Saturday, May 12, 2012

அன்னையர் தினம்!



சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?

உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?

புலவர் சா இராமாநுசம்

Friday, May 11, 2012

பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும் பாரா முகமேன் ஆள்வோரே!


தனியார் பள்ளிக் கொள்ளைகளே-மீண்டும்
   தாங்கிட இயலாத் தொல்லைகளே!
இனியார் எம்மைக் கேட்பாரே-இன்று
   எமக்கே உரிமையும் தந்தாரே!
அணியாய்த் திரண்டு வழக்கிட்டார்-நீதி 
    அவர்கே வெற்றி! முழக்கிட்டார்!
பணிவாய்க் கேட்கிறோம் ஆள்வோரே-இன்னும்
   பாரா முகமேன் ஆள்வோரே!


கொண்டதே கொள்கை என்கின்றார்-தாம்
    கூறுதல் வேதம் என்கின்றார்!
விண்டதேக் கட்டணம் என்கின்றார்-கேட்டால்
    விரட்டியே வெளியே தள்ளுகின்றார்!
தண்டமும் வேறு விதிப்பாரே-இதைத்
   தடுத்திட இயலா! பெற்றோரே!
கண்டிட வேண்டும் ஆள்வோரே-உடன்
   கண்டிக்க வேண்டும் ஆள்வோரே!


சேவையாய் கல்வியை பள்ளிகளே-எண்ணி
   செய்திட வேண்டும் பள்ளிகளே!
தேவையாம் பொருளென வழிதேடி-இப்படி
    தேடினால் வருமே பழிநாடி!
எழுத்தே தருபவன் இறைவன்தான்-என
   எழுதினர் நமது முன்னோர்தான்!
கழுத்தை நெறிப்பதா பள்ளிகளே-மேலும்
   கட்டணம் எரியும் கொள்ளிகளே!

                          புலவர் சா இராமாநுசம்
  

  

Thursday, May 10, 2012

தலைமீது கூடையிலே கீரைக் கட்டே!


தலைமீது கூடையிலே கீரைக் கட்டே-தன்
   தலைவிதியை நினத்தபடி துன்பப் பட்டே!
விலைகூறி முடிந்தவரை சத்த மிட்டே-இந்த
    வீதிவழி போகின்றான் நாளுந் தொட்டே!
நிலைகெட்டுத் தடுமாறி நடையும் தளர-சற்று
    நின்றபடிக் கத்துவான் நாக்கு முலர!
விலைகேட்டு அதிகமென விலகிச் செல்ல-படும்
    வேதனையை விளக்கிடலோ! எளிதே யல்ல!

இப்படியே வாழ்கின்றார் எத்தனை பேரே-இந்த
   ஏழைகளின் துயர்தன்னை தீர்ப்போர் யாரே!
தப்படியே வைக்கின்றார் ஆள்வோர் யாரும்-இதை
   தடுத்திடவே முனைவோரும் உண்டா கூறும்!
எப்படியோ போகட்டும்! வேண்டும் நன்மை-என
   எண்ணுகின்ற நிலைதானே நமதுத் தன்மை!
செப்பிடவே இயலாத கொடுமை தானே-கண்டு
   சினந்தென்ன நாமெல்லாம் அடிமை தானே!

கோபுரமாய் வீடெல்லாம் மாறக் கண்டோம்-ஆட்சிக்
    கோட்டையிலே மாறிமாறி ஏறக் கண்டோம்!
ஆபரண துணிமணிகள் மாற்றம் கண்டோம்-வெட்டி
    அரசியலும் பேசுவதில் இன்பம் கண்டோம்!
பாபிகளாய் ஏழைகளைத் தினமும் கண்டோம்-சற்று
    பரிதாபம் பட்டதுடன் முடித்துக் கொண்டோம்!
ஹாபியென ஆங்கிலத்தில் சொல்லைக் கண்டோம்-மன
   ஆறுதலாய்ச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டோம்!

                  புலவர் சா இராமாநுசம்


Monday, May 7, 2012

என்னவள் மறைந்ததும் இந்நாளே


ஓடின மூன்று ஆண்டுகளே-என்
  உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
   தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
   வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
   படைத்தேன் படித்திட நீரிங்கே!

தன்னலம் காணாத் தகவுடையாள்-எதிலும்
       தனக்கென நற்குணம் மிகவுடையாள்!
 இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
        எவருக்கும் மறுப்பு கூறாமல்!
 என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
       ஏழைக்கே மருந்தும் தந்திடுவாள்!
 அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
       அறிந்திட இயலாப் பாவழியே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

                       புலவர் சா இராமாநுசம் 


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...