Wednesday, May 18, 2011

ஊரறிய உலகறிய உண்மை தன்னை

   ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
      உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
   பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
     பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
   சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
     செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
   வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
     விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா

   தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
      தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
   இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
      இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
   கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
      காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
   பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
      பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
 
  ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
     ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
  ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
     உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
 கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
     கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
 பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
    பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே

 கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
    காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
 மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
    மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
 எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
    ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
 உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
    உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
                                                                                     
           புலவர் சா இராமாநுசம்

2 comments :

  1. புலவர் சா. இராமாநுசம் அவர்களே, இரண்டு கவிதைகளையும் படித்தேன். முள்ளிவாய்க்காலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். ராஜபக்க்ஷேக்கள் ஒருநாள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...