Friday, August 15, 2014

நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த நாளில் வரமே தரவேண்டும்



பாருக் குள்ளே நம்நாடே-புகழ்
பாரதம்! உண்டா அதற்கீடே
ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று
ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
போற்றியே புகழ்ந்து மறுநாளே
யாருக்கும் நினைவில் வாராதே-இனி
என்றும் இந்நிலை மறாதே

வந்ததே சுதந்திரம் யாருக்காம்-நல்
வந்தே மாதரம் ஊருக்காம்
தந்தவன் சென்றான் ஆண்டுபல-அதை
தன்னல மிக்கோர் ஈண்டுசில
சொந்தமாய் தமக்கேப் போனதென-தினம்
செப்பும் நிலையே ஆனதென
நிந்தனை செய்து என்னபலன்-இந்த
நிலையை மாற்ற எவருமிலன்

வெள்ளையன் விட்டுச் சென்றாலும்-ஒரு
வேதனை தீர்ந்தது என்றாலும்
கொள்ளையர் சிலர்கை அகப்பட்டோ-நாளும்
கொடுமை அந்தோ மிகப்பட்டே
தொல்லைப் படுநிலை ஆயிற்றே-துன்பம்
தொடர்கதை யாகப் போயிற்றே
எல்லை மீறின் தன்னாலே-நாம்
இழப்போம் அனைத்தும் பின்னாலே


கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
கலப்படம் செய்யவும் சுதந்திரமே
வெள்ளம் வருமுன் அணைபோட-தூய
விடுதலை நோக்கி நடைபோட
நல்லோர் ஆள வரவேண்டும்-இந்த
நாளில் வரமே தரவேண்டும்




சா  இராமாநுசம்
 

14 comments :

  1. ஐயா சுதந்திரதின கவிதை அருமை.

    ReplyDelete
  2. நல்லோர் எவரும் ஆள வரமாட்டாருங்கய்யா......

    ReplyDelete
  3. கொலையும் செய்ய சுதந்திரமே-பகல்
    கொள்ளை அடிக்கவும் சுதந்திரமே
    கள்ள வாணிகம் சுதந்திரமே-பொருள்
    கலப்படம் செய்யவும் சுதந்திரமே

    நான் மிகவும் ரசித்தவரிகள் ஐயா.

    ReplyDelete
  4. எல்லோர் மனதிலும் உள்ளதை எழுத்தில் அழகாய் வடித்து விட்டீர்கள் !
    த ம 2

    ReplyDelete
  5. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  6. ஒருநாள் மட்டும் அதைப்போற்றி
    பேருக்கு சுதந்திரத் திருநாளே-விழா
    போற்றியே புகழ்ந்து மறுநாளே
    யாருக்கும் நினைவில் வாராதே-//

    அருமை! ஐயா! உண்மையை உரைத்திட்ட அழகான கவிதை!

    ReplyDelete
  7. அழகான கவிதை...
    சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

  8. வணக்கம்!

    தமிழ்மணம் 3

    நல்லார் தலைமையில் நாடு நடைபெற்றால்
    எல்லாம் இனிக்கும் இனி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...