Friday, February 24, 2017

ஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்



வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திட ஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, February 22, 2017

கவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்



இன்றென் மனைவி பிறந்தநாளே-நெஞ்சில்
என்றும் மறவா சிறந்தநாளே
கன்றுமுட்ட சுரக்கும் பாலென-வாழ்ந்த
காலம் முழுவதும் சேயென
நன்றென என்னைக் காத்தவளே-என்னை
நடைப் பிணமாக்கி நீத்தனளே
சென்றன எட்டே ஆண்டுகளே –நாளும்
செயல்பட அவளதரும் தூண்டுதலே


புலவர் சா இராமாநுசம்

அப்பப்பா தமிழகமே தாங்காதய்யா-ஆள்வோர்
அலங்கோலம்! அவலமிது !நீங்காதய்யா
தப்பப்பா நடப்பதெல்லாம் ஆயினின்று-தமிழன்
தலைகுனிய வைத்தனரே இதுவாநன்று!
செப்பப்பா ஏதுவழி செம்மையுறவே-நல்லோர்
சிந்தையெலாம் துயர்தன்னில் வெம்மையுறவே
எப்பப்பா முடிவிதற்கு விரைந்து காண்பீர்-பொறுப்பு
ஏற்றவரே! ஆளுநரே வாரும் மாண்பீர்


புலவர் சா இராமாநுசம்

என்னமோ நடக்குது
ஏதேதோ நடக்குது நடராசா-தில்லை
நடராசா
முன்னபின்ன தெரியல
முழுமையா புரியல நடராசா-தில்லை
நடராசா
மின்னலென மறையுது
மேகமென விரையுது- நடராசா-தில்லை
நடராசா
இன்னலிது தந்துவிட
இதயமது நொந்துவிட-நடராசா-தில்லை
நடராசா


புலவர் சா இராமாநுசம்

Tuesday, February 21, 2017

முகநூலும் மூன்று கவிதைகளும்!

இலவுகாத்த கிளியானாய் மினியம்மா-உண்ண
இறைவன்தந்த வரம்தானே களியம்மா
உலவிடுவேன் சிங்கமென மினியம்மா-நீங்க
உரைத்தபின்னர் பற்றியது சனியம்மா
நிலவுபோல தேய்பிறையாய் மினியம்மா-கனவு
நீங்கியது விடாதினி சனியம்மா
பலவேசெய்தும் பயனில்லை மினியம்மா-வந்த
பாதையிலே பழுதுமிக சனியம்மா


புலவர் சா இராமாநுசம்


ஆளுனரே! ஆளுனரே எங்கே போறிங்க!-நீங்க
ஆளவந்த பின்நடக்கும் கூத்து பாருங்க
நளுமிங்கே நடப்பதெல்லாம் வெக்க கேடுங்க-இனியும்
நம்புதற்கு ஏதுமில்லை! முடிவு தேடுங்க!
மாளுவாங்க போருமிட்டு ! அமைதி போகுங்க-இங்கே
மக்களுக்கு வாழ்கையே துன்ப மாகுங்க!
ஆளுனரே! ஆளுனரே ஆய்ந்து பாருங்க-உண்மை
அறிந்த பின்னர் விடிவு கூறுங்க!


புலவர் சா இராமாநுசம்

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...