Friday, June 3, 2016

ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?



உண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு
உருவாக வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்!
அண்மையிலே நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்கு
ஆதார மானதென காட்டும் சொல்லாம்!
புண்மைமிகு அரசியலே காரணம் ஆகும் –சாதிப்
புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே போகும்!
வண்மைமிகு சட்டத்தால் பயனே இல்லை! –நாளும்
வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ எல்லை!


ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித
உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
ஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி
அரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்!
ஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா
ஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே!
நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை
நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?

புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. நடைமுறை உண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா

    ReplyDelete
  2. உண்மையை சொல்லும் கவிதை! பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  3. நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...