Saturday, August 2, 2014

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்

ஒரு மகிழ்ச்சியான செய்தி!
நான் அடுத்த வாரம்(5-ஆம் தேதி) சீனாவில் , பெய்ஜிங் ,ஷங்காய், அடுத்து ஹாங்காங், மெக்காவ் போன்ற
இடங்களுக்குச் சுற்றுலா உங்கள் வாழ்த்தோடு செல்கிறேன்
என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்!

சுதந்திரத் திருநாளன்று அதிகாலை சென்னை வந்து விடுவேன்
அதன் பின்பே என் பதிவுகள் வழக்கம் போல் ,தொடரும்!

புலவர் சா இராமாநுசம்

Friday, August 1, 2014

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி, மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை



மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை-ஆட்சி
மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை
ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் –மோடி
அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம்
தூற்றுவதாய் எண்ணாதீர் போகும் போக்கே –எடுத்து
துல்லியமாய் காட்டுதந்தோ உற்று நோக்க
நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா
நீங்களுமா..! போவதென்ன!? வருதல் பழியே

அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஒயவில்லை –தினம்
அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை
எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ!
ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே
உழுவார்க்கு ஊக்கதெகை ! நெல்லுக்கே மறுப்பதா!- இந்த
உலகுக்கே அச்சாணி! அவன்கழுத்தை அறுப்பதா!
எழுவாரா ! தொழில்செய்ய! எண்ணுவாரா! மத்தியிலே -உடன்
ஏற்றிடுவீர் ! சிந்தித்து மாற்றமது புத்தியிலே!

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 30, 2014

பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும் பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!


ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை!
பாரறிய பா ஜ கா பொங்கி எழுவாய்-நீயும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக!
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா நமது இந்தியா!

தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ !ஏற்றோம் பழியே!
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே!
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்!
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே!

ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
உலகமே உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே!
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்!
கூசாமல் எம்மவரைக் கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்!
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே!

கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!
மண்ணோடு அவனாட்சி மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்!
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்!
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...