Friday, January 27, 2017

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!


குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை
குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே
வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர்
வற்றாத நதியாக தாண்டவக் கோனே
விடிவுவரும் நாளேதான் தாண்டவக் கோனே-மது
விலக்கு வேண்டுமடா தாண்டவக் கோனே
முடியரசே பாரதத்தில் தாண்டவக் கோனே-அதுவரை
முடிவெடுத்தால் உண்மைதானே! தாண்டவக் கோனே



காணுகின்ற இடமெல்லாம் தாண்டவக் கோனே-மதுக்
கடைகள்தான் காணுதடா தாண்டவக் கோனே
நாணமின்றி நங்கையரும் தாண்டவக் கோனே- குடித்தல்
நாகரீக மானதடா தாண்டவக் கோனே
கோணல்வழி போவதுவே தாண்டவக் கோனே- வாழும்
கொள்கையென ஆயிற்று தாண்டவக் கோனே
பூண வேண்டும் மக்களிதை தாண்டவக் கோனே-நாடு
பூராவும் மதுவிலக்கு தாண்டவக் கோனே

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...