Wednesday, March 27, 2013

அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும் அக்கினி தனக்கே எருவானோம்


       மனிதா மனிதா ஏமனிதா-நாளை
           மரணம் வந்தே நெருங்குமுன்னே
       புனிதா புனிதா என்றுலகு-நாளும்
          போற்ற   ஏதும்     செய்தாயா
       நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
           நலிந்தோர் தமக்குத் தந்தாயா
       இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
           இணையில் இன்பம் எய்திடுவாய்
      
       பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
           பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
       சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
           செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
       துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
           தூய்மையை சற்றே குறைந்தாராய்
       இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
           இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
       
      தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
           தினமும் சேர்த்தது பலகோடி
       சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
           சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
       நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
           நாளும் உண்ணும் உணவறியா
       பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
           பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
      
     அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
           அக்கினி தனக்கே எருவானோம்
      பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
           பொருளை எடுத்துப் போனோமா
      கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
           கையும் காலும் ஆடவில்லை
      மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
           மறப்பின் இல்லை புனிதர்களே!
         
                     புலவர் சா இராமாநுசம்
          

14 comments :

  1. ஒவவொரு மனிதனும் தனக்குள் எழுப்ப வேண்டிய அவசியமான சிந்தனைகள் ஐயா! இறக்கும் போது எடுத்துச் செல்வது எதுவுமில்லை என்பது மனதில் உறைத்தாலே மனிதம் சிறந்து புனிதராகி விடுவர் என்பது மிகச் சரி! வழமை போல அருமையான கருத்தைத் தாங்கிய அழகுத் தமிழ்க் கவிதையை மிக ரசித்தேன்!

    ReplyDelete
  2. எப்போதும் எல்லோரும் மனதில் பதிந்து
    வைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் நிறைந்த
    அருமையான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. ஐயா... கவிதை முவதுமே அத்தனை சிறப்பாக இருக்கின்றது.
    அதில் என் மனதில் பதிந்த வரிகள் இவை.

    // பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
    பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
    சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
    செப்பிட வாழ்பவர் பெருந்தகையே//

    அருமையாகச் சொன்னீர்கள்.

    ஈற்றில் நாம் கொண்டுபோவது எதுவுமே இல்லை.
    பட்டினத்தார் சொன்ன "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்பதை ஞாபகபடுத்தியுள்ளீர்கள். சிறந்த சிந்தனைக் கவிதை ஐயா.

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் !

    ReplyDelete
  4. ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டிய கருத்துக்கள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
    மறப்பின் இல்லை புனிதர்களே!//
    பணத்தைப் பதுக்கி வாழும் பிணத்தைப் போன்றோருக்கு புத்தி வேண்டும் என்பதைச் சொல்வது நன்று அய்யா.

    ReplyDelete
  6. வாழ்வுக் குகந்த அருமையான தத்துவங்கள் அடங்கிய
    கவிதை .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .

    ReplyDelete
  7. என் போன்றோருக்கு மிக அவசியம் தான் அய்யா இந்த படைப்பு ..

    ReplyDelete
  8. தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
    தினமும் சேர்த்தது பலகோடி
    சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
    சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
    நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
    நாளும் உண்ணும் உணவறியா
    பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
    பணம்பெரின் இல்லை சுகவாழ்வே//

    மனிதர்கள் உணரவேண்டிய பொன்னான வரிகள்...!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...