வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே
வாராக் காரணம் தெரியவில்லை-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே –அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!
நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல-முகநூல்
சென்றது அணுவும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! எழுதுதல், மிகமாட்சி!
புலவர் சா இராமாநுசம்

