Thursday, May 5, 2011

தேசப் புகழைப் பாடுங்கள்


     முத்துக் குமாரை பின்பற்றி-கிருட்டின
            மூர்த்தியும் பெட்ரோல் தனைஊற்றி
      வைத்துக் கொண்டார் தீயென்றே-இங்கே
            வந்தசெய்தி பொய் யென்றே
      செத்துப் போனது எதற்காக-என
            செய்கிறார் வாதம் அதற்காக
      எத்தனை கொடுமை தமிழ்நாடே-இனி
            எரிக்க வேண்டாம் சுடுகாடே
     
     ஒற்றுமை நம்மிடை வேண்டாமா-கூடி
            ஒன்றாய் உறுதி பூண்டோமா
     பெற்றவர் அங்கே அழுதிடவும்-அவர்
            பிள்ளையை பலவாய் எழுதிடவும்
     கற்றவர் செய்யும் செயலல்ல-வீண்
              கதைகள் சொல்வதும் பயனல்ல
     மற்றது உண்மை எதுவென்றே-யாரும்
              மறைக்க இயலா வரும்நன்றே

     மூடி மறைப்பதால் பலனில்லை-இன்னும்
              முள்ளி வாய்க்கால முடியவில்லை
     கேடி பக்சே கொடுங்கோலே-தட்டிக்
                கேட்க அங்கே நாதியிலே
     வாடியே பட்டி மாடுகளாய்-அங்கே
              வாழ்வார் துயரை ஏடுகளே
        தேடி எடுத்துப் போடுங்கள் –பின்
                தேசப் புகழைப் பாடுங்கள்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...