Friday, May 18, 2012

மே- பதினெட்டே!


              மேதினி போற்றும் மேதினமே-உன்
                 மேன்மைக்கே களங்கம் இத்தினமே!
              தேதியே ஆமது! பதினெட்டே-ஈழர்
                  தேம்பி அலற திசையெட்டே!
               வீதியில் இரத்தம் ஆறாக-முள்ளி
                   வாய்கால் முற்றும சேறாக!
               நீதியில் முறையில் கொன்றானே-அந்த
                   நினைவு நாளே துக்கதினம்!

               உலகில் உள்ளத் தமிழரெங்கும்-இன்று
                   ஒன்றாய்க் கூடி அங்கங்கும்!
               அலகில் மெழுகு ஒளியேந்தி-பெரும்
                   அமைதியாய்  நெஞ்சில் துயரேந்தி!
                வலமே வருவார் ஊரெங்கும்-மனம்
                    வருந்த மக்கள் வழியெங்கும்!
                திலகம் வீரத் திலகமவர்-உயிர்
                    துறந்த தியாக மறவர்!

               முள்ளி வாய்க்கால் முடிவல்ல-ஏதோ
                   முடிந்த கதையா அதுவல்ல!
               கொள்ளி வைக்கவும ஆளின்றி-மொத்தக்
                   குடும்பமே அழிந்த நாளன்றோ!?
               புள்ளி விவரம் ஐ.நாவே!-அறிக்கை
                   புகன்றதே நாற்பது ஆயிரமே!
               உள்ளம் குமுற அழுகின்றார்-கூடி
                   உலகத் தமிழர் தொழுகின்றார்!

              அகிலம் காணாக் கொடுமையிதே-நாம்
                  அறிந்தும் அமைதியா-? மடமையதே!
              வெகுள வேண்டும் தமிழினமே-எனில்
                  வீரம் விளையாக் களர்நிலமே!
              நகுமே உலகம் நமைக்கண்டே-வெட்கி
                  நம்தலை தாழும் நிலையுண்டே!
              தகுமா நமக்கும் அந்நிலையே-மாறும்
                  தமிழகம் பொங்கின் சூழ்நிலையே!

                                                புலவர் சா இராமாநுசம்

Thursday, May 17, 2012

விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா வேரற்று வீழ்ந்திட விடுவீரா!



சென்றப் பதிவில் மாற்றமே
  செய்தேன் பாரும்! தோற்றமே!
என்றும் எழுதுவேன் விருத்தமே
  எழுதினேன் வெண்பா திருத்தமே!

பலரும் அதனை அறியவில்லை
   பதிலில்! ஏனோ? தெரியவில்லை!
சிலரில் ஒருவரே வெண்பாவே
   செப்பினார்! அருணா ஒண்பாவே!

மாற்றம் வேண்டி மாற்றியதே
  மனமே வெண்பா சாற்றியதே!
ஏற்பதோ உங்கள் கையில்தான்
  எழுதுவேன் மேலும் பொய்யில்தான்!

முன்பே சிலபேர் கேட்டார்கள்
   மொழிந்திட வெண்பா பாட்டாக!
அன்பரே பிடித்தால் கொள்ளுங்கள்
    அல்லது என்றால் தள்ளுங்கள்!

செப்பிடின் வெண்பா எளிதல்ல
   செய்யுள் இலக்கண மதைச்சொல்ல!
ஒப்பிட வேண்டும் சீர்தோறும்
   ஒவ்வொரு சொல்லும் அடிதோறும்!

எழுதுவேன் மேலும் சிலவற்றை
   என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
   வேரற்று வீழ்ந்திட விடுவீரா!

             புலவர் சா இராமாநுசம்

Tuesday, May 15, 2012

எங்கும் தமிழே! எதிலும்தமிழ் என்றே! பொங்கும் நமதாட்சி என்றாரே!


எங்கும் தமிழே!  எதிலும்தமிழ் என்றே!
பொங்கும் நமதாட்சி என்றாரே! -இங்கேதான்
மங்கும் தமிழ்தானே மாற்றம் இலை!ஏனோ
சங்கம்வ ளர்த்தவளா தாய்!


அன்னைத் தமிழ்தானே! ஆட்சி மொழியென்றே
சொன்ன நிலையென்ன! சொல்லுங்கள்!-இன்றேதான்
ஆண்டும் பலசெல்ல ஆனதென்ன நாடறியும்
வேண்டும் வழிதான் விளம்பு!


பைந்தமிழால் ஆட்சிதனைப் பற்றியதை எண்ணாமல்
நைந்துவிட காண்பதுவும் நன்றாமோ-பைந்தமிழோ
வாழ்விழந்தே தேய்ந்திடவும் வந்தமொழி வாழ்ந்திடவும்
சூழ்நிலையா நாட்டில் நலம்!



சடங்காகிப்  போயிற்றாம் சட்டந்தான் இங்கே
அடங்காது துன்பந்தான் அந்தோ-தடங்காணோம்
கன்னித் தமிழ்தாயே காலத்தால் என்றென்றும்
மன்னும் அவருக்கே மாசு!



இன்றில்லை என்றாலும் என்றேனும் கண்டிடுவர்
நன்றில்லா செய்கையென நாடறியக்-குன்றிடுவர்
காலம் பதில்சொல்லும் கன்னித் தமிழ்வெல்லும்
ஞாலம் அறியும் சிறப்பு!


ஆங்கிலத்தில் பள்ளிகளும், தேடுகின்ற பெற்றோரும்,
தாங்குகின்ற ஆட்சிகளும்! நம்நாட்டில்!-தீங்குமிக,
காரணமே ஆயிற்றே காசென்றே பள்ளிகளும்
தோரணமாய் நாளும் வரும்

                                        புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...