Friday, January 3, 2014

அம்மா முதல்வர் அம்மாவே –கைது ஆவதா மீனவர் அம்மாவே




அம்மா முதல்வர் அம்மாவே –கைது
    ஆவதா ? மீனவர்  அம்மாவே
சும்மா சும்மா நடக்குதே –துயர்
    சுமந்து நெஞ்சம் வெடிக்குதே
இம்மா நிலத்தில் அவர்வாழ –இனி
    இடமே இல்லையா !நலம்சூழ
அம்மா முடிவு எடுப்பீரே –இந்த
     அவலத்தை உடனே தடுப்பீரே

துணிவே துணையாய்க்  கொண்டவரே-கைது
     தொடர்கதை யாவதைக் கண்டவரே
இணயாய்  நாங்களும் வருகின்றோம் –மக்கள்
     எழுச்சியைத் திரட்டி தருகின்றோம்
அணையாய் அனைவரும் ஒன்றாக –கடல்
     அலையென ஓய்வு இன்றாக
பணிவாய் உம்மை  வேண்டுகிறோம் –அறப்
     போர்செய உடனே தூண்டுகிறோம்

             புலவர்  சா  இராமாநுசம்




Wednesday, January 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டே வருக !-மக்கள் அனைவர்க்கும் நன்மையே தருக!





ஆங்கிலப் புத்தாண்டே வருக !-மக்கள்
    அனைவர்க்கும்  நன்மையே  தருக!
தாங்கிட  இயலாதே  நெஞ்சம் –தாகம்
    தணிக்கவும் நீரில்லாப்  பஞ்சம்
ஏங்குகிடும் விவசாயிப்  பாராய் –அவன்
    ஏக்கத்தை  நீக்கிட  வாராய்
மாங்குயில்  கூவிடும்  சோலை –இன்று
    மழையின்றி  ஆனதேப்  பாலை!

நாள்தோறும் மின்வெட்டு  வேறு –தொழில்
     நடக்குமா ! வாழுமா  பாரு!
வாள்போல அறுக்குதே  தினமும் –அந்தோ
     வருந்தியே  துடிக்குதே  மனமும்
தேள்போலக்  கொட்டிட  ஈண்டே-மேலும்
    தேவையா ! தீர்ப்பாயா ஆண்டே
தாள்போற்றி  வேண்டுதல் செய்தோம் –துயர்
     தணித்திட , இக்கவி நெய்தோம்!

      புலவர்  சா  இராமாநுசம்
  
  

Tuesday, December 31, 2013

அந்தோ மறைந்தார் நம்மாழ்வார்- என்றும் அனைவர் மனதிலும் அவர்வாழ்வார்!




அந்தோ மறைந்தார் நம்மாழ்வார்- என்றும்
அனைவர் மனதிலும் அவர்வாழ்வார்!
தந்தார் இயற்கைச் விவசாயம்-அழியாத்
தரமுடன் வாழ்ந்திட நம்தேயம்!

காலன் அவரையும் விடவில்லை –இயற்கை
காலத்தால் நடப்பதாம்! ஏதுஎல்லை!
ஞாலம் வாழ்ந்திட வழிகண்டார் –எடுத்து
நாளும் நமக்கதை அவர்விண்டார்

வாழ்நாள் முழுவதும் அதற்கென்றே-அவர்
வாழ்ந்து பெற்றது புகழொன்றே!
வீழ்நாள் நமக்கும் வரும்ஒன்றே –அவர்
விட்டதைத் தொடர்வோம் நனிநன்றே


புலவர் சா இராமாநுசம்

 





Monday, December 30, 2013

அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\ ஆத்மி கட்சி திவாலே!






அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\  
    ஆத்மி கட்சி திவாலே!
வந்தார் ஊழல் ஒழிக்கவென –கிழிய
    வாயும் ஒலிக்க முழக்கமென!
தந்தார் மக்களும்  ஓட்டுகளை-வீசித்
     தள்ளினர் இலஞ்ச  நோட்டுகளை
அந்தோ!! உண்மை! அறியாரே – நாளும்
    அடுத்தென விரைவில் புரிவாரே!

பக்கா ஊழல் துணையாக –இன்று
    பதவி ஏற்றார் பிணையாக
முக்கா கிணறு  தாண்டுவதா –இவர்
    முடிவு நாட்டுக்கு வேண்டுவதா!!!?
பாழாய் கிணற்றில் வீழ்ந்துவிட்டார் –ஏனோ
   பதவி ஆசையா !! தாழ்ந்துகெட்டார்
வாழா    வெட்டி ஆட்சிக்கே –முதல்வர்
    வந்தார் இவரென  சாட்சிக்கே

         புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...