Monday, July 27, 2015

சின்னப் பையன் வருவானே-தினமும் செய்தித் தாளும் தருவானே!



சின்னப் பையன் வருவானே-தினமும்
செய்தித் தாளும் தருவானே!
சன்னல் வழியும் எறிவானே –கதவு
சாத்திட குரலும் தருவானே!
இன்னல் ஏழையாய் பிறந்ததுவா-பிஞ்சு
இளமைக்கு அந்தோ சிறப்பிதுவா!
என்னை மறந்து சிந்தித்தேன்-படைத்த
இறைவனை எண்ணி நிந்தித்தேன்!


பள்ளிச் செல்லும் வயதன்றோ-தினம்
பாடம் படிக்கும் வயதன்றோ!?
துள்ளி ஆடும் வயதன்றோ-தோழன்
துரத்த ஓடும் வயதன்றோ!
அள்ளிய செய்தித் தாளோடும்-நஞ்சி
அறுத்த செருப்புக் காலோடும்!
தள்ளியே சைக்கிளை வருவானே-நேரம்
தவறின் திட்டும் பெறுவானே!

சட்டம் போட்டும் பயன்தருமா-கல்வி,
சமச்சீர் ஆகும் நிலைவருமா?
இட்டம் போல நடக்கின்றார்-இங்கே
ஏழைகள் முடங்கியே கிடக்கின்றார்!
திட்டம் மட்டுமே போடுகின்றார்-அவர்தம்
தேவைக்கும் அதிலே தேடுகின்றார்!
கொட்டம் போடும் அரசியலே-எங்கும்
கொடிகட்டிப் பறக்குது! நாதியிலே!

இமயம் முதலாய் குமரிவரை-எங்கும்
இருந்திட வேண்டும் ஒரேமுறை
நம்மைஆள தேர்தல்முறை-இன்று
நடைமுறைப் படுத்தும் அந்தமுறை
அமையக் குரலும் தொடுப்பீரே-கல்வி
ஆணையம் அமைத்து கொடுப்பீரே
சமயம் இதுவே முயன்றிடுவீர்-உயர்
சமச்சீர் கல்வி பயின்றிடுவீர்

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. சட்டம் போட்டும் பயன்தருமா-கல்வி,
    சமச்சீர் ஆகும் நிலைவருமா?
    ஏக்கம்தான் மிஞ்சுகிறது ஐயா
    தம +1

    ReplyDelete
  2. கொடுமைதான்! இதனோடு கூட திரைப் படங்களில் நடிக்கும் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  3. சட்டம் போடுவதை விட மக்களாய் திருந்தினால்தான் எதுவும் நடக்கும்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. வேதனை தான் மிஞ்சுகிறது ஐயா...

    ReplyDelete
  5. அருமையான கவிதை...ஐயா! குழந்தைத் தொழிலாளர்களாய் இருக்கும் குழந்தைகள், சீரியலிலும், திரைப்படங்களிலும் நடிக்கும் குழந்தைகள் கூட இந்த வகையறாக்கள்தான் அவர்களையும் இந்தக் கூட்டத்தில் சேர்த்ஹ்டுக் கொள்ளலாம் ஐயா. கொடுமைதான் ஐயா...பெற்றோர்கள் திருந்த வேண்டும்..

    ReplyDelete
  6. என்று மாறும் இந்த நிலை?
    அருமை ஐயா

    ReplyDelete
  7. செய்தித்தாளை மட்டுமல்ல ,கொண்டு வரும் சிறுவனைப் பற்றியும் வாசிக்க வைத்து விட்டீர்கள் :)

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    கவிதையை படித்த போது மனம் உருகியது.. எப்போது மாறும் இந்த நிலை.. அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
    த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அருமை! ஆனால் இந்த நிலை மாறாது அல்ல மாற விடமாடார்கள் என்றே தோன்றுகிறது...

    த. ம.8

    ReplyDelete
  10. நினைத்துப் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. நம் நாட்டில் முடியுமா?

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா!

    நெருடும் கவி பாடி மனதைத் தொட்டீர்கள் ஐயா!

    நலமாக இருக்கின்றீர்களா?
    எனது வலையிலும் வந்து வாழ்த்துத் தந்தீர்கள்.
    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  12. செய்தித் தாள் பற்றிய பழைய நினைவுகள் மனதினில் வந்து போயின.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...