Friday, June 28, 2013

மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும்



மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
   மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும்

தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
   தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்

அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
    அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
     வேதனை மூட்டும் கேள்விசில

தடையது வந்தால் மாறுவதும்-பல
    தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
    நாளும் நடப்பது தோற்றத்தில்

ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
   எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
   உணர்ந்தால் வாரா ஒருதொல்லை

தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
   தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

                               புலவர் சா இராமாநுசம்

25 comments :

  1. /// ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
    உணர்ந்தால் வாரா ஒருதொல்லை ///

    சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்//உண்மைதான்யா நம்மை நாமே மாற்ற வேண்டும்

    ReplyDelete
  3. // கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும் //

    என்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனை காரணங்கள்.

    ReplyDelete
  4. ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
    சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

    பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
    நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

    சிறப்பான வரிகள் கண்டு மனம் நெகிழ்ந்தது
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்!

    எத்தனை உண்மையான வார்தைகள் ஐயா! அருமை!

    ஒவ்வொருத்தர் மனத்திலும் உள்ளதை அப்படியே பாவினால் படம்பிடித்துப் போட்டுவிட்டீர்கள்!

    அத்தனையையும் உள்ளத்துள் போட்டு அமுக்கி பெருமூச்சு மட்டுமே பதிலாய் வருகிறது...

    பணிவன்பான வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.7

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  7. முகநூலில் படித்தேன் ஐயா. மிக சிறப்பான கவிதை

    ReplyDelete
  8. தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
    தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
    இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

    மாற்றம் ஒன்றே மாறாதது ..!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  9. மீள் பதிவு என்றாலும்
    என்றென்றும் மீளமுடியா பதிவிது.

    வணங்குகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  10. தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
    தடுப்பின் போரே தொடுக்கின்றோம்

    உண்மை அய்யா. என்று மாறுமோ இந்நிலை

    ReplyDelete
  11. மிக்க நன்றி!

    ReplyDelete
  12. வரிகள் ஒவ்வொன்றும் அழகானது, ஆழமானது. கவிதை வரிகளையே தலைப்பிட்டது சிறப்பு. நன்றி அய்யா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...