Friday, March 2, 2012

மாற்றம் ஒன்றே நிலையாகும்!


மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
   மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும்

தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
   தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்

அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
    அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
     வேதனை மூட்டும் கேள்விசில

தடையது வந்தால் மாறுவதும்-பல
    தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
    நாளும் நடப்பது தோற்றத்தில்

ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
   எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
   உணர்ந்தால் வாரா ஒருதொல்லை

தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
   தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

                               புலவர் சா இராமாநுசம்






இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...