Saturday, January 26, 2013

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!




ஆண்டுதோறும்  திருவிழாபோல் வந்தே  போகும் குடி
   அரசுயென்னும்   திருநாளின்  நிலையே  ஆகும்!
ஈண்டுபல   இடங்களிலும்   கொடியே   ஏற்றி என்றும்
   ஈடில்லா தலைவர்கனின்  நினைவை  போற்றி!
மீண்டுமீண்டும்   நடக்கின்ற சடங்காம்  என்றே-இதன்
    மேன்மைதனை உணராதும் செய்வார்  இன்றே!
வேண்டியிதை  அந்நாளில்  செய்தார்  தியாகம் நாட்டு
    விடுதலைக்கே  உயிர்பலியே  தந்தோர்  ஏகம்!

தன்னலமே  ஏதுமின்றி  பாடும்  பட்டார் அடிமைத்
     தளைதன்னை  முற்றிலுமே  நீக்கி  விட்டார்!
என்னலமே  பெரிதென்பார்  கையில்  தானே நாடும்
    எள்ளுகின்ற  நிலைதானே,   அனைத்தும்  வீணே!
இன்னலதே   நாள்தோறும்   வாழ்வில் ஆக மேலும்
    ஏழைகளோ  ஏழைகளாய்  மடிந்தே  போக!
மன்னரென  ஆனார்கள்  சிலரும்  இங்கே  - உண்மை
    மக்களாட்சி  காணாது   போன  தெங்கே ?


ஒப்புக்கே  நடக்கும்விழா   நாட்டில்,  முற்றும்  - எடுத்து
      உரைத்தாலும்   உணர்வாரா ? மக்கள்   சற்றும்!
தப்புக்கே  தலையாட்டும்   தாழ்ந்த  மனமே  - குடியால்
     தள்ளாடும்   ஐயகோ  மனித   இனமே!
எப்பக்கம்  நோக்கினாலும்   அவலக்  காட்சி
     எதிர்கால  வளர்ச்சிக்கு   இதுவா  மாட்சி!
செப்பிக்க  குடியரசு   இதுதான்  போலும் விளக்கி
     செப்பிடவே இயலாத கொடுமை  நாளும்!

                                            புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, January 23, 2013

மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை மறப்பின் இல்லை புனிதர்களே!




       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

Sunday, January 20, 2013

ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!





ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு! 
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல 
பண்பை என்றும் நீநாடு! 
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப் 
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு 
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற 
கொள்கையைக் காக்க தயங்காதே! 

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு 
எண்ணி எதையும் செய்வாயே! 
செயற்கையைத் தேடி அலையாதே-நம் 
செந்தமிழ் பேச மறக்காதே! 
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ 
முயன்றால் வெற்றி அவ்வினையாம் 
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே 
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே! 

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது 
உரிமைக்கு வந்தால் போராடு! 
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர் 
ஏய்க வந்தால் நீசாடு 
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில் 
என்றும் வாரா ஒருகேடு 
செவ்வழி இவையே நலங்காண-பிறர் 
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்
   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...