சென்றப் பதிவில் மாற்றமே
செய்தேன் பாரும்! தோற்றமே!
என்றும் எழுதுவேன் விருத்தமே
எழுதினேன் வெண்பா திருத்தமே!
பலரும் அதனை அறியவில்லை
பதிலில்! ஏனோ? தெரியவில்லை!
சிலரில் ஒருவரே வெண்பாவே
செப்பினார்! அருணா ஒண்பாவே!
மாற்றம் வேண்டி மாற்றியதே
மனமே வெண்பா சாற்றியதே!
ஏற்பதோ உங்கள் கையில்தான்
எழுதுவேன் மேலும் பொய்யில்தான்!
முன்பே சிலபேர் கேட்டார்கள்
மொழிந்திட வெண்பா பாட்டாக!
அன்பரே பிடித்தால் கொள்ளுங்கள்
அல்லது என்றால் தள்ளுங்கள்!
செப்பிடின் வெண்பா எளிதல்ல
செய்யுள் இலக்கண மதைச்சொல்ல!
ஒப்பிட வேண்டும் சீர்தோறும்
ஒவ்வொரு சொல்லும் அடிதோறும்!
எழுதுவேன் மேலும் சிலவற்றை
என்னுள் உள்ள மொழிப்பற்றை!
விழுதெனத் தாங்கிப் பிடிப்பீரா
வேரற்று வீழ்ந்திட விடுவீரா!
புலவர் சா இராமாநுசம்