Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!



அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை
அரசியல் மாற்ற காட்சி!
வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி
வெள்ளமாய் அடிக்க எண்ணீர்!
ஒழிந்தது ஆணவக் ஆட்சி –இன்று
உலகமே போற்றும் மாட்சி!
கழிந்தநாள் மறப்ப தல்ல-அவை
கனவென நினைத்துத் தள்ள!


வருமாட்சி எப்படி என்றே –கேள்வி
வந்திட நெஞ்சில் ஒன்றே!
பெருமாட்சி செய்யத் தானே-சற்று
பெருமூச்சு எழவும் வீணே!
தருமாட்சி நன்றாய் காண –ஈழத்
தமிழரும் உரிமை பூண!
திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை
திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!


அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த
ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்!
எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி
எழுப்புவதா ஒற்றுமையைக் குலைக்கும் சங்கே!

கோயில் கட்டப் போகின்றார் கோட்சேவுகாம்-அதில்
கும்பிடவும் சிலை வைப்பார் கோட்சேவுகாம்-!
நோயுள்ளம் பெற்றாராம் அந்தோ இவரே-நல்ல
நோக்கமில்லார்! இவருக்கு இல்லை நிகரே!

தேசபிதா அவரென்று உலகம் போற்றும்-அறவழி
தேடிதந்த சுதந்திரத்தை என்றும் சாற்றும்!
நாசபுத்திக் காரர்களே போதும் இதுவே-சற்று
நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

புலவர் சா இராமாநுசம்

Sunday, January 4, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக !



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
நிலையாக தடையின்றிப் பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைவது உண்டே
செயற்கையால் வருவதே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – வந்து
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...