Thursday, September 13, 2012

தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர் துச்சமா எண்ணிடல் எளிதல்ல

              ஓர் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட கவிதை
    இன்றைய சூழ்நிலைக கருதி வெளியிடப் படும்
                                மீள் பதிவு
        


மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!

                            புலவர் சா இராமாநுசம்

Monday, September 10, 2012

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி

 நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால்
   நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன்  ஒன்றும்
தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில்
   தோற்றதெவர் வென்றதெவர்! ஆயவதென்ன! விடிவில்!
   
 கோடிகோடி கோடியென வரிப்பணமும் வீணே-ஏதும்
   கொள்கையிலா கட்சிகளாய் இன்றிருத்தல் தானே
தேடிதேடி வீடுதோறும் வாக்குத்தர கேட்டார்-இன்று
  தேம்பியழும் மக்கள்தானே நம்பியதைப் போட்டார்

பெரியதென்ன சிறியதென்ன ஊழல்தன்னில் அளவே-என
   பேசுவதால் பலனுண்டா  அத்தனையும் களவே
புரியாத மக்களென நினைத்துவிடில் தவறே-அதுவும்
  புரிந்துவிடும் தேர்தல்வரின் உணர்திடுவர் அவரே


நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று
    நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை
விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில்
    விலைவாசி ஏற்றத்தைத் தடுப்பவர்தான் எங்கே


பதவிக்கே வந்துவிட்டால் பேசுவதும் ஒன்றாம்-பதவி
    பறிபோனால் பேசுவதோ மாறான ஒன்றாம்
முதலுக்கே  தேவையில்லா அரசியலும் தொழிலாம்- சற்று
   முயன்றாலே போதுமவர் வாழ்வேநல் எழிலாம்


நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த
    நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி
அல்லவர்கள் மீண்டும்வரின் இந்நிலையே என்றும்-இந்த
    அவலந்தான் முடியாத தொடராக நின்றும்


                                              புலவர் சா இராமாநுசம்


  
  


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...