Monday, June 13, 2011

தொலைந்தது மீண்டும் வந்தது



தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே

என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்

எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்

புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது
    இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
    இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்

    ஐயா நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  2. மிக அருமையான கவி அண்ணா!
    (ஐயா என்றழைக்க தோன்றுகிறது. என்வயது ஐந்து தசாப்தம் தாண்டிவிட்டதால் தங்கள் வயதை கூடுதலாக்கிவிடக்கூடாதே!)

    மரபுக்கவிதை மதுரக் கவியாகிக் கிடக்கின்றது! வாழ்க!!

    ReplyDelete
  3. மன்னும் உயிரும் உடலோடு-அவள
    மறுத்தால வாழ்வே சுடுகாடே
    இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
    இதயம் திறக்க மறுக்கின்றாள்

    சொல்லா அவள்
    பொல்லா காதலை
    ஆளுமையாய் இன்னும்
    அருமையாய் சொன்ன
    விதம் கண்டு பணிகிறேன் - உங்கள்
    பதம் ஐயா

    ReplyDelete
  4. இன்றுதான் தங்கள் கவிதைப் பூங்காவினுள்
    நுழைந்தேன் மெய்மறந்தேன்
    தொடர்ந்து பதிவுகளைப்படிக்க படிக்க
    மலைத்துப்போனேன்
    நல்ல் வழிகாட்டியாக தங்கள் பதிவு
    இருப்பதால் இன்று என்னை
    இணைத்துக்கொண்டுள்ளேன்
    வாழ்க நலமுடனும் தமிழுடனும்..

    ReplyDelete
  5. எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது //

    சபாஷ்...இன்றும் இளமைத் துடிப்போடு உங்கள் கவிதைகள் இருக்கின்றன என்பதற்குச்ச் சான்றாக இவ் வரிகள்..

    நினைவுகளைக் கனவினூடாகத் தரிசித்து வாழும் ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வுகளாக இந்தக் கவிதை வந்திருக்கிறது.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...