Friday, June 3, 2011

நீதித் தேவதை

நீதித் தேவதை எங்கே எங்கே-பெரும்
நிதிதனைப் பெற்றோர் வாழ்வதும் அங்கே
வீதித் தேவனை வணங்கிடும் ஏழை-இன்று
வீழ்வான் அந்தோ பணமில் பேழை
சாதித் தேவனும் அங்கே உண்டே-ஏன்
சமயத் தேவனும் வருதல் உண்டே
ஆதியும் அந்தமும் காணும் உருவம்-என
ஆனதே தேவதை நீதியே அருவம்

புலவர் சா இராமாநுசம்

Thursday, June 2, 2011

புலம்பெயர் ஈழத் தமிழர்களே

      புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
        போக்கில் வேண்டும் மாற்றங்களே
      நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
         நீங்கிட வேண்டும் வேற்றுமையே
      வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
          வடித்திட காரணம் பொறுத்திடுக
      நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
         நிச்சியம் ஈழம் பெறுவீரே

    இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
        எதையும் பெரிது பண்ணாதீர்
    புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
        போரினை தொடங்குவீர் நீரின்றே
    அதுவரை  நடக்கும பேயாட்டம்-சிங்கள
      ஆணவ நாய்களின் வாலாட்டம்
    எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
       எதிர் வரும் காலம் காண்பிக்கும்

   வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
       வாழ்வில் வீசிய புய லாலே
   தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
      தங்கிப் பலரே அங்கங் கும்
  பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
      பட்டம் பதவி சூழ் கின்றீர
 நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
     நினைவால் வாரா துயர் மூளும்

பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
     பிரிந்த உறவை  மறப் பீரா
திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
     தேம்பும் மக்களை மறப்பீரா
இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
      ஈழம் காண முனைந் திடுவீர்
சிறந்த முடிவை எடுப் பீரே-என
      செப்பினேன் வேண்டி முடிப் பீரே

                            புலவர் சா இராமாநுசம்

Wednesday, June 1, 2011

பட்டினியால் வாடுவது வன்னிமண்



பட்டினியால் வாடுவது வன்னிமண்ணே-படம்
பாரத்தழுது சிவக்கிறது நமதுகண்ணே
எட்டுகின்ற தூரந்தான் ஈழமானால-நாம்
இருந்தென்ன பயனுன்டா சொல்லப்போனால்
வட்டமிடும் கழுகாகச் சுற்றிசுற்றி-தமிழன்
வாழாது அழிந்திட மாற்றிமாற்றி
சுட்டுதள்ள நாள்தோறும் கண்டுமிங்கே-சற்றும்
சுரனையின்றி வாழ்ந்தோமே மானமெங்கே

ஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்
இல்லாமல் நாள்தோறும் சாடசாட
வாழத்தான் வழியின்றி சிதறிஓட-நாம்
வாய்மூடி கிடந்தோமே பழியும்நாட
வீழத்தான் வேண்டுமா ஈழத்தமிழன்-இங்கே
விளங்காமல் பேசுபவன் ஈனத்தமிழன்
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-வெகு
விரைவாக அன்னார்கு நன்குபுரியும்

புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 31, 2011

பிறப்பு

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க

எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை

மரணம நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும நீலையாகும

புலவர் சா இராமாநுசம்

Monday, May 30, 2011

கடிகாரம்...

சுற்றும் உலகம் தன்னோடு-முள்
சுற்றி வருமே என்னோடு
சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
உயர சுவற்றில மாட்டிடுவார்

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள
அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-இதுவே
போதும் அறிவோம்கால தம்அருமை

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...