Saturday, March 30, 2013

தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl




தனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத்

     தமிழரை ஏமாற்ற வேண்டாம் நன்றேl

இனிஈழம் வாழ்நாளின் நோக்கம் என்றே-மேலும்

    இயம்பாதீர்! கலைந்தது வேடம் நன்றே


கனிகேட்டு காய்கவர நினைத்தல் தீதே-உரிய

    காரணம்தான் யாமறியோம் சொல்வீர் யாதே

பனிபட்டு பூக்கருகி உதிரல் போல-ஏனோ

    பதில்சொல்ல இயலாது விழிப்பீர் சால


உண்மையான எண்ணமுடன் கேட்க வேண்டும்-ஈழம்

    ஓட்டுக்கே கேட்பவரை ஒதுக்க வேண்டும்!

வெண்மைமிகு உள்ளமுடன் செயலும் வேண்டும்-மிக

     வேகமுடன் அதற்காக முயல வேண்டும்!


வெம்பித்தான் கிடக்கின்றார் ஈழக் குடிகள்-அவர்

    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்!

நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்

     நாடகமா..?என்றேதான் சொல்வார் மீண்டும்!


அடிபட்டார் திட்டுவதும் இயல்பு தானே-இதை

    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!

கொடிகட்டி ஆள்வதற்கே ஈழம் என்றே-எவர்

    குரல்கொடுக்க வந்தாலும் ஒழிப்போம் நன்றே!


உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

   உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும்  தேடிவர வழிதான்! விண்டோம்!



ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாய் சேரின்-மேலும்

    உலகத்து தமிழர்களும் ஓங்கக் கூறின்

கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-படு

    கிழவன்நான் சொல்வது பொய்யா? இல்லை!


எதிர்காலம் கயவர்களை காட்டி விடுமே-அந்த

    எத்தர்களின் வாழ்வு மேலும் கெடுமே!

புதிரல்ல! புரிந்துவிடும் காலம் செல்ல-இது

    பிழையெனில் பொறுத்திடுக! ஈழம் வெல்ல!


                         புலவர் சா இராமாநுசம்



12 comments :

  1. //இதை
    அரசியலாய் ஆக்கினால் அனைத்தும் வீணே!//

    உண்மைதான் ஐயா. அரசியலவாதிகள் இதை புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. அனைவரும் குரலும் ஒற்றுமையாக ஓங்கி ஒலிக்க வேண்டும்...

    udanz ஓட்டுப்பட்டை / லோகோ எடுத்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  3. கருத்திட்ட வரும் நண்பர்களுக்கு :

    நண்பர்களின் பல தளங்களுக்கு செல்ல முடியவில்லையா...? udanz இணைத்துள்ள எந்த தளத்திலும் உங்களால் செல்ல முடியாது... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது... Malware என்று வரும்... சரியானவுடன் (??????) இவைகளை இணைத்துக் கொள்ளலாமா...? வேண்டாமா...? உங்கள் விருப்பம்...

    தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... எப்படி...? :-

    மேலும் விவரங்களுக்கு : http://facebook.com/dindiguldhanabalan

    அன்புடன் DD
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  4. அருமையான கவிதை ஐயா. ..

    //உலகத்து நாடுகளின் கவனம் நன்றே-ஈழம்

    உருவாக ஏற்றதொரு சூழல் இன்றே!

    திலகம்போல் தெளிவாக மிளிரக் கண்டோம்-வெற்றி

    தேவதையும் தேடிவர வழிதான்! விண்டோம்!//

    மனதில் தெம்புவரத் தந்தீர்கள் அழகு வரிகளில். மிகமிகச் சிறப்பாக இருக்கிறது கவிதை.

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  5. அனைத்துத் தமிழர்களின் குரலும் ஓங்கி ஒலித்திட வேண்டுமென்ற உங்களின் கவிதைக் குரல் அழுத்தமாக ஒலித்திருக்கிறது. மிக மிக உண்மைதான் ஐயா!

    ReplyDelete
  6. //வெம்பித் தான் கிடக்கிறனர் ஈழக்குடிகள்-அவர்
    வேதனைக்கு வைக்காதீர் மேலும் வெடிகள்
    நம்பிக்கை வரும்படியாய் செயலும் வேண்டும்-எனில்
    நாடகமா என்றே தான் சொல்வார் மீண்டும்//
    ஈழத்தமிழர் மனநிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள் ஐயா

    ReplyDelete
  7. கிட்டிவிடும் ஈழம்தான் ஐயம் இல்லை!-//
    நெஞ்சம் குளிர்கிறது. படிக்கும் போதே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...