Thursday, May 8, 2014

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என் இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!



இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே –என்
இதயத்தை அறுக்கின்ற கூரிய வாளே!
அன்றெந்தன் கைபிடித்து வந்த முதலாய் – பெற்ற
அன்னையாய், தாரமாய் இரவு பகலாய்!
நன்றென்னை காத்தவளேன் விட்டுப் போனாய் –எனக்கு
நன்றென்றா! ஐயகோ! சாம்பல் ஆனாய்!
கொன்றென்னை கூறுபோட தனிமை உலகம் –நாளும்
கோமகளே நீதானென் வாழ்வின் திலகம்!

மருத்துவத்தில் நீபடித்து பட்டம் பெற்றாய் –நான்
மாத்தமிழைக் கற்றதிலே மகிழ்வே உற்றாய்!
பொருத்தமுண்டா எனச்சிலரும் கேட்ட போதும் –முறுவல்
பூத்திட்ட உன்முகமே கண்ணில் மோதும்!
திருத்தமுற மகவிரண்டும் பெற்றோம் நாமே-வாழ்வில்
தேடியநல் செல்வமென வளர ஆமே!
வருத்தமற உன்நினைவே கவிதை வடிவில் –வலம்
வருகின்றாய்! வாழ்கின்றாய்! உலகில்! முடிவில்!

இருக்கும்வரை உன்நினைவில் கவிதைத் தருவேன் –நான்
இறந்தாலும் உனைத்தானே தேடி வருவேன்
உருக்கமிகு உறவுகளே உலகில் எங்கும் -இன்று
உள்ளார்கள்! முகமறியேன்! உணர்வில் பொங்கும்!
நெருக்கமிகு , அவரன்பில் ,இன்பம் கொண்டேன்!- அதுவே
நீயில்லாத் துயரத்தைத் தணிக்கக் கண்டேன்!
ஆனால்,…..?
அருத்தமில்லை ! நீயின்றி வாழ்தல் நன்றா!- கேள்வி
ஆழ்மனதில் எழுகிறதே! தீரும் ஒன்றா!

புலவர் சா இராமாநுசம்

Monday, May 5, 2014

ஆள்வோரும் ஆண்டோரும் மாறிமாறி –தினம் அறிக்கைகளை விடுவதா இன்று தேவை!





ஆள்வோரும் ஆண்டோரும்  மாறிமாறி –தினம்
   அறிக்கைகளை விடுவதாஇன்று  தேவை!
மாள்வாரோ! மேன்மேலும் குண்டும் வெடிக்க –இதுவா
    மக்களுக்கு நாம்நாளும் செய்யும்  சேவை!
தோளோடு  தோள்சேர  ஒன்று  படுவோம் – இதுவே
   தொடர்கதை  ஆனாலே  முற்றும்  கெடுவோம்!
வாள்மீது நடப்பதாம்! இன்றை  நிலையே –மக்கள்
   வாழ்வுக்கு அணுவளவும் காப்பு  இலையே!

சாதிமதம்  கட்சியென  பேதம்  இன்றி –தமிழ்
   சமுதாயம் ஒன்றெனவே  நம்முள் ஒன்றி
பீதியின்றி நடமாட மக்கள்  எங்கும் –வீண்
   பேச்சுகளை தவிர்ப்பீரே! பகமை  மங்கும்!
மேதினியில் தமிழ்நாட்டின் மேன்மை  ஒங்க –இனி
   மேலுமிங்கே வெடிக்காமல் அச்சம்  நீங்க!
வீதிதோறும்  பாதுகாப்பு குழுக்கள்  வேண்டும்- மத
   வெறியர்களை வேரோடு அழிப்போம் யாண்டும்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...