Friday, May 16, 2014

வந்தது தேர்தல் முடிவேதான்- இனி வருமா நமக்கே விடிவேதான்!



வந்தது தேர்தல் முடிவேதான்- இனி
வருமா நமக்கே விடிவேதான்! -இதுவரை
நொந்தது போதும் என்றேதான் –மனம்
நோகா திருக்க நன்றேதான் –மத்தியில்,
தந்தனர் ஐயா பெரும்பான்மை! ! –ஊழல்
தடுப்பீர் ! காப்பீர் ! சிறுபான்மை! –தேர்தல்,
சந்தையில் ,விற்பதா !? குடியரசு - இங்கே
சனநாயகம் இன்றெனில் முடியரசே

எண்ணியே நாளும் ஆளுங்கள்- மக்கள்
இன்னல் எதுவென கேளுங்கள் -செயலில்,
புண்ணிய பாபம் பாருங்கள் –ஏழை
புலம்பலை முதலில் தீருங்கள் -அவர்,
கண்ணில் வடித்திட நீரில்லை –அந்தோ
கண்டதோ தினமும் துயரெல்லை- இம்
மண்ணை நம்பிய உழவன்தான் –இன்று
மண்ணொடு மண்ணாய்ப் போனான்தான்

ஆலையில் வேலையும் ஏதுமில்லை- கொத்து
அடிமை முறையும் ஒயவில்லை- மக்கள்
சாலையே வாழும் இடமாக –கட்சி
சண்டையால் ஆண்டி மடமாக –இனியும்-
நாளைக் கடத்துமா மக்களவை – எதிர்
நாளில் காட்டும் காலமவை – இளையோர்
வேலை வாய்ப்புகள் பெருகட்டும் - வீண்
விதண்டா வாதங்கள் கருகட்டும்

புலவர் சா இராமாநுசம்

Wednesday, May 14, 2014

இருப்பது இடையில் ஒருநாளே – பதவி ஏற்பவர் தெரியும் மறுநாளே!





இருப்பது  இடையில்  ஒருநாளே – பதவி
   ஏற்பவர்  தெரியும்  மறுநாளே!
பொறுப்பொடு  செயல்பட  வேண்டுமே –கடந்து
   போனதை  தோண்டிட  வேண்டாமே!
விருப்பு வெறுப்பு  இல்லாமல் –யாரும்
   வேதனைப்  படும்படி  சொல்லாமல்!
சிறப்பொடு நேர்மையாய்  செயல்படுவீர்- என
   செப்பிட  மக்கள்   முற்படுவீர்!

வென்றவர்  தோற்றவர்  இருவீரும் –தம்
   வேற்றுமை  மறந்து  ஒருவீராய்!
நின்றெவர்  வரினும்  பொதுநலமே –என்றும்
   நிலையன  துளியும்  சுயநலமே!
இன்றென  பதவி  ஏற்பீராம் -ஆட்சி
   இனித்திட! மக்களைக்  காப்பீராம்!
நன்றென மக்கள் வாழ்த்தட்டும் – இந்த
   நாட்டை மகிழ்ச்சியில்  ஆழ்த்தட்டும்!

புலவர்  சா  இராமாநுசம்
  

Monday, May 12, 2014

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த முரடர்கள் செயலால் முடங்கட்டும்!





எழுவாய்த்  தமிழா  எழுவாயா-அணையை
     இழந்த   பின்னர்  அழுவாயா!
வழுவாய்ச்  சொல்லியே  துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட  பொய்பல  தொடுக்கின்றார்!
தொழுவாய்  எதற்கு  வடநாடே-அவர்
    துணையால்  நடப்பதே  இக்கேடே!
கழுவாய்  எதிர்ப்புப்  போராட்டம்- இங்கே
     கண்டவர்  புத்தி  மாறட்டும்

முல்லைப்  பெரியார்  அணைமட்டும்-அந்த
     முரடர்கள்   செயலால்  முடங்கட்டும்!
எல்லைப்  போரே  நடந்திடுமே-நம்
    ஏக  இந்தியா  உடைந்திடுமே
தொல்லை மத்தியில்  எவர்வரினும்-உடன்
     தொடுப்போம் அறப்போர்  துயர்தரினும்
இல்லை  என்றால்  பெருந்தீங்கே இங்கு,
     ஏற்படும்!  தீர்ப்பால்!  பயனெங்கே

திட்டம்  இட்டே   செய்கின்றார்-அவர்
    தினமும்  பொய்மழை   பெய்கின்றார்
கொட்டம்  இனிமேல்  செல்லாதே-தமிழன்
    குமுறும்  எரிமலை!  பொல்லாதே!
சட்டம்  நமக்கே சாதகமாய்- தீர்ப்பு
     சரியென  வந்தும்  பாதகமாய்
பட்டே  அறிவும் வரவில்லை!   -இதுவே
     பண்பா ?  பகையா!? தெரியவில்லை!


அனைவரும்  ஒன்றாய்  சேருகின்றார்-நம்
     அணையை  உடைக்கக்  கோறுகின்றார்
இனியென  தமிழகம்  திரளட்டும்-நம்
      எழுச்சியை  உலகம்  உணரட்டும்
தனியொரு  புதுயுகம்  தோன்றட்டும்-பின்
      தக்கதோர்  பாடம்  கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில்  நோயே  உற்றவர்கள்

உதிரிப்  பூவாய்  கட்சிகளே-இங்கே
    உள்ளது  சரியா  கட்சிகளே
எதிரிகள்  அனைவரும்  ஒன்றாக-அங்கே
    இருப்பதைக்  காண்பீர்  நன்றாக
சதிபல  அன்னவர்  செய்கின்றார்-ஏற்ற
    சமயம்  இதுவென  முயல்கின்றார்
மதிமிகு  தமிழா  எழுவாயாநம்
    மானத்தை  உரிமையைக்  காப்பாயா

                         புலவர் சா இராமாநுசம்

Sunday, May 11, 2014

அன்னையர் தினம்



  அன்னையர்  தினம்

சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும்  நினைந்தீரா  சுமையாய்! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...