Saturday, June 18, 2011

கொலைகாரா உன்னுடலை...?

ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


(நன்றி முத்துக்கமலம்)

                    புலவர் சா இராமாநுசம்

Friday, June 17, 2011

கண்ணீர் கடிதம்

தாழ்ந்தாய் தமிழா தாழ்ந்தாய் நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ
வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற
சூழ்ந்ததே உன்னை பழி பாவம்
    சொன்னால் எதற்கு வீண் கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா வருமா இனி வேகம்

அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்கு கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
    சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
    உண்மைத் தமிழா சொல் லையா

ஓடிஓடி தேடுகி றார் தம்
     உறவினர் உடலைத் தேடு கிறார்
ஆடிப் போகுதே நம் உள்ளம்
     அருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்
தேடி எங்கும் தெருத் தெருவாய்
   திரியும் அவர்நிலை கண் டாயா
கோடி எடுக்கவும் ஆள் இல்லை
   கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமா கை
     கூலிகள் உணர  சாவோ மா
மாண்டார் மானம் காத் தாரே
      மற்றவர் பின்னர் தூற் றாரே
ஆண்டோம் அன்று இவ் வுலகே
     அடைவோம் இன்று அவ் வுலகே
         
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்

Thursday, June 16, 2011

சேனல் நான்கைக் கண்டேனே

வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்    
     வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
      வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும்  இன்றுவரை-உலகில்
       ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
      எதற்கு இறைவா அழித்துவிடு


படமதைப் பார்த்து அழுதேனே-இனி 
  பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
   வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
    இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
    வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்       
    மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
  புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
  இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
   கதர உதிர நாளுமென


இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்   
   ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
   இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
    பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
   செழிக்க வாங்கித் தருவாயா

Wednesday, June 15, 2011

குருடாகிப் போனதா--சர்வதேசம்




குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம்
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதனை

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்

Tuesday, June 14, 2011

என் பாதையும் பயணமும்...



சின்னக் குழைந்தாய் ஏன்வந்தே-இங்கு
சிலைபோல் காணும் நிலைதந்தே
கன்னம் பாதி மறைந்திடவும-சோகம்
கண்களில் நன்கே நிறைந்திடவும
தன்னம் தனியே உனைக்காண-மேலும்
தவிப்பும் பயமும் முகம்பூண
என்னுள் நினைவுகள் தாக்கியதே-இதயம்
ஈழம் தன்னை நோக்கியதே

காலில் உனக்கோ செருப்பில்லை-அங்கே
காலொடு கையும் தோளுமில்லை
நாளும் அழிந்தது நமினமே-இங்கே
நம்மைப் பழித்திட நம்மனமே
தோலில் சுரணை வரவில்லை-இந்திய
தேசப் பற்றாம் புரியவில்லை
பாலில் வற்றிய அன்னைதான்-உலகு
பார்க்கும் பாவச் சின்னந்தான்

தலைமேல் உனக்கு முக்காடே-ஈழத்
தமிழர் வாழிடம் சுடுகாடே
அலைபோல் அலைந்து உதைபட்டும்-அவன்
அழிய சதைகள் கிழிபட்டும்
கலையாத் தூக்கம் இந்நாட்டில்-கண்டு
காறித் துப்ப வெளிநாட்டில்
நிலையாய் பெற்றோம் பழியேதான்-அது
நீங்கக் காணபோம் வழியேதான்

மடிந்தவர் போக மற்றவரும-தம்
மனதில் அமைதி அற்றவராய்
விடிந்தால் என்ன நடக்குமெனும்-பெரும்
வேதனை தன்னில் மூழகிமனம்
முள்ளின் வேலி தனிலுள்ளே-அந்தோ
முடங்கிக் கிடப்பார் நிலைசொல்ல
சொல்லில் அடங்கும் ஒன்றல்ல-எடுத்து
சொல்ல நடந்ததுநடப்பது ஒன்றல்ல

கதறி அழுதும் வரவில்லை-ஏன
கண்ணீர் அவரக்கே கண்ணில்லை
பதறி துடித்தும் ஒலியில்லை-ஈனப்
படைகள் கேட்பின் வரும்தொல்லை
சிதறி ஓடிமறைந தாலும்-அதை
சிங்கள வெறியர் அறிந்தாலும்
குதறி அழிக்க வருவாரே-இந்த
கொடுமை தீர்பார் இனியாரே


புலவர் சா இராமாநுசம்

Monday, June 13, 2011

தொலைந்தது மீண்டும் வந்தது



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே

என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்

எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...