Saturday, August 13, 2011

தேர்தலோ தேர்தல்

தேர்தலின் போது எழுதிய கவிதை

நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாருமிங்கே
வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள
வந்தவர் போடுவார் கொட்டமென
பல்லோரே சேருவார் கூட்டணியே- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டினியே
சொல்வாரே கூசாமல் நாக்குமின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்கமென்றே

தன்னலம் இல்லாதார் ஒன்றுகூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போருமாடி
என்நலம் காப்பதாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந்திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்னவழி

யாராள வந்தாலும்ஊழல்மட்டும்-இங்கே
உருவாகா நிலைகாணும் சூழல்மட்டும்
வாராது ஒருநாளும் உண்மையிது-கடந்த
வராலாறு காட்டிடும்தன்மையிது
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்

கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதியில்லை-தட்டி
கேட்டவர் பெறுவதோபீதியெல்லை
ஓட்டிட போகவே அஞ்சுகின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்சமின்றே

வந்ததேலாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவாரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவாரந்தோ
சிந்தனை செய்திட வேண்டுமுடன்-என
செப்பியே மக்களை தூண்டுமுடன்
வந்தனை கூறியே முடித்தேனதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்தேனதை

                                    புலவர் சா இராமாநுசம்



21 comments :

  1. கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
    கொடிகட்டிப்பறந்திட தங்கலினம்
    போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
    போடவும் தருகின்றார் நோட்டேபல
    கேட்டிட யாரிங்கே நாதியில்லை-தட்டி
    கேட்டவர் பெறுவதோபீதியெல்லை
    ஓட்டிட போகவே அஞ்சுகின்ற-நிலை
    உள்ளதை எண்ணுவீர் கொஞ்சமின்றே///

    உண்மை உண்மை உண்மை ..
    அருமை அருமை
    என்றும் நன்றியுடன் ரியாஸ்

    ReplyDelete
  2. வழமைபோல் அருமை ஐயா....

    ReplyDelete
  3. ///////
    கொள்கை
    பறந்திட தேடுவார் ஓட்டினியே
    சொல்வாரே கூசாமல் நாக்குமின்றே
    /////////


    கொள்கை, கூச்சம, அவமானம், இவைகள் இருந்தால் அரசியல் நன்றாக இருக்குமே தற்போதைய அரசியல்வாதிகளுக்கு இவைகள் கிடையது...

    ReplyDelete
  4. /////
    யாராள வந்தாலும்ஊழல்மட்டும்-இங்கே
    உருவாகா நிலைகாணும் சூழல்மட்டும்
    வாராது ஒருநாளும் உண்மையிது
    ///////////

    ஊழல் செய்யவே இங்கு அரசியல்வதிகள்...

    ReplyDelete
  5. றாட்டுக்கு தேவையான இன்றைய அறிவுரைக்கவிதை வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. என்றுதான் ஒழியுமோ இந்த ஊழல்..

    ReplyDelete
  7. ''...வாக்கு
    போடவும் தருகின்றார் நோட்டேபல
    கேட்டிட யாரிங்கே நாதியில்லை-தட்டி
    கேட்டவர் பெறுவதோபீதியெல்லை
    ஓட்டிட போகவே அஞ்சுகின்ற-நிலை
    உள்ளதை எண்ணுவீர் கொஞ்சமின்றே..''
    Arukai...Sir...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  8. ///சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
    செய்வதே உண்மையில் நமதுகடன்
    போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
    புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்///

    உண்மைதான் ஐயா!
    உலகிற்கே நாகரிகம் கற்றுத் தந்தஇனம் - இப்படி
    உலகம்பார்த்து சிரிக்கும்அளவு சீர்கெடுதுதினம்.

    புரட்சி மலரட்டும், அங்கே புதுமைகள் பூக்கட்டும்!

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  9. அய்யா, நீங்கள் கவிதையில் வடித்துக் காட்டியது நூற்றுக்கு நூறு உண்மை ....நிதர்சனமான உண்மை...வெள்ளையர் போய் கொள்ளையர் கையில் ஆட்சி இருக்கிறது.நல்லமனம் படைத்த,வல்லமையான ஒருவர் வரவேண்டும்.வரலாற்றில் எப்பொழுதாவது ஒருவர் வருவார்.இப்பொழுது அன்னாஹசாரே! வல்லமையான மனதோடு அவரை ஆதரிப்போம்...மாற்றம் வரும்.மாற்றங்கள்தான் மாறாதவை.அவரைப் பற்றி எனது முகநூலில் FACE BOOK ல் எழுதி என் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி உள்ளேன்.அதனை கீழே கொடுத்துள்ளேன்.

    வரலாற்றில் நேர்மையும் நல்ல உள்ளமும் மன உறுதியும் கொண்ட நல்ல மனிதர்கள் எப்பொழுதுதாவதுதான் தோன்றுவார்கள்.இப்பொழுது அன்னாஹசாரே!கொடூர மனமும் குறுக்குப் புத்தியும் நினைத்தால் எதையும் செய்யக்கூடிய அரசியில் வாதிகளுக்கு மத்தியில் இப்படியொருவர் முன் வந்திருப்பது மிகவும் அசாத்தியமானது.இந்தியாவில் லேசாக வெளிச்சம் தெரிகிறது.

    வலுவான லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும்வரை அல்லது அவர் உயிர் உள்ள வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். 16 -8 -11 முதல் உண்ணாவிரதம் இருக்கிறார்.அவரது சின்ன வேண்டுகோள்.அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 15 -8 -11 இரவு 8 மணி முதல் 9 மணி வரை பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள விளக்கை அணைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதைக் கூடவா நம்மால் செய்ய முடியாது; கண்டிப்பாகச் செய்வோம்.நமது ஒற்றுமை கண்டிப்பா..ஒரு நல்ல மாறுதலைக் கொண்டுவரும்.இதனை ஒவ்வொருவரும் தனது நண்பர்களின் FACE BOOKIL இணைக்கவும்.

    விளக்கை அணைப்போம்...வெளிச்சம் பிறக்கட்டும்....

    ReplyDelete
  10. கவிதை அருமை ஐயா.. 
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
    செய்வதே உண்மையில் நமதுகடன்
    போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
    புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்

    அற்புதமான படைப்பு

    ReplyDelete
  12. கவிதைப் பகிர்வு அருமை!

    ReplyDelete
  13. தேர்தல் விழிப்புணர்வு கவிதை கலக்கல் ஐயா

    ReplyDelete
  14. //சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
    செய்வதே உண்மையில் நமதுகடன்
    போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
    புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்//

    சிறப்பான கவிதைக்குள் “மிகச்சிறப்பான” வரிகள் அவை.

    ReplyDelete
  15. //கொடிகட்டிப்பறந்திட தங்கலினம்//

    மதிப்பிற்குரிய ஐயா,

    மேலேயுள்ள வரியில் “லி”-யை கவனியுங்கள்.

    ReplyDelete
  16. தேர்தல் நாடகம் - சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பணத்துக்கு ஆளாய்ப் பறக்கும் நிலை மாற வேண்டும். இலவசம் எதிர்பார்த்து தன்மானம் இழக்கும் மனித மனம் மாறவேண்டும்.யாவும் நாளை மாறும் என்ற நம்பிக்கைகளில் நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. வார்த்தையமைப்பும், கருத்துச்செறிவும் அழகு.

    ReplyDelete
  17. அழகு தமிழ் சொற்களால்
    தொடுத்த இயற்றமிழ் கவிதை.
    தேர்தல் நேரத்தின் ஆனந்த தாண்டவத்தை
    அழகுபட இயற்றி இருக்கிறீர்கள்.

    இன்று முதல் தங்களின் வலைப்பூவை தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  18. இதுநாள் வரை அரசியல் தீயோரால் சீரழிந்தது போதும்.. இனியாவது நல்லவர் முன் வரவேண்டும் அரசியலுக்கு. மக்களுக்கு நல்லது செய்து மக்களின் நம்பிக்கை நிஜமாகவேண்டும் என்ற ஆதங்க வரிகள் மனதை அசைக்கிறது ஐயா....

    தன்னலம் இல்லாத மனிதன் அரசியலுக்கு வரவேண்டும்.. ஊழலை அடியோடு ஒழிக்கவேண்டும்.... பணம் பணமாய் சூட்கேசில் கொண்டு பரிமாறும் காலம் மறைந்து மக்களுக்கென்றே உழைக்க நல்ல மனதுடன் நேர்மை சிந்தனையுடன் யாரேனும் ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையுடன் வரிகள் அமைத்த விதம் சிறப்பு ஐயா..

    அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. கவிதை அருமை ஐயா..
    ...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...