்சுள்  அழுதும்
தேங்காது  கண்ணீரும்  சிந்து  கின்றோம்  -இயற்கைத்
      தேவியேயுன் திருவடி  தொழுது  நின்றோம்!

புலவர்  சா  இராமாநுசம் 



Sunday, December 13, 2015

முகநூல் பதிவு!



நடுத்தர மக்களே! இனியாவது யோசிக்க வேண்டுகிறேன் இதுவரை இராமன் ஆண்டால் நமக்கென்ன , இராவணன் ஆண்டால் நமக்கென்ன என்று ஓட்டுப் போடுவது கூடவீண்வேலை என்று எண்ணியது போதும் உங்களைப் போன்றவர் ஒதிங்கிக் கொண்டதின் விளைவு இன்றைய நிலை வெளியே வாருங்கள்! வருவீர்களா????

புலவர்  சா  இராமாநுசம் 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...