Saturday, April 26, 2014

கடந்திட்டேன் ஓரளவு வலியின் துயரே ! –எனவே காணவந்தேன் உறவுகளே நீரென் உயிரே!




முடிந்தவரை கருத்துகளை  எழுதி  வருவேன் –சற்று
     முடியாத திலைதனிலும்  முயன்று  தருவேன்!
விடிந்தவுடன் காணுவது  கணினி  தானே –தனிமை
      வேதனையை, அறியாது  மகிழ  நானே!
வடிந்துவிட்ட  வாய்க்காலாய்  வாழ மாட்டேன் –நீரே
     வருகின்ற வழிதனிலே  ஓய மாட்டேன்!
கடந்திட்டேன்  ஓரளவு வலியின்  துயரே ! –எனவே
    காணவந்தேன்  உறவுகளே நீரென்  உயிரே!

சிலநாட்கள் ஓய்வாக  இருந்த  போதும் – மேலும்
    சிந்தனைகள்  அலையாக  வந்தே  மோதும்
பலநாட்கள்  ஆனதுபோல்  உள்ளச் சோர்வே –சதா
    படுக்கையிலே  கிடப்பதனால் உடலில்  வேர்வே!
அப்பப்பா  கொடுமையது ! தாங்க  இயலா! – மருத்துவர்
    அறிவுரைக்கு  ஏற்பநாளும்  முயல!
எப்பப்பா என்றேநான் காத்துக்  கிடந்தேன் –மீண்டும்
    எழுதிடவே துணிவாக , நன்றிவந்தேன்!

புலவர்  சா  இராமாநுசம்
  

Tuesday, April 22, 2014

ஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நமதுடமை!





இடையில், உள்ளது  ஒருநாளே -நமக்கு
   இருப்பது  தேர்தலில்!   வருநாளே!
படையுள் வீரன்  கைவாளே –என
   பயன்தர, ஓட்டு  அந்நாளே
தடையில் ! சென்றே  போடுங்கள்! –உணர்ந்து
    தக்கவர்  எவரென  தேடுங்கள்
கடையில்  விற்கும்  பொருளல்ல- எதிர்
   காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!

ஓட்டுப்  போடுதல்  நம்கடமை –அது
   ஒன்றே இன்று  நமதுடமை!
காட்டுத்  தர்பார்  ஒழியட்டும்!-இலஞ்ச
    கயமைக் குணமே  அழியட்டும்!
நாட்டு  நடப்பை  மாற்றிடவே –வெளி
   நாடுகள்  நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச்  செய்வோமே –பெற்றக்
    கேடுகள்  நீங்க  உய்வோமே!

புலவர்  சா  இராமாநுசம்

  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...