Thursday, April 6, 2017

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே!



வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன்
வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே
தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால்
தணியாது எரியாதோ மக்கள்தம் வயிறும்
ஏங்காதே பின்னலே விலைவாசி ஏறின்- என்றே
எண்ணியே தெளிவாக ஆராய்ந்து தேறின்
தூங்காது விழிப்போடு போடுவாய் ஓட்டே- நன்றே
தேர்தலில் உன்னுடை உரிமையாம் சீட்டே


புலவர் சா இராமாநுசம்

Tuesday, April 4, 2017

எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது!



எண்ணிய எண்ணியாங்கு எய்தலினிது-நல்ல
இல்லறம் ஒன்றேதான் என்றுமினிது!
பெண்மையை மதித்தலே உலகிலினிது-ஏதும்
பிழையின்றி பேசலே மொழிக்கினிது!
கண்ணியம் காத்தலே மாந்தர்க்கினிது-கல்வி
கற்றாரைக் காமுற்று காணலினிது!
புண்ணியம் தேடலே வாழ்விலினிது-செய்யும்
பொதுவாழ்வு தன்னிலே நேர்மையினிது!


கொல்லாமை விரதாமாய்க் கொள்ளலினிது-நளும்
கொள்கையின் வழிநாடி நடத்தலினிது!
இல்லாமை நோயின்றி இருத்தலினிது-தம்மின்
இயல்பாலே காண்போரைக் கவர்தலினிது!
சொல்லாமை பொய்தன்னை அறத்திலினிது-எதுவும்
சொந்தமெனச் சொல்வதை மறத்தலினிது!
கல்லாரைக் கற்றோராய் ஆக்கலினிது-மூடக்
கயவரைக் கண்டாலே விலகலினிது!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...