கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்
அதன் விளைவே, நினைவே இக் கவிதை
பொறுப்பே அறியா பொறுக்கி சிங்களர்
வெறுப்பே உருவாய் வஞ்சமே கருவாய்
கறுப்பு ஜூலை என்பத்தி மூன்றாம்
பிறப்பில் தமிழனா-?ஒழித்திடு என்றே
அழிக்கத் தொடங்கிய அந்தநா ளாகும்
செழிக்க வாழ்ந்த் ஈழத் தமிழன்
செத்தனர் மூன்று ஆயிரம் ஆமே
எரிந்தன எங்கும் எரிந்திட நெஞ்சம்
விரிந்தன கலவரம் இரண்டு மாதம்
அன்றுத் தொடங்கி இன்று வரையில்
கொன்று அழிப்பதே கொள்கை யாக
அகதிக ளாக ஈழரின் இரத்தம்
சகதிக ளாக வாழ்வதா நித்தம்
ஓடினார் ஓடினார் உலகு எங்கும்
தேடினார் பிழைக்க வழிதனை அங்கும்
பஞ்சம் இன்றி பிழைத்தனர் ஆயினும்
நெஞ்சம் கொண்ட வேதனை நீங்குமா
பிறந்த நாடும் பிரிந்த உறவும
மறந்து போகும் ஒன்றா சொல்வீர்
மறவீர் மறவீர் நீரே வெல்வீர்
புலவர் சா இராமாநுசம்
| Tweet |

